May 18, 2014

பேஸ்புக் காதலால் கண்ணீர் சிந்தும் யாழ் பெண்கள்! தற்கொலைக்கு முயலும் இளைஞர்கள்.

இன்றைய நவநாகரிக காலத்தில் நம் இனத்தின் கலாசாரம் கப்பல் ஏறி விட்டது. கண்டவுடன் காதல், அடுத்த நாள் கலியாணம் என்று
இவ்விடயத்தில் நம் இனத்தின் ஆண், பெண்களின் வேகம் அதி உச்சம் பெற்றுள்ளது.

சில வேளைகளில் அது சாதகமாக அமைந்தாலும் கூட, பெரும் விபரீதமாக மாறி அவர்களின் எதிர்காலத்துக்கே பெரும் இடியாக விழக் கூடிய சூழ்நிலைகளே தற்போது அதிகம். அதுவும் யாழ்ப்பாணத்தைப் பொறுத்தமட்டில், இளைஞர், யுவதிகள் கலாசாரத்துக்காகக் கட்டி வைக்கப்பட்டிருந்தனர். தற்போது அவிழ்த்து விடப்பட்டுள்ள நிலையிலும், ஆடம்பர வாழ்க்கையின் உச்சமும் அவர்களின் எதிர்காலத்து வாழ்க்கையைச் சிதைத்து விடுகின்றன.

சின்னாபின்னமாகும் தமிழ் யுவதிகளின் வாழ்வு, தற்கொலைக்கு முயற்சிக்கும் இளைஞர்களின் பரிதாபம் என ஒரு தொடர் கதையாக மாறி வருகின்றது இன்றைய யாழ்ப்பாணம். இன்றும் கூட பேஸ்புக் காதலால் ஒரு இளம் பெண் கடத்தப்பட்டுள்ளார் என்ற செய்தி இன்றைய தினம் நாம் படித்து முடிந்தவுடன் பழையதாகி விடுகின்றது.

ஆனால் இவ்வாறு கடத்தப்பட்ட பெண்ணின் எதிர்காலம் கேள்விக் குறியாகவே அமைந்து விடுகிறது. அதன் முழுமையான தாக்கத்தை அப் பெண்ணின் பெற்றோர்களே உணர, அனுபவிக்க வேண்டும். எனவே பெற்றோர்களாகிய நீங்கள், உங்கள் பிள்ளைகளின் நாளாந்தச் செயற்பாடுகள் குறித்து அதீத கவனம் எடுத்தல் இன்றைய கால கட்டத்திற்கு அதி முக்கியமானதாக அமைகின்றது.

அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி. தற்காலம் தவறுகள் இடம்பெறுவதற்கும், தவறான வழிக்கு இளைஞர், யுவதிகள் வழிதவறிப் போவதற்கும் ஏற்ற சூழமைவாகக் காணப்படுகின்றது. அத்துடன் எமது சமூகத்தில் பின்னிப்பிணைந்துள்ள இணையத்தளப் பாவனை, இரவிரவாக சமூகத்தளங்களுடன் பொழுது கழிக்கும் பிள்ளைகள், இதனால் ஏற்படும் புதிய புதிய நட்புகள் இவைகள் அனைத்தும் எதிர்காலத்தில் பெற்றோர்களாகிய உங்களுக்கு பெரிதும் தாக்கத்தை உண்டுபண்ணும்.

எனவே இரவு 9.30 மணிக்குப் பின் ஒரு பிள்ளை கணனி முன் அமர்ந்து இணையத்தளம் பார்க்கிறது என்றால், அது வெறும் படிப்புக்காக மட்டும் அல்ல என்பதை நீங்கள் நன்கு அறிந்து வைத்திருத்தல் வேண்டும். மாறாக உண்மையிலேயே கற்றலுக்காகத்தான் கணனி முன் பிள்ளை அமர்ந்திருந்தாலும் அப் பிள்ளையின் செயற்பாடுகளில் உங்கள் கவனத்தைச் செலுத்துவது தவறாகாது, மாறாகத் தவறுகள் இடம்பெறுவதைத் தடுத்துக் கொள்ள முடியும்.

எனவே இளவயதில் இவ்வாறு சமூகத்தளங்களினால் இடம்பெறும் தவறுகளுக்கு அப் பிள்ளைகள் மட்டுமல்ல பெற்றோர்களாகிய நீங்களும்தான் பொறுப்பு என்பதை நினைவில் கொண்டு, இனிவரும் காலங்களில் எமது இன இளைஞர், யுவதிகள் இவ்வாறான செயற்பாடுகளின் மூலம் சீரழிவதை, உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாவதைத் தடுத்து நிறுத்துங்கள். அதுவே இன்றைய சூழ்நிலைக்கு அதி முக்கியமானதாக அமைகின்றது.

No comments:

Post a Comment