July 11, 2015

தேர்தல் வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கு பிணை கிடையாது! நீதிபதி இளஞ்செழியன்!

நாட்டில் பொதுத் தேர்தல் நடைபெறுகின்ற சூழலில், தேர்தல் வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கு தேர்தல் காலம் முடியும் வரை பிணை கிடையாது. ஒழுக்கமில்லாத வேட்பாளர்களுக்கும் வாக்காளர்களுக்கும் சில வேளை வாக்களிக்கும் உரிமையும் மறுக்கப்படும். இவ்வாறு தெரிவித்துள்ளார்
யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன்.
விரைவாக விசாரணை செய்து பிணை வழங்க வேண்டும் என கோரி சமர்ப்பிக்கப்பட்ட மனு ஒன்றைப் பார்வையிட்டதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட பிணை கோரி சமர்ப்பிக்கப்பட்ட மனு நேற்று வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது – தேர்தல் வன்முறையில் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு மேல் நீதிமன்றத்திற்குப் பிணை கேட்டு வந்தால் தேர்தல் காலத்தில் பிணை மனுக்கள் விசாரணைக்கு எடுக்கப்படமாட்டாது என்றும் இளஞ்செழியன கூறியுள்ளார்.
நீதிவான் நீதிமன்றம் ஒன்றின் விளக்கமறியலில் இருக்கும் கைதிக்கு பிணை கோரி யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவொன்றை குறுகிய காலத்தில் விசாரித்து பிணை வழங்க வேண்டும் என கோரப்பட்டபோதே, நீதிபதி இளஞ்செழியன் இவ்வாறு அறிவித்துள்ளார். பிணை கேட்டு சமர்ப்பிக்கப்படுகின்ற பிணை மனு சம்பந்தப்பட்ட குற்றத்தின் தன்மை, சமூகத்தின் நன்மை, ஜனநாயகத் தேர்தலின் சுயாதீனம் என்பவற்றைக் கருத்திற்கொண்டு, ஒழுக்கமில்லாத வேட்பாளருக்கும் வாக்காளருக்கும் தேர்தல் தினத்தன்று வாக்களிக்க முடியாத அளவுக்கு பிணை மறுக்கப்படும் என தெரிவித்த நீதிபதி இந்த பிணை மனு தொடர்பான விசாரணையை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 28 ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளார்.
சனத்தை மதிப்பதே ஜனநாயகமாகும். எனவே மக்களுக்கு மதிப்பளித்து, அமைதியான தேர்தல் கால கள நிலைமையை ஏற்படுத்துவதற்கும், மக்கள் சுதந்திரமான முறையில் வாக்களிப்பதற்கும் ஏற்ற தேர்தல் கள சூழலை தேர்தல் காலத்தில் ஏற்படுத்த வேண்டும். எனவே, பெரும் குற்றச் செயல்களுக்காகக் குற்றம் சாட்டப்பட்டு, விளக்கமறியலில் உள்ளவர்களுக்கு, தேர்தல் காலத்தில் பிணை வழங்க முடியாது. பிணை மனுக்களை விசாரணை செய்யவும் முடியாது.

அத்தகைய குற்றவாளிகளுக்கு தேர்தல் காலத்தில் பிணை வழங்குவது சமூகத்தில் பாரிய விளைவுகளை ஏற்படுத்தும். அவ்வாறு பிணை வழங்கினால் தேர்தல் வன்முறையாளர்களுக்கு வன்முறையில் ஈடுபடுவதற்கு லைசன்ஸ் கொடுப்பது போலாகிவிடும். எனவே, எதிர்கால வன்முறை குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு நீதிமன்றத்தின் இந்தத் தீர்மானம் ஒரு எச்சரிக்கை மணியாக இருக்க வேண்டும் என்றும் நீதிபதி இளஞ்செழியன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment