September 26, 2015

ஈகம் சிலிர்த்திட – உயிர் யாகம் வளர்த்தவன்(வீடியோ இணைப்பு)

தாகம் தமிழீழம் ஒன்றே என்று
தாகம் மறந்து நீர் துறந்தாயே – பெரு
யாகம் வளர்த்து வயிற்றினில் – பசித்
தீயினை மூட்டி மூசவிட்டாயே.
வேகம் கொண்ட வேங்கைப்புலி – இலட்சிய

வேட்கைதனை விழுதெனப் பற்றி
ஈகம் ஒருமுறை சிலிர்த்து எழுந்திட – உன்
தேகம் எரித்துச் சிதையிலிட்டாயே
வேந்தன் கரிகாலன் தொடக்கிய வேள்வியை
வேண்டித் தொடர்ந்தாய் விடுதலை தேடியே
அண்ணன் குணங்கொண்ட தம்பியாய் அன்று
ஆவி துடிக்க அகிம்சையிற் குதித்தாயே
போர்க்களம் பலவற்றில் புயலென நின்றவன் – விழுப்
புண்ணேந்தி வயிற்றிலே வலிகண்டு நிமிர்ந்தவன்
வீரத்தழும்பொன்று கையிலும் கொண்டவன்
வீரியம் மட்டும் குன்றிடாப் புலியவன்
ஊரெழு மண்ணில் தோன்றிய ஊற்றவன்
பெயர் சொல்லப் பிறந்த எழுச்சியின் நாற்றவன்
கார்த்திகை இருபத்தேழு கண்திறந்த காவியன்
புதுப் போரியல் காட்டி புரட்சித்த பார்த்தீபன்.
இளமையின் துடிப்பைத் தமிழர்க்காய்த் தந்தாய்
இனிய உன் நாட்கள் தமிழுக்கே என்றாய்
படித்த வைத்தியப் படிப்பினை விட்டு
பாயும் புலியணிப் பயிற்சிகள் பெற்றாய்
நடை உடை பாவனை அனைத்திலும் எளிமை
உடையவனாக நீ வலம் வந்தாய் – வலிமை
படைத்த உன் செயல்களால் வளர்ந்தாய்
கிடைத்தற்கரியவன் ஆனாய் அண்ணா
அரசியல் என்பது மக்கள் தொண்டென்றாய்
அருகிருந்து அவர்களின் துயர்கள் துடைத்தாய்
பெரும் பெரும் குழப்பமும் இலகுவிற் தீர்த்தாய்
சிறியவனாகிலும் “பெருமகன்” ஆனாய்.
மேடையில் முழங்கிடும் உன் குரல் கேட்க
ஓடிவந்திடும் யாழ்மண்ணே திரளாய்
வாடிய முகங்களும் பூத்திடும் உன்னாலே – ஊருக்கு
ஓடி ஓடி நீ உழைத்தாய் தன்னாலே
கிட்டண்ணாவின் கிட்டிய தோழனே – உந்தன்
நட்புக் கிட்டிட மகிழ்ந்தனர் தோழரே
புன்னகை ததும்பிடும் புலிமகன் திலீபனே
உன்னை இழந்திட ஏற்குமோ தமிழத் தேசமே
நல்லூர்க்கந்தன் வடக்கு வீதியில்
நம்பிக்கையோடு தொடங்கினாய் நோன்பு
கடலென மக்கள் கூட்டம் உன்முன்பு
கண்ணீர் சொரிந்தது கலங்கித்தவித்தது
கவிமழையால் உனைத் தழுவியே நின்றது
கந்தனை வேண்டியே விரதங்கள் தொடர்ந்தது
விரைவினில் நீ நலம்பெறவென்றே
விண்ணும் பொழிந்தது மண்ணும் கரைந்தது
உயிர் பெற்றதெதற்கு ஊற்றிடத்தானோ – நீ
உடல் கொண்டதெதற்கு உருகிடத்தானோ – நீ
உரைத்தவையெல்லாம் உரிமையின் கவியோ
உறுதியின் உருவே நீ புரட்சியின் குயிலோ
மறப்போர்ப்படையில் நீ ஒரு தனிப்படை
மானம் காத்திட செய்தாய் உயிர்க்கொடை
அறப்போர் தொடுத்து அமைதியாய் அணைந்தாயோ
அகிம்சையே வெட்கி அடங்க உறைந்தாயோ
சுயநலனுக்காய் நீ கேட்டதேதுமில்லை
சுடரும் வீரனே நீ தலைவனின் உயரிய பிள்ளை
சுய நினைவகன்றபோதும் சொட்டு நீர் கேட்கவில்லை – உன் வாயோ
“சுதந்திர தமிழீழம் மலரட்டும்” என்பதை மறக்கவில்லை
இந்திய நாடே இழிசெயல் செய்தது – குருதி
சிந்திய எங்களைக் குறைத்து மதித்தது – தமிழ்ச்
சந்ததி தன்னை அழிக்க நினைத்தது
வெந்திட்ட புண்ணிலே வேலினை எறிந்தது
அகிம்சையின் தேசமே எங்கள் திலீபனைக் கொன்றது
ஐந்தம்சக் கோரிக்கையைத் தீயிலே போட்டது
வரலாற்றில் அழியாப் பிழையினைப் புரிந்தது
வஞ்சகத்தாலே தான் விலை போனது
சத்தியம் தோற்று சாவிலே வீழ்ந்தது – எம்
சத்தியன் நெஞ்சமோ சலனத்தைக் கடந்தது
சத்திய யுத்தத்தை சாத்வீக வழியிலே
சாத்தியமாக்கினான் சயனித்தான் வீரமகன்.
காலனை வென்ற கம்பீரத் தகையோனே
காலங்கள் சொல்லும் உன்கதை திலீபனே
ஞாலத்தில் உன்போல் ஈகயர் காண்கிலோம்
ஞாயிறைப் போன்றனன் நீயேதான் அண்ணனே
அறுதியும் உறுதியும் எம்வசம் தந்து
ஆகுதியாகி நீ மடிந்தாயே அன்று
மறுகிடும் மனங்களில் தீ வளர்க்கின்றோம்
மறுபடி மறுபடி முயல்கிறோம் விரைகிறோம்
விடுதலை விடுதலை என்றே நெஞ்சம்
விம்மித் தணிந்திடும் ஒவ்வோர் கணமும்
விடியலின் ஒளியாகி வழிகாட்டும் திலீபா நீ
விரும்பிய விடுதலை பெறும் வரை ஓயோம்
மானசீகமாய் நீ நேசித்த சுதந்திரம்
மாற்றங்களோடு நிச்சயம் மலரும்
மாண்ட எம் வீரர் கனவு பலிக்கும்
வேண்டிடும் தாய்மடி ஒரு நாட்புலரும்
பிரளயம் ஒன்று வெடிக்கும் – பகை
பிளந்து தமிழினம் வெற்றி படைக்கும்
களத்திடை வீரம் துடிக்கும் – புலிப்படை
கயவர்கள் கொட்டத்தை உடைக்கும் – திலீபன் நீ
முழங்கிய புரட்சி வெடிக்கும் – மக்கள்
எழுச்சியில் சிங்களம் புதுக்கதை படிக்கும்
விழுந்தவர் எழுந்திட விடிவெள்ளி முளைக்கும் – தலைவர்
வழித்தடம் பற்றியே தமிழீழம் கிடைக்கும்
“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”
கலைமகள்

No comments:

Post a Comment