May 7, 2014

முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை பல்கலைக்கழகத்தில் அனுஸ்டிக்கக்கூடாது -யாழ் படைத்தளபதி!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வை அனுஸ்டிக்கக் கூடாது என்று யாழ்.மாவட்ட படைகளின் கட்டளைத் தளபதி ஜெனரல் உதய பெரேரா
பல்கலைக்கழக மாணவர்களை அச்சுறுத்தியுள்ளார்.
யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் பயங்கரவாதத்தை தூண்டும் வகையில் அரசியல் பின்புலங்களுடன் செயற்படுவதாலேயே அமைதி நிலை பாதிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் மாணவர்களிடம் கூறியிருக்கின்றார்.
யாழ். பல்கலைக்கழகத்தில் மக்களுக்கு அஞ்சலி செலுத்த அனுமதித்தால் அதன் பெயரில் நீங்கள் நீங்கள் புலிகளுக்கும் பிரபாகரனுக்கும் அஞ்சலி செலுத்துவீர்கள். எனவே இதனை அனுமதிக்க முடியாது என்றும் மாணவர் பிரதிநிதிகளிடம் உதய பெரேரா தெரிவித்திருக்கின்றார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் எதிர்வரும் 16 ஆம் திகதி தொடக்கம் 20 ஆம் திகதி வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் பல்கலைக்கழக துணைவேந்தர், பீடாதிபதிகள், துறைத் தலைவர்கள், மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள் ஆகியோரை சந்திப்புக்கு அழைத்த மேற்படி படைத் தளபதி அவர்களிடம் நேரடியாகவே இந்த விடத்தை தெரிவித்தார்.
மேற்படி சந்திப்பு இன்று காலை 9 மணியளவில் காங்கேசன்துறையில் உள்ள தல் செவன இராணுவ விடுதியில் இடம்பெற்றது. இந்தச் சந்திப்பின்போது யாழ்.பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுதினத்தை அனுஸ்டிக்க முடியாது என்று படைத் தளபதி கூறியதால் மாணவர் பிரதிநிதிகள் குழப்பமடைந்தனர். வன்னியில் கொல்லப்பட்ட மக்களுக்கே தாங்கள் அஞ்சலி செலுத்துவதாகவும் அதை தடுக்க முற்படவேண்டாம் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதன்போது மாணவர்களை அச்சுறுத்தும் பாணியில் நடந்துகொண்ட படைத் தளபதி, முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வைக் குழுவாகச் சேர்ந்து எவரும் அனுஸ்டிக்க முடியாது. அப்படி அனுஸ்டிப்பதாயின் அதனைத் தனித் தனியே வீடுகளில் அனுஸ்டியுங்கள்.
யுhழ்.பல்கலைக்கழக மாணவர்களாகிய நீங்கள் பயங்கரவாதத்துக்குத் துணைபோகும் வகையில் அரசியல் பின்புலங்களுடன் செயற்படுகின்றீர்கள். அதனால் அமைதி நிலை பாதிக்கப்படுகிறது. இத்தகைய செயற்பாடுகளை பல்கலைக்கழக மாணவர்கள் கைவிடவேண்டும் என்று எச்சரித்தார்.
மேலும், நீங்கள் பல்கலைக்கழகத்திற்குள் மக்களுக்கு அஞ்சலி செலுத்துகின்றோம் என்ற போர்வையில் பிரபாகரனுக்கு அஞ்சலி செலுத்துவீர்கள். புலிகளுக்கு அஞ்சலி செலுத்துவீர்கள். எனவே இதனை அனுமதிக்க முடியாது என்றும் அச்சுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment