September 14, 2015

ரணிலின் இந்திய விஜயத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம்!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு இந்திய விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பெங்களூரில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டம் (ஞாயிற்றுக்கிழமை) கர்நாடகா தமிழ் மக்கள் இயக்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் நல்லிணக்கம், நல்லாட்சி, ஜனநாயகம் என்பவற்றை ஏற்படுத்துவதற்கும், இலங்கை மக்களின் பாதுகாப்பிற்காகவும் அமெரிக்க அரசாங்கம் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படுவதுடன், உதவிகளை வழங்கும் என இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த மத்திய மற்றும் தெற்காசிய நாடுகளுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலாளர் நிஷா பிஷ்வால் தெரிவித்திருந்தார்.
அத்துடன், இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படவுள்ள உள்ளக விசாரணைக்கு ஆதரவு வழங்கவுள்ளதாகவும் அவர் இதன்போது தெரிவித்திருந்தார்.
இதற்கு தெரிவித்து தமிழகம் உள்ளிட்ட இந்தியாவின் பல பகுதிகளிலும் தொடர்ச்சியாக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறாதொரு சூழ்நிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொண்டு நாளைய தினம்(திங்கட்கிழமை) இந்தியாவிற்கு செல்லவுள்ளார்.
இந்நிலையிலேயே இவரது இந்திய விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக்குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான சர்வதேச விசாரணைக்கு இந்திய மத்திய அரசாங்கம் ஆதரவு வழங்க வேண்டும் எனவும் ஆர்ப்பாட்ட காரர்கள் இதன்போது கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், சர்வதேச விசாரணை தவிர்ந்த உள்ளக விசாரணைக்கு இந்திய மத்திய அரசாங்கம் ஆதரவு வழங்க கூடாது எனவும் அவர்கள் இதன்போது கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் நாளைய தினம்(திங்கட்கிழமை) ஆரம்பமாகவுள்ள நிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் இந்திய பயணமானது மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது.

No comments:

Post a Comment