May 26, 2015

யாழ். நீதிமன்ற சம்பவம்! பொலிஸாரினால் கைப்பற்றப்பட்ட 122 வாகனங்கள் நீதிமன்றில் ஒப்படைப்பு!

யாழ். நீதிமன்ற வளாகத்தில் இடம்பெற்ற கலவரத்தின் போது கைப்பற்றப்பட்ட 122 வாகனங்கள் நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸார் நேற்று திங்கட்கிழமை தெரிவித்தனர்.
கடந்த 20ம் திகதி புங்குடுதீவு பகுதியில் படுகொலை செய்யப்பட்ட
மாணவியின் சம்பவத்தினைக் கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் யாழில் நடைபெற்றது. அந்த ஆர்ப்பாட்டத்தின் போது மாணவியை படுகொலை செய்த குற்றவாளிகளை யாழ். நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான ஏற்பாடுகளை யாழ். பொலிஸார் மேற்கொண்டிருந்தனர்.
அதன்போது அங்கு கூடியிருந்த இளைஞர்கள் பலர் நீதிமன்ற கட்டடத் தொகுதியின் மீது தாக்குதல் மேற்கொண்டனர். இதன் பின்னர் பொலிஸார் தாக்குதல் மேற்கொண்ட இளைஞர்கள் மீது தண்ணீர் பீய்ச்சி தாக்குதல் நடத்தினர்.
அந்த தாக்குதலின் போது இளைஞர்கள் தாம் வந்த மோட்டார் சைக்கிள்களையும், துவிச்சக்கர வண்டிகளையும் அந்த இடத்தில் விட்டு விட்டு தப்பி ஓடினர். இவ்வாறு கைவிட்டு ஓடிய வாகனங்களை மீட்ட பொலிஸார் அவற்றை நீதிமன்றில் ஒப்படைத்தனர்.
அவ்வாறு மீட்கப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் 73, மற்றும் துவிச்சக்கர வண்டிகள் 46 உட்பட 03 முச்சக்கர வண்டிகளை நீதிமன்றில் ஒப்படைத்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment