October 25, 2014

அரசாங்கத்தின் நன்கொடையில் தங்கியிருப்பதனால் மக்களுக்கான சேவைகளை முன்னெடுப்பதில் சிக்கல்கள் -சீ.வி.கே.சிவஞானம்!

வடமாகாண சபை அரசாங்கத்தின் நன்கொடையில் தங்கியிருப்பதனால் மக்களுக்கான சேவைகளை முன்னெடுப்பதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக வடமாகாண சபையின் அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.


வடமாகாண சபை ஆரம்பித்து இன்றுடன் ஒரு வருடம் பூர்த்தியடைந்துள்ளது.

இந்த நிலையில் வடமாகாண சபையினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பில் இன்று அவரிடம் கேட்டபொழுது  இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது,

வடமாகாண சபை கூட்டம் கடந்த ஒக்டோபர் மாதம் 25ம் திகதி ஆரம்பிக்கப்பட்டு ஒரு வருடம் பூர்த்தியடைந்த சந்தர்ப்பத்தில் முதலாவது கூட்டத் தொடரில் இருந்து மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றியிருக்கின்றோம்.

வடமாகாண மக்களின் காணி பிரச்சினைகள் மற்றும் வாழ்வாதார பிரச்சினைகள், உரிமைப் பிரச்சினைகள் தொடர்பில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அந்தவகையில், மாகாண சபை அரசியல் அமைப்பு சட்டங்களை முழுமையாக அமுல்படுத்த ஜனாதிபதியிடம் கேட்டுக்கொண்டிருந்த நிலையில், சாதமான பதில்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

முதன்முதலாக காணி பிரச்சினை நகர்வுகளில் முன்னெடுக்ககூடிய தளத்தினை ஏற்படுத்தியுள்ளோம். தீர்மானம் என்று சொன்னாலும் மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சினை எடுக்கப்பட்டுள்ளதுடன், முக்கிய நியதிச் சட்டங்களும் உருவாக்கப்பட்டு, வடமாகாண ஆளுனரினால் அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இது முதலாவது ஆரம்ப காலம் ஆகவே எடுத்த எடுப்பில் எதையும் செய்யவில்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளது. அரசாங்கத்தின் முழுமையான நன்கொடையில் தங்கியிருக்கின்றோம். மாகாண சபைக்கான நிதி ஆளுகையின்மையினால், பல சிக்கல்களை எதிர்கொள்ளும் நாங்கள், எதிர்காலத்தில் வரிவசூலிப்பு போன்றவை எமது கைகளில் கிடைத்தால், அதனூடாக மக்களுக்கான சேவைகளை செய்வோம், எனக் கூறினார்.

No comments:

Post a Comment