July 11, 2015

தமிழ் முற்போக்கு கூட்டணி, ஐதேக கூட்டமைப்பில் ஆறு மாவட்டங்களில் போட்டி!

தமிழ் முற்போக்கு கூட்டணி வேட்பாளர்கள், ஐக்கிய தேசிய கூட்டமைப்பில் யானை சின்னத்தில் போட்டியிடும் முகமாக நுவரெலியா, கொழும்பு, கண்டி, பதுளை, இரத்தினபுரி, கம்பஹா ஆகிய
மாவட்ட வேட்புமனுக்களில் கையெழுத்திட்டுள்ளனர். இன்று பிற்பகல் கையெழுத்திடும் நிகழ்வு ஐக்கிய தேசிய கட்சி தலைமையகத்தில் இடம் பெற்றது.
இதன்படி கூட்டணி தலைவரும், ஜனநாயக மக்கள் முன்னணி தலைவருமான மனோ கணேசன் கொழும்பு மாவட்ட வேட்பு மனுவிலும், கூட்டணி பிரதி தலைவர்களான தொழிலாளர் தேசிய முன்னணி தலைவர் பழனி திகாம்பரம், மலையக மக்கள் முன்னணி தலைவர் வி. இராதாகிருஷ்ணன் ஆகியோர் நுவரெலியா மாவட்ட வேட்பு மனுவிலும் கையெழுத்திட்டனர்.
அத்துடன், ஜனநாயக மக்கள் முன்னணி உப செயலாளரும், கூட்டணி நிர்வாக செயலாளருமான சண். குகவரதன் கொழும்பு மாவட்டத்திலும், தொழிலாளர் தேசிய முன்னணி செயலாளரும், கூட்டணி நிதி செயலாளருமான எம். திலகராஜ் நுவரெலியா மாவட்டத்திலும், ஜனநாயக மக்கள் முன்னணி உபதலைவரும், கூட்டணி இணை தவிசாளருமான எம். வேலு குமார் கண்டி மாவட்டத்திலும், மலையக மக்கள் முன்னணி நிதி செயலாளரும், கூட்டணி இணை உபதலைவருமான ஏ. அரவிந்தகுமார் பதுளை மாவட்டத்திலும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் சார்பாக ஐக்கிய தேசிய கூட்டமைப்பில் யானை சின்னத்தில் போட்டியிட வேட்புமனுக்களில் கையெழுத்திட்டனர்.
இதற்கு மேலதிகமாக ஜனநாயக மக்கள் முன்னணியின் இரத்தினபுரி மாவட்ட பிரதம செயலாளர் எம். சந்திரகுமார் இரத்தினபுரி மாவட்டத்திலும், கம்பஹா மாவட்ட பிரதம செயலாளர் எஸ். சசிகுமார் கம்பஹா மாவட்டத்திலும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் சார்பாக ஐக்கிய தேசிய கூட்டமைப்பில் யானை சின்னத்தில் போட்டியிட வேட்புமனுக்களில் கையெழுத்திட்டனர்.

No comments:

Post a Comment