May 25, 2016

பாலசந்திரன், இசைப்பிரியா படுகொலை விசாரணை இழுபறி!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இளைய புதல்வரான பாலச்சந்திரன்,
மற்றும் தமிழீழ தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் இசைப்பிரியா ஆகியோரின் படுகொலை தொடர்பாக விசாரணை நடத்துவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக காணாமல் போனோர் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் பரணக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இறுதிக்கட்ட யுத்ததின் போது இருவரும் படுகொலை செய்யப்பட்டமை குறித்து விசாரணை மேற்கொள்வதிலேயே சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த கொலைச் சம்பவங்கள் தொடர்பாக இதுவரை இருவரிடம் வாக்கு மூலம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ள நிலையில் ஆணைக்குழுவை கலைப்பதற்குரிய நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுகின்றன.

இதனால் விசாரணையை பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அந்த ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வல் பரணகம தெரிவித்துள்ளார்.

அத்துடன் காணாமல் போனவர்கள் தொடர்பில் முறைப்பாடுகளை பதிவு செய்யும் நடவடிக்கைகள் முடிவிற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் மட்டக்களப்பில் நடைபெறவிருந்த விசாரணைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மெக்ஸ்வல் பரணகம தெரிவித்துள்ளார்.

இதேவேளை, 1983 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் காணாமல் போனவர்கள் தொடர்பாக விசாரணை மேற்கொள்வதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் குறித்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த ஆணைக்குழுவின் ஆயுட் காலத்தை தற்போதைய ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன நீடித்துள்ள நிலையில் பரணகம ஆணைக்குழுவை கலைக்கும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment