July 26, 2016

மாயமான விமானத்தை கடலுக்கு அடியில் தேட வருகிறது நீர்மூழ்கி!

மாயமான இராணுவ விமானம் பற்றி இதுவரை எந்தவித தகவலும் தெரியவில்லை அதனால், அடுத்தக்கட்டமாக, கடலுக்கு அடியில் சென்று தேடும் பணி தொடங்கப்படும் என்று இந்திய கடலோர காவல்படை தென்மண்டல ஐ.ஜி. தெரிவித்துள்ளார்.


சென்னை தாம்பரம் விமானப் படை தளத்திலிருந்து கடந்த வெள்ளிக்கிழமை காலை 8.30 மணிக்கு 29 பேருடன் புறப்பட்ட ஏ.என் 32 ரக விமானம் வங்கக் கடலில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென மாயமானது.

இதையடுத்து, மாயமான விமானத்தை தேடும்பணி கடந்த நான்கு நாள்களாக தீவிரமாக நடந்து வருகிறது. ஆனாலும், மாயமான விமானம் பற்றி இதுவரை எந்தவித தகவல்களும், தடயங்களும் கிடைக்கவில்லை.

இந்நிலையில், மாயமான விமானத்தை தேடும் பணிக்கு தலைமையேற்றுள்ள இந்திய கடலோர காவல்படையின் தென்மண்டல ஐ.ஜி. ராஜன் பர்கோத்ரா சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,

காணாமல் போன விமானத்தைத் தேடும் பணியில் கடந்த 4 நாட்களாக விமானப்படை, கப்பல் படை, கடலோர காவல்படை ஆகியவை இணைந்து மேற்கொள்கின்றன.

சென்னையில் இருந்து அந்தமான் செல்லும் கப்பல்களுக்கு விமானம் காணாமல் போனது பற்றிய தகவல்களை கொடுத்திருக்கிறோம். இந்தப் பாதையிலும், பக்கவாட்டிலும் விமானங்களும், கப்பல்களும் தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

சென்னையில் இருந்து கிழக்கு திசையில் 150 கடல்மைல் தொலைவில் அந்த விமானம் காணாமல் போனது. இந்தத் தேடுதல் பணியில் இதுவரை எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.

உயிருடன் இருப்பவரோ அல்லது விமானத்தின் உடைந்த பாகங்களோ தென்படவில்லை.தேடுதல் பணிக்கான இடம் படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

கப்பல் மூலம் தேடப்படும் பரப்பளவு 14,400 சதுர கடல்மைல் ஆகும். விமானம் மூலம் தேடப்படும் கடலின் பரப்பளவு 60 ஆயிரம் சதுர கடல்மைல் ஆகும். தேடும் பணிக்கு இது மிகப் பெரிய அளவுதான். ஆனாலும் அனைத்து திசைகளிலும் தேடுதலை நடத்த வேண்டியுள்ளது.

கப்பல் படையின் 13 கப்பல்கள், கடலோர காவல் படையின் 2 கப்பல்கள் தேடுதல் பணியில் உள்ளன. அந்தமான் போர்ட் பிளேரில் இருந்தும் கப்பல்கள் வந்து தேடுகின்றன.தேடிய இடங்களில் கிடைத்த பொருட்களை சேகரித்து ஆய்வு நடத்தப்பட்டது.

ஆனால் அவை காணாமல் போன விமானத்தின் பாகங்கள் அல்ல என்று கண்டறியப்பட்டது. ஒரு பெட்டி, மரக் கட்டைகள், சிலிண்டர் போன்றவை கண்டெடுக்கப்பட்டாலும் அவை மீன்பிடி படகின் பாகங்கள் என்று ஆய்வில் தெரிய வந்தது.

அதே இடத்தில் தொடர்ந்து தேடுதல் பணி நடக்கிறது. தேடுதல் பணியில் உள்ள கப்பல் மற்றும் விமானங்களில் இருந்து கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் அந்தந்த பகுதிகளுக்கு சென்று தேடி வருகிறோம்.இந்த தேடுதல் பணிக்கு இஸ்ரோ நிறுவனம், என்.ஐ.ஓ.டி. உள்பட பல நிறுவனங்களின் உதவியை நாடியிருக்கிறோம்.

தேடுதல் பணியின்போது பெரிய அளவில் மோசமான வானிலை உருவாகவில்லை. எனவே அந்தப் பணியில் எந்தவித குறைபாடும் நேரவில்லை. ஒரே ஒரு பிரச்னை என்னவென்றால் இ.எல்.டி. (எமர்ஜென்சி லொக்கேட்டர் டிரான்ஸ்மிட்டர்) என்ற கருவியில் இருந்து கிடைக்க வேண்டிய சிக்னல் கிடைக்கவில்லை.

அதுகிடைத்தால் மட்டுமே எங்களின் தேடும் பணி எளிதாகும்.கடந்த சில மாதங்களுக்கு முன் காணாமல் போன விமானம் சம்பவங்களில்கூட இ.எல்.டி. கருவி வேலை செய்யவில்லை. இது கவலையளிக்கும் விஷயம். இதில் அதிக கவனம் செலுத்துவது அவசியம்.

ஒன்றுக்கு மேற்பட்ட சம்பவங்களில் இ.எல்.டி. செயல்படாமல் போனது உண்மைதான். இதிலுள்ள குறைபாடு அதன் தயாரிப்பாளர்களுக்குத் தெரிந்திருக்கலாம்.கடல் மட்டத்தில் இருந்து யாரையும் அல்லது விமானத்தின் பாகங்களையும் கண்டுபிடிக்க முடியாமல் போய்விட்டால், அடுத்ததாக கடலுக்கு அடியில் சென்று தேடும் பணியை தொடர வேண்டும்.

இதற்காக நீர்மூழ்கிக் கப்பலை, கப்பல் படை அங்கு நிறுத்தப்பட்டு இருக்கிறது. எங்களுடன் பணியாற்றிய முத்துக்கிருஷ்ணன் என்பவர் மாயமான அந்த விமானத்தில் இருந்திருக்கிறார். மற்ற நபர்களின் பட்டியலை விமானப் படைதான் வெளியிட வேண்டும்.

இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு தொழில்நுட்ப முகமைகளை நாங்கள் தொடர்பு கொண்டு வருகிறோம். கடைசியாக சிக்னல் எங்கிருந்து கிடைத்தது என்பதுபோன்ற தகவல் பெறப்பட்டால், கடலுக்குள் தேடும் இடத்தை சரியாக நிர்ணயிக்க முடியும். கடலிலோ அல்லது தரையிலோ விமானம் விழுந்தால், அதிலிருக்கும் டிரான்ஸ்மிட்டர் கருவிகள் செயல்படும்.

விமானம் காணமல் போனதற்கான காரணத்தை நாங்கள் கூற முடியாது. கடந்த ஒரு ஆண்டில் இதுபோல் 2 சம்பவங்கள் நடந்துள்ளன. இரண்டுமே ரேடாரின் கண்காணிப்பில் இருந்து மாயமாகி இருக்கின்றன. இரண்டு விமானத்திலும் இருந்தவர்களிடம் இருந்து கடைசி நேரத் தகவல்கள் வரவில்லை.

மேலும், என்.ஐ.ஓ.டி. நிறுவனத்தின் கப்பலை தேடும் பணிக்கு கேட்டிருக்கிறோம். அது மொரிஷியசில் இருந்து தூத்துக்குடிக்கு வந்து கொண்டிருக்கிறது. கடலடியில் மேற்கொள்ளப்படும் தேடுதலுக்கு அதுவும் பயன்படுத்தப்படும்.

கடல் மேல் மட்டத்தில் எந்தவொரு உடைந்த பாகமும் காணப்படவில்லை என்பதால், விமானம் விழுந்திருக்க வாய்ப்புள்ள இடத்தை துல்லியமாக கணக்கிட முடியவில்லை.

ஆனாலும், விமானத்தில் இருந்து கடைசியாக எங்களிடம் தொடர்பு கொண்ட பகுதியை தேர்வு செய்து அங்கு தேடமுடியும்.

விமானத்தைத் தேடும் பணிக்கு காலவரையறை ஏதும் இதுவரை நிர்ணயிக்கப்படவில்லை என்றார்.

No comments:

Post a Comment