April 4, 2015

நியூசிலாந்து கடலில் தமிழ் மாணவர் சாவு!

நியூசிலாந்து கடலில் விழுந்து தத்தளித்த போது, இளம் பெண்களால் காப்பாற்றப்பட்ட தமிழ் மாணவர், ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


நியூசிலாந்து நாட்டில் பூபேஷ் பழனி (வயது 26) என்ற தமிழ் மாணவர் படித்து வந்தார். கடந்த திங்கட்கிழமை அவர், நியூசிலாந்தில் ஈஸ்ட்போர்ன் என்ற இடத்தில் உள்ள கடலில் விழுந்து தத்தளித்தார்.

அப்போது அங்கு நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த 15 வயதான கெல்லி மெக்காவ் மற்றும் 16 வயதான பாய்கே ஓல்ட்ஸ் ஆகிய ஒன்றுவிட்ட சகோதரிகள் அவரது அலறல் சத்தத்தை கேட்டனர்.

உடனே, பாய்கே ஓல்ட்ஸ் துணிச்சலாக கடலில் குதித்தார். அவருக்கு கரையில் இருந்து இரண்டு வாலிபர்கள் டார்ச் லைட் அடித்தபடி வழி காட்டினர்.பாய்கே ஓல்ட்ஸ், மிகவும் ஆழத்தில் நீந்திச் சென்று, பழனியை கண்டுபிடித்தார். அப்போது, பழனி நன்றாக மூழ்கிய நிலையில் கிடந்தார். அவரை பாய்கே மீட்டு கரைக்கு கொண்டு வந்தார்.

கரையில், பழனிக்கு கெல்லி மெக்காவ் முதலுதவி சிகிச்சை செய்தார். பின்னர், பழனியை வெலிங்டனில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த பழனி, 5 நாட்கள் கடந்த நிலையில், நேற்று மரணம் அடைந்தார்.

அப்போது, நண்பர்கள் உடன் இருந்தனர்.5 நாட்களாக நண்பர்கள் செய்த உதவிக்காக, அவர்களுக்கு பழனியின் குடும்பத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர்.

பழனி காப்பாற்றப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட போது, முதலில் அவரைப் பற்றி எதுவும் தெரியவில்லை. ஆனால், செய்தி இணையதளங்களில் அவரது புகைப்படத்தை பார்த்து விட்டு, ஒருவர் அடையாளம் சொன்னதால், அவரைப் பற்றிய விவரங்கள் தெரிய வந்தன.

No comments:

Post a Comment