January 27, 2015

மகிந்தரின் பென்சன் எவ்வளவு தெரியுமா?

ஜனாதிபதி தேர்தலில் தோல்வியுற்ற முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஓய்வு பெற்ற ஜனாதிபதியாக கருதப்படுகின்றார். இதற்கு முன்பு இவ்வாறு
ஓய்வு பெற்ற ஜனாதிபதிகள் 3 பேர் உள்ளனர். அவர்கள் ஜே.ஆர். ஜயவர்த்தன, டி.பி. விஜேதுங்க மற்றும் சந்திரிகா குமாரதுங்க ஆகியவர்களாவர்.இவ்வாறு தங்களது ஜனாதிபதி பதவிக் காலம் முடிவுற்று ஓய்வு பெறும் ஜனாதிபதி ஒருவருக்கு தங்களது வாழ் நாள் பூராகவும் தாங்கள் வகித்த அரச தலைவர் என்ற கௌரவத்தை பாதுகாக்கும் வகையில் ஓய்வு காலத்தை கழிப்பதற்கு அரசியல் யாப்பின் ஊடாக வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் ஓய்வு பெற்றுச் செல்லும் ஜனாதிபதி ஒருவருக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் ஒருவருக்கு வழங்கப்படும் சலுகைகள் கிடைக்கப்பெறுகின்றன. அத்துடன் அவர்களின் விருப்பத்தின் படி உத்தியோக பூர்வ வாசஸ்தல மொன்றை பெற்றுக் கொள்வதற்கோ அல்லது தனிப்பட்ட வீடொன்றை பாவிப்பதற்கோ அவர்களுக்கு முடியும். அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் ஒருவருக்கு வழங்கப்படும் பாதுகாப்புக்கு சமமான பாதுகாப்பு கிடைக்கப் பெறுகின்றது. என்றாலும் உயிருக்கு ஏற்படும் அச்சுறுத்தலைப் பொறுத்து பாதுகாப்பில் கூட்டல், குறைவு ஏற்படலாம்.
ஓய்வு பெற்ற ஜனாதிபதி ஒருவருக்கு ஓய்வூதிய கொடுப்பனவொன்று கிடைக்கப் பெறுகின்றது. இதுவரை அந்தக் கொடுப்பனவு 97,500 ரூபாவாகும். அத்துடன் உத்தியோகபூர்வ காரியாலயமும் ஊழியர் சபை ஒன்றும் கிடைக்கப் பெறுகின்றன. மேலும் உத்தியோகபூர்வ வாகனம் மற்றும் பாதுகாப்பு வாகனமும் கிடைக்கப் பெறுவதுடன் எரிபொருள் கொடுப்பனவையும் பெற்றுக் கொள்ள உரித்துடையவராகிறார். உத்தியோகப்பூர்வ வாகனமாக கொடுக்கப்படுவது குண்டு துளைக்காத வாகனமாகும். ஓய்வு பெற்ற ஜனாதிபதி ஒருவருக்கு அவர் பதவியில் இருந்த காலத்தில் பயணங்களை மேற்கொள்வதற்கு ஹெலிகொப்டர் கிடைக்கப் பெறாது. அவ்வாறு அவருக்கு ஹெலிகொப்டர் தேவையென்றால் அதற்காக அவர் விமானப் படைக்கு கட்டணம் செலுத்த வேண்டும்.
முன்னாள் அரச பிரமுகராக வெளிநாட்டு விஜயமொன்றுக்காக அழைக்கப்பட்டால் அதற்கு தேவையான கொடுப்பனவுகள் ஓய்வு பெற்றுள்ள ஜனாதிபதி ஒருவருக்கு கிடைக்கப் பெறுகின்றன. மேலும் அரச விழாவொன்றின் போது ஆசனங்கள் ஒதுக்கும் போது ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அருகில் ஆசனம் ஒதுக்கப்படும். 1978 ஆம் ஆண்டு அரசியல் அமைப்பின் ஏழாவது சரத்தின் 35வது பந்தியின் பிரகாரம் ஜனாதிபதி பதவி வகித்த காலப் பகுதியில் செய்த எந்த தவறுக்கும் வழக்கு தாக்கல் செய்ய முடியாது.
ஜனாதிபதி பதவி வகிக்கும் போது அல்லது ஓய்வுபெற்ற பின் அவர் மரணித்தால் விதவைக்கு ஓய்வூதியத்தில் மூன்றில் இரண்டு மற்றும் காரியாலயம், காரியாலய ஊழியர்களை தவிர ஓய்வு பெறும் ஜனாதிபதி ஒருவருக்கு கிடைக்கும் சகல வரப்பிரசாதங்களும் கிடைக்கும்.1978 ஆம் ஆண்டு அரசியல் அமைப்பில் இவ்வாறு நிபந்தனைகளை உள்ளடக்கி இருப்பது ஓய்வு பெறும் ஜனாதிபதி ஒருவரின் கௌரவத்தை பாதுகாப்பதற்காகும்.
எவ்வாறு இருப்பினும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தாம் ஓய்வு பெறும் காலத்தில் மெதமுலன வீட்டுக்குப் போய் ஓய்வின் சுகத்தை அனுபவிப்பதே தனது விருப்பம் என ஜனாதிபதி தேர்தல் காலத்தில் கூறியிருந்தார். என்றாலும் அவர் கூறியது போல் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மெதமுலனவுக்கு செல்வாரா அவ்வாறு இல்லாவிட்டால் ஓய்வு பெறும் ஜனாதிபதி ஒருவருக்கு கொழும்பில் கிடைக்கும் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இருப்பாரா என்பது தெரியவில்லை.
ஆனால் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தனது ஓய்வு காலத்தை பாதுகாப்பு காரணமாக அத்தனகல்ல ஹொரகொல்லையில் தங்காமல் கொழும்பில் சுதந்திர சதுக்கத்துக்கு அருகில் அமையப் பெற்ற வீட்டை உத்தியோகபூர்வ வாசஸ்தலமாக தேர்ந்தெடுத்துக் கொண்டார். சந்திரிகா குமாரதுங்கவுக்கு பொலிஸ் அதிகாரி ஒருவர் உட்பட பாதுகாப்பு அதிகாரிகளின் 200 பேர் பாதுகாப்புக்காக வழங்கப்பட்டுள்ளனர். மேலும் அவர் பதவிக் காலத்தில் இருக்கும் போது கடமையில் இருந்த நம்பிக்கைக்குரிய அதிகாரிகள் சிலரும் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறே முன்னாள் ஜனாதிபதிகளான ஜே.ஆர். ஜயவர்த்தன மற்றும் டி.பி. விஜேதுங்க ஆகியோருக்கும் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. என்றாலும் காலப்போக்கில் அவர்கள் தங்களுடைய பாதுகாப்பு அதிகாரிகளை குறைத்து வரையறுத்துக் கொண்டனர். ஜே.ஆர். ஜயவர்த்தன உத்தியோகபூர்வ வாசஸ்தலமொன்றை பெற்றுக் கொள்ளவில்லை. அவர் ஓய்வு காலத்தை வோர்ட் பிளேஸில் அமைந்த தனது சொந்த வீட்டில் கழித்தார். ஜனாதிபதி பதவிக் காலத்திலும் அவர் பிரீமார் என்ற அந்த வீட்டிலேயே தங்கி இருந்தார். ஜே.ஆர். ஜயவர்த்தன மரணித்த பின்னர் அவருடைய காரியாலயம் மற்றும் ஊழியர்கள் சபை இரத்துச் செய்யப்பட்டன. என்றாலும் ஜே.ஆரின் பாரியாருக்கு உத்தியோகபூர்வ வாகனம் மற்றும் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.
அதேபோன்று கொலை செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் மனைவியான ஹேமா பிரேமதாசவுக்கு உத்தியோகபூர்வ வாசஸ்தலம் வழங்கப்பட்டது. மற்றும் உத்தியோகப்பூர்வ வாகனம், பாதுகாப்பும் அவருக்குக் கிடைக்கப்பெற்றன.முன்னாள் ஜனாதிபதி டி.பி. விஜேதுங்கவின் உத்தியோகப்பூர்வ வாசஸ்தலம் மற்றும் காரியாலயம் கொழும்பு 5 பெஜட் வீதியில் அமைந்திருந்தது. அந்த காரியாலயத்தில் 22 ஊழியர்கள் சேவை செய்தனர். என்றாலும் டி.பி. விஜேதுங்க இங்கே தங்காமல் தனது ஊரான பிலிமத்தலாவையில் உள்ள வீட்டிலே தங்கினார். முன்னாள் ஜனாதிபதிகளுடைய காரியாலயங்கள், திணைக்களங்களுக்கு சமமானவை. எந்தவொரு அமைச்சினாலும் நிர்வகிக்காத இந்ததிணைக்களங்களுக்கு அரச ஒருங்கிணைப்பு நிதியத்திலிருந்து நிதி ஒதுக்கப்படுகின்றது.
தற்போது இந்த நாட்டில் ஓய்வு பெற்ற இரண்டு ஜனாதிபதிகள் இருக்கின்றனர் அவர்கள் சந்திரிகா குமாரதுங்க மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோராவர்.

No comments:

Post a Comment