June 23, 2016

வேலியே பயிரை மேய்கின்ற நிலையா – பள்ளி மாணவர்கள் மீதான துஸ்பிரயோக நிகழ்வை வன்மையாக கண்டிக்கின்றேன்!

யாழ்ப்பாணம் பெரியபுலம் மகாவித்தியாலயத்தில் பாடசாலை மாணவிகளின் மீது மேற்கொள்ளப்பட்ட துஸ்பிரயோக நிகழ்வை வன்மையாக
கண்டிப்பதுடன் குற்றம் புரிந்தோர் எவராக இருந்தாலும் அவர்களை உடனடியாக இனங்கண்டு தண்டனையை வழங்கி எமது சமூகத்தில் இடம்பெறும் இவ்வாறான குற்றச்செயல்களை தடுத்து நிறுத்தி எமது சமூகத்தின் எதிர்கால சந்ததியினரை பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்காந்தராசா அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இவ்வாரம் யாழ்ப்பாணம் பெரியபுலம் மகாவித்தியாலயததில் பாடசாலை ஆசிரியர் ஒருவரால் தரம் ஏழில் கல்விபயிலும் மாணவிகளின் மீது துஷ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வானது வேலியே பயிரை மேய்கின்ற துர்ப்பாக்கிய நிலையை காட்டுகின்றது எமது இனத்தின் விடுதலைப்போராட்ட வரலாற்றில் பாடசாலை மாணவர்களதும் பெண்களினதும் பங்களிப்பு என்பது அளப்பரியது இவ்வாறான எமது சமூகத்தில் பாடசாலை மாணவிகளின் மீதான துஷ்பிரயோக நிகழ்வுகள் இடம்பெறுவதானது எமது சமூகம் எதிர்காலத்தில் எப்பாதை நோக்கி பயணிக்கப்போகின்றது என்ற அச்சத்தினை தோற்றுவித்துள்ளது.

கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக எமது சமூகம் உரிமைகளுக்காகவும் சுதந்திரங்களுக்காகவும் சிங்கள பேரினவாத சக்திகளிற்கு எதிராக போராடிய நாம் இன்று எமது சமூகத்திற்குள்ளேயே இருக்கின்ற சமூகவிரோத சக்திகளுக்கெதிராக போராடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது புங்குடுதீவு வித்தியா வவுனியா ஹரிஸ்ணவி என எம் பள்ளி மாணவச்செல்வங்களை பறிகொடுத்து அவற்றுக்கு நீதி கிடைக்கமுன்னரே எமது பகுதியில் மேலும் ஓர் பாடசாலையில் இடம்பெற்றுள்ள இந்நிகழ்வானது பெற்றோர்கள் மத்தியில் பாரிய அச்சத்தினை தோற்றுவித்துள்ளது.

மணவர்களை பெற்றோர் படசாலைக்கு அனுப்பும் போது பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்களை நம்பியே அனுப்பிவிடுகின்றனர்.

எமது சமூகமானது தாய் தந்தையர்க்கு அடுத்ததாக குருவாக போற்றப்படும் ஆசிரியர்களையே போற்றி வணங்குகின்றது இவ்வாறான பெருமைமிகு இடம் வகிக்கும் ஆசிரியத்துவத்தை கலங்கப்படுத்தும் வகையில் செயற்படுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.

பாடசாலைகளை கோவில்களாக பேணும் எமது சமூகத்தில் பாடசாலைகளிலேயே இவ்வாறான நிகழ்வுகளை நடைபெறும் இடங்களாக மாறிவருகின்றமை வேதனையளிக்கின்றது.

பெண்களின் உரிமைகளை கடந்தகாலத்தில் உச்சமாக பேணிபாதுகாத்த எமது சமூகத்தின் மனநிலை மீளவும் உருவாகவேண்டும் பாடசாலை மாணவர்கள் மீதான பாலியல் வன்புணர்வுச்சம்பவங்கள் மற்றும் துஷ்பிரயோக அநீதிகளுக்கெதிராக அனைவரும் ஒன்றிணைந்து குரல்கொடுக்கவேண்டும் பெண்களினதும் சிறுவர்களினதும் உரிமைகள் பேணிபாதுகாக்கப்பட் வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment