August 1, 2016

மூதூர் படுகொலை இடம்பெற்று 10 ஆண்டுகள் கடந்தும் நியாயம் கிட்டவில்லை – HRW!

மூதூரில் தன்னார்வ தொண்டு நிறுவன பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டு பத்து ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் நியாயம் கிடைக்கவில்லை என மனித உரிமை கண்காணிப்பகம் குற்றம் சுமத்தியுள்ளது.



பத்து ஆண்டுகளுக்கு முன்னதாக மூதூர்ரில் 17 தன்னார்வ தொண்டு நிறுவன பணியாளர்கள் கூட்டுமனித படுகொலைக்கு இலக்காகியிருந்தனர்.


பிரான்ஸை மையமாகக் கொண்டு இயங்கி வரும் எக்ஸென் எகேய்ன்ஸ்ட் ஹங்கர் என்ற நிறுவனத்தின் பணியாளர்கள் 2006ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4ம் திகதி படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.


இந்த தன்னார்வ தொண்டர்கள் படுகொலை செய்யப்பட்டமை மற்றும் யுத்தம் இடம்பெற்ற காலததிலான மனித உரிமை மீறல்கள், குற்றச் செயல்கள் தொடர்பில் விசேட நீதிமன்றமொன்றை அமைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியாயம் வழங்க வேண்டுமென மனித உரிமை ஆணைக்குழு கோரியுள்ளது.


குறிப்பிடத்தக்களவு வெளிநாட்டு பங்களிப்புடன் நீதியான முறையில் விசாரணை நடத்தி குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளது.


குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் தகுதி தராதரம் பாராட்டாது தண்டிக்கப்பட வேண்டியது அவசியமானது என தெரிவித்துள்ளது.


ஏ.சீ.எப் பணியாளர்கள் கொலை குறித்த விசாரணைகளின் நீதி கிடைக்காவிட்டால் யுத்த கால குற்றச்செயல்களுக்கு பொறுப்பு கூறுதலில் பாரிய குறைபாடு காணப்படுவதாகவே தென்படும் என சுட்டிக்காட்டியுள்ளது.


ஏ.சீ.எப் பணியாளர்கள் கொலை குறித்த விசாரணைகள் உரிய முறையில் நடைபெறாமையின் ஊடாக யுத்தக் குற்றச்செயல்கள் தொடர்பில் சர்வதேச பங்களிப்புடான விசாரணைகளை வலியுறுத்தி நிற்பதாக மனித உரிமை கண்காணிப்பகத்தின் சட்ட மற்றும் கொள்கைப்பணிப்பாளர் ஜேம்ஸ் ரோஸ் தெரிவித்துள்ளார்.


நான்கு பெண்கள் உள்ளிட்ட 16 தமிழர்களும் ஒரு முஸ்லிமும் இந்த தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


ஏ.சீ.எப் தன்னார்வ தொண்டர் கொலை தொடர்பில் பல்வேறு ஆணைக்குழுக்கள் விசாரணை நடத்திய போதிலும் இதுவரையில் நியாயம் கிடைக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.


யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச பங்களிப்புடனான விசாரணைப் பொறிமுறைமை உருவாக்கப்படும் என அரசாங்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவையில் வாக்குறுதி அளித்திருந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.


இந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment