April 9, 2015

கொடும்பாவி எரிப்பினில் தொடர்பில்லை! மறுதலிக்கின்றார் அனந்தி!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன், எம்.ஏ.சுமந்திரன், மாவை சேனாதிராசா ஆகியோரின் கொடும்பாவிகள் எரிக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்களுக்கும் எனக்கும் எவ்வித தொடர்புகளும் இல்லையென வடமாகாண சபை ஆளுங்கட்சி உறுப்பினர் அனந்தி சசிதரன், தெரிவித்துள்ளார்.


யாழ்.ஊடக அமையத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, அண்மையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் கொடும்பாவிகள் எரிக்கப்பட்டது.

தொடர்பினில் சில தரப்புக்கள் தங்களை தொடர்புபடுத்தி குற்றஞ்சாட்டுகின்றனவேயென ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் தொடர்ந்து கூறுகையில்,ஆர்ப்பாட்டம் என்றால் அனந்தி தான் மேற்கொள்வது என்ற கருத்து தற்போது உள்ளது.. காணாமற்போனோரின் உறவினர்களின் ஆர்ப்பாட்டங்களில், அவர்களைப் போல நானும் பாதிக்கப்பட்டவள் என்ற அடிப்படையில் பங்கற்றுவதுண்டு.

அதற்காக என்னால் இயன்ற செயற்பாடுகளை மேற்கொள்வேன். பெண்களுக்கு அநீதி நடைபெறுகின்றபோது, என்னால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. பாதிக்கப்பட்டது எந்த நாட்டு பெண்ணாக ,ருந்தாலும் நான் குரல் கொடுப்பேன்.

உள்நாட்டு பொறிமுறையில் எமக்கு நம்பிக்கை இல்லாததால் தான் ஐ.நா.வில் முறையிட்டோம். உள்நாட்டு பொறிமுறை மூலம் எம்மை அமைதியாக்கி, ஓய்வாக ஒருபக்கத்தில் இருக்கச்செய்யலாம் என எண்ணுகிறார்கள். அது ஒருபோதும் நடைபெறாது என்றார்.

பெண்கள், சிறுமிகளுக்கு பொறுப்பாக உள்ளவர் என்ற வகையில் அண்மையில் கூட்டு வன்புணர்வு செய்யப்பட்ட சிறுமி தொடர்பில் பொறுப்புக்கூறவேண்டியவராக உள்ளீர்கள் என ஊடகவியலாளர் வினாவியதுக்கு பதிலளித்த அனந்தி, பாதிக்கப்பட்ட பெண்கள் சிறுவர் தொடர்பான பொறுப்பு, முதலமைச்சரிடம் இருந்து பின் எனக்கு அந்த பொறுப்பு வழங்கப்பட்டது. ஆனால் அதற்கான உத்தியோகபூர்வ கடிதம் எனக்கு வழங்கப்படவில்லை. அது தற்போது சுகாதார அமைச்சின் கீழ் உள்ளது.
என்னிடம் இந்த பொறுப்பு உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டால் என்னால் சிறப்பாக செயற்படமுடியும். இந்த விடயங்கள் தொடர்பில் நான் வெளியில் சென்று பேசுவதற்கு எனக்கான அதிகாரங்கள் வழங்கப்படவேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

No comments:

Post a Comment