August 2, 2016

உரிய விசாரணை மூலமே நல்லிணக்கத்தை ஏற்படுத்தலாம்!

இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இடம்பெறுகின்ற விசாரணைப் பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகள்,
சர்வதேச மனித உரிமை செயற்பாட்டாளர்கள் உள்ளடக்கப்படுவதுடன் தமிழ் தெரிந்த நீதிபதிகளும் வடக்கு, கிழக்கை சேர்ந்த பிரதிநிதிகளும் உள்வாங்கப்படவேண்டியது அவசியம் என்று அரசாங்கத்தின் நல்லிணக்க பொறிமுறைக்கான மக்கள் கருத்தறியும் செயலணியிடம் வடக்கைச் சேர்ந்த தமிழ் மக்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.

இறுதி யுத்தத்தின் போது வடக்கு, கிழக்கைச் சேர்ந்த மக்களே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, இவர்களின் விடயங்களை அறிந்தவர்கள் விசாரணைப் பொறிமுறையில் உள்வாங்கப்படவேண்டும்.

இத்தகைய விசாரணையின் ஊடாகவே நீதியினை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

நல்லிணக்க பொறிமுறைக்கான மக்கள் கருத்தறியும் செயலணியின் நான்காவது அமர்வானது நேற்று முன்தினம் யாழ்ப்பாணம், கரவெட்டி பிரதேச செயலகத்தில் இடம்பெற்றிருந்தது.

இந்த செயலணியில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட வடபகுதி தமிழ் மக்களே இந்தக் கோரிக்கையினை முன்வைத்திருக்கின்றனர்.நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது தொடர்பில் வெறுமனே பேசிக்கொண்டிருப்பதில் பயன் ஒன்றும் இல்லை.

எனவே, நல்லிணக்கமானது ஏற்படுவதற்கான காரணிகள் கண்டறியப்படவேண்டும். காணாமல் போனோர் தொடர்பில் உண்மை கண்டறியப்படவேண்டும். நில ஆக்கிரமிப்பானது நிறுத்தப்படவேண்டும். கையகப்படுத்தப்பட்ட காணிகள் மீள ஒப்படைக்கப்படவேண்டும். வடக்கு, கிழக்கிலிருந்து இராணுவம் முற்றாக நீக்கப்படவேண்டும்.

அரசாங்கமானது பொறுப்புக்கூறலை மேற்கொண்டபின்னரே அடுத்த கட்ட தீர்வு குறித்து நாம் பேசமுடியும். காணாமல் போனோர் விவகாரத்தில் உரிய தீர்வைக் காணாது சான்றிதழ் வழங்குவதையோ அல்லது நட்டஈடு வழங்குவதையோ நாம் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை.

சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளையும் விடுவிக்க வேண்டும் என்றும் நல்லிணக்கப் பொறிமுறைக்கான மக்கள் கருத்தறியும் செயலணியிடம் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

நாம் இதுவரை போராடுவது அரசாங்கம் வழங்குகின்ற சலுகைகளுக்காகவோ அல்லது கொடுப்பனவுகளுக்காகவோ அல்ல. எமது மண்ணில் நாம் சுதந்திரமாகவும் சுய நிர்ணயத்துடனும் வாழ்வதற்காகவே போராடுகின்றோம் என்றும் இந்த மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதேபோல் வடக்கு, கிழக்கில் பல்வேறு இடங்களிலும் நல்லிணக்கப் பொறிமுறைக்கான மக்கள் கருத்தறியும் செயலணி கலந்துரையாடல்களை நடத்தி வருகின்றது. இந்த கலந்துரையாடல்களின் போது வடக்கு, கிழக்கைச் சேர்ந்த மக்கள் இத்தகைய கோரிக்கைகளையே முன்வைத்திருக்கின்றனர்.

இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்த குற்றங்கள் தொடர்பில் சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்கிய உள்ளக விசாரணை இடம்பெறவேண்டும் என்று கடந்தவருடம் செப்டெம்பர் மாதம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.

இந்தத் தீர்மானத்திற்கு அரசாங்கமானது இணை அனுசரணை வழங்கியதுடன் அதனை நடைமுறைப்படுத்த தயார் எனவும் அறிவித்திருந்தது.ஆனால், தற்போதைய நிலையில் அரசாங்கமானது உள்ளக விசாரணைப் பொறிமுறையில் சர்வதேச நீதிபதிகளை உள்ளீர்க்க தயார் இல்லை என்று கருத்து தெரிவித்து வருகின்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த விவகாரம் தொடர்பில் பல தடவைகள் கருத்துரைத்துள்ளார். உள்ளக விசாரணைப் பொறிமுறையில் சர்வதேச நீதிபதிகளை இடம்பெறச் செய்யப்போவதில்லை என்று அவர் திட்டவட்டமாக கூறியிருக்கிறார்.

ஆனாலும் ஐ.நா. மனித உரிமை பேரவையில் கடந்த ஜூன் மாதம் இடம்பெற்ற அமர்வின் போது கருத்து வெளியிட்ட வெளிவிவகார அமைச்சர் இந்த விவகாரங்கள் தொடர்பில் இன்னமும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லையெனவும் இது குறித்து ஆராய்ந்து தீர்மானம் எடுக்கலாம் என்றும் கூறியிருந்தார்.



ஐ.நா. மனித உரிமை பேரவையில் இடம்பெற்ற குழுநிலை கலந்துரையாடலில் ஜனாதிபதியின் நிலைப்பாடு குறித்த கேள்விக்கு பதிலளித்த வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அது ஜனாதிபதியின் தனிப்பட்ட கருத்து என்று கூறியிருந்தார்.

இருந்த போதிலும் அரசாங்கமானது உள்ளக விசாரணைப் பொறிமுறையில் சர்வதேச நீதிபதிகளை உள்வாங்குவதற்கான திட்டத்தை கைவிட்டுள்ளதாகவே தெரிகின்றது.

இந்த நிலையில் மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றங்கள் தொடர்பில் நடைபெறும் விசாரணைப் பொறிமுறையில் சர்வதேச நீதிபதிகள் உள்வாங்கப்படுவதுடன் தமிழ் தெரிந்த நீதிபதிகளும் வடக்கு, கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகளும் உள்வாங்கப்படுவது அவசியம் என்று தமிழ் மக்கள் சார்பில் தற்போது வலியுறுத்தப்பட்டுள்ளது.

உள்ளக விசாரணைப் பொறிமுறையில் சர்வதேச நீதிபதிகளின் உள்ளடக்கம் தொடர்பில் தற்போது தமிழ் தேசியக்கூட்டமைப்பு அதிகளவான அழுத்தங்களை கொடுப்பதாக தெரியவில்லை.

ஆனாலும், வடக்கு, கிழக்கை சேர்ந்த தமிழ் மக்கள் இந்த விடயத்தில் விடாப்பிடியாக இருக்கின்றமை நல்லிணக்க பொறிமுறைக்கான மக்கள் கருத்தறியும் செயலணியிடம் அவர்கள் தெரிவித்து வருகின்ற கருத்துக்கள் மூலம் நன்கு புலனாகின்றது.

உண்மையிலேயே கடந்த மூன்று தசாப்தகாலமாக இடம்பெற்ற கொடூர யுத்தத்தில் தமிழ் மக்கள் சொல்லொணாத் துயரங்களை அனுபவித்துள்ளனர். இறுதி யுத்தத்தின் போது பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு உயிர்களையும் உடமைகளையும் இழந்த தமிழ் மக்கள் இன்று தமக்கு இழைக்கப்பட்ட அநியாயங்களுக்கு நீதிகோரி நிற்கின்றனர்.இவ்வாறு நீதிகோரி நிற்கும் தமிழ் மக்களுக்கு உரிய நீதி வழங்கப்படவேண்டுமானால் அதில் சர்வதேச பங்களிப்புடனான விசாரணையின் மூலமே சாத்தியமாகும் என்ற நிலைப்பாடு மேலோங்கியிருக்கின்றது.

தற்போதைய நிலையில் அரசாங்கமானது உள்ளக விசாரணைப் பொறிமுறை மூலம் விசாரணைகளை மேற்கொண்டாலும் அது தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்களை பூர்த்தி செய்யுமா என்ற கேள்வி எழுகின்றது.

விசாரணை பொறிமுறை மூலமான விசாரணை உரிய வகையில் நடத்தப்பட்டு தமிழ் மக்களுக்கு உரிய நீதி வழங்கப்படாவிடின் நாட்டில் நல்லிணக்கம் என்பது ஏற்படப்போவதில்லை.

இதேபோல் காணாமல் போனோர் விவகாரம் தொடர்பிலும் உரிய விசாரணைகள் நடத்தப்பட்டு உண்மை நிலை கண்டறியப்படவேண்டும். இந்த விடயத்திலும் தமிழ் மக்கள் உறுதியாக இருக்கின்றனர்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் காலத்தில் அமைக்கப்பட்ட மெக்ஸ்வெல் பரணகம தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழு சில ஆண்டுகளாக காணாமல்போனோர் விவகாரம் தொடர்பில் விசாரணைகளை நடத்தியிருந்த போதிலும் அதனால் ஏற்பட்ட பயன் என்ன என்ற கேள்வி தற்போது எழுந்திருக்கின்றது.

காணாமல் போனோர் விவகாரத்தில் சான்றிதழ் வழங்குவதையோ, நட்டஈடு வழங்கப்படுவதையோ தமிழ் மக்கள் விரும்பவில்லை. காணாமல் போன தமது உறவுகளுக்கு நடந்த கதி என்ன என்பதை அறியவே அவர்கள் விரும்புகின்றனர்.

இந்த விவகாரத்தை கையாள்வதற்கு தனியான காணாமல்போனோர் செயலணி அமைப்பதற்கு தற்போது அரசாங்கம் முன்வந்திருக்கிறது. இதற்கான சட்டமூலமும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றது.

இந்த செயலணிக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ கடும் எதிர்ப்பினை தெரிவித்துள்ளதுடன் படையினரை காட்டிக்கொடுப்பதற்கான நடவடிக்கையே இது என்று அவர் குற்றம் சுமத்தியிருக்கின்றார்.

மஹிந்தவின் இந்த நிலைப்பாட்டுக்கு வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர கடும் எதிர்ப்பினை தெரிவித்துள்ளதுடன் காணாமல் போனோர் விவகாரத்தை திசை திருப்பி அரசியல் இலாபம் தேடுவதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த முயல்வதாகவும் விசனம் தெரிவித்திருக்கின்றார்.

தற்போதைய நிலையில் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலும் யுத்தக் குற்றச்சாட்டு குறித்தும் ஐ.நா. மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அமைய விசாரணைகள் நடைபெறவேண்டும்.

இதனையே தமிழ் மக்கள் விரும்புகின்றனர். இத்தகைய செயற்பாட்டின் மூலமே நல்லிணக்கத்தை ஏற்படுத்தலாம் என்பதை அரசாங்கம் உணர்ந்துகொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment