June 10, 2016

மயிலிட்டியிலுள்ள ஆயுதக் கிடங்கு வெடித்தால் நிலைமை என்னாகும்?கேட்கிறார் முதல்வர் சி.வி!

கொஸ்கமவில் நடந்தது போன்று மயிலிட்டியில் நடந்தால் குறித்த பகுதியே பாழாய் போய்விடும் என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.


வவுனியா உள்ளூராட்சி திணைக்களத்தின் அதிகாரிகளுடன் வவுனியா உள்ளுராட்சி திணைக்களத்தின் கேட்போர்கூடத்தில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,

“வட பகுதியில் உள்ள இராணுவ முகாம் தொடர்பாக இராணுவ அதிகாரிகளுடன் பேசியிருக்கின்றேன். இராணுவத்தை முற்றுமுழுதாக அகற்றவேண்டும் என்பதையே நான் தொடக்கத்தில் இருந்து கூறி வருகின்றேன். ஒரு காலத்தில் இலங்கையின் மீன் தேவையில் மூன்றில் ஒரு பங்கை மயிலிட்டியில் இருந்து வழங்கிவந்தோம்.

ஆனால் தற்போது அதனை முழுமையாக முடியுள்ளார்கள். இதனை திறக்குமாறு சொன்னபோது பல காரணங்களை கூறிவந்து கடைசியாக ஆயுதக்கிடங்கு அங்கு உள்ளதாக காரணம் சொல்லப்பட்டுள்ளது.

எனவே அதனை மயிலிட்டியில் இருந்து மாற்றுமாறு இராணுவ அதிகாரி மகேஸ் சேனநாயக்கவுக்கு நான் கூறியிருந்தேன். அதற்கு சில காலம் எடுக்கும் என ஒரு மாதத்திற்கு முன்னர் சொல்லியிருக்கின்றார்.

ஆகவே கொஸ்கம போன்று இங்கு நடந்து விட்டால் எங்களுடைய இடங்கள் எல்லாம் பாழாய்ப் போய்விடும். எனவே நடந்தது வருந்தத்தக்கது என்றாலும் எங்களுக்கு நல்லதொரு படிப்பினை. மக்கள் இருக்கும் இடங்களில் இவ்வாறான ஆயுதக் கிடங்குகளை வைப்பதனால் வரும் பாதிப்பை இதில் இருந்து நாம் அறிந்துகொள்ளக்கூடியதாக உள்ளது.

என்னவாக இருந்தாலும் ஆயதக்கிடங்கை மயிலிட்டியில் வைத்துக்கொண்டு எங்களுக்கு உரிய இயற்கையான துறைமுகத்தை செயற்படாமல் வைப்பது அநியாயமான ஒன்று. ஆகவே இதற்கு நாம் எங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றோம்.” என்றும கூறினார்.

No comments:

Post a Comment