July 26, 2016

சிங்கள கல்வியும் நானும் - வ.ஐ.ச.ஜெயபாலன்!

1
யாழ் பல்கலைக் கழகத்தில் ஜெயபாலன் மாணவர் தலைவராக இருந்த காலத்தில் (1976,1977,1978) தமிழ் சிங்கள மாணார்கள் ஒற்றுமைக்கு உழைத்ததாக சமீபத்திய யாழ்பல்கலைக் கழக நிகழ்வு பற்றிய இவ்வார ராவய பத்திரிகை கட்டுரை ஒன்றில் குறிபிடப் பட்டுள்ளதாம். இன்று என் சிங்கள நண்பர் கிங்ஸ்லி பெரரா (கம்கறு சேவன, இரத்மலான) இதுபற்றி எனக்கு குறும் செய்தி அனுப்பியிருந்தார்.
என்னை கைது செய்த ஏன் என் உயிருக்கு ஆபத்துவிழைவிக்க நினைத்த சிங்களவர்கள்கூட என்னை இனவாதியென்று ஒருபோதும் சொன்னதில்லை. சாதிவாரியாக ஒடுக்கபட்ட தமிழ் மக்களிடமிருந்து சாதிவெறியன் என்கிற அவப் பெயரையோ வன்னி கிழக்குமாகாண மலையக தமிழ் மக்களிடமிருந்து யாழ்மையவாதி என்கிற அவப் பெயரையோ சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களிடமிருந்து இனவாதி என்கிற அவப் பெயரையோ நான் ஒருபோதும் பெற்றதில்லை என்பதுதான் நான் தேடிய செல்வம்.

அத்தனை ஒடுக்குதல்களுக்கும் எதிராக எழுந்தவர்களோடு நான் முன் வரிசையில் இருந்தேன். மேற்படி சகல பிரச்சினைகளுக்கும் எதிராக போராடி சம்பந்தபட்ட ஒடுக்குதலில் ஈடுபட்ட அரசினால் அல்லது அரசற்ற அமைப்புகளால் கைது செய்யபட்டு சிறைவைக்கபட்டிருக்கிறேன் இதுதான் என் வாழ்வின் சிறப்பு.


மக்கள்மீதான பன்முக ஒடுக்குதல்களுக்கு எதிரான போராட்டங்களைச் சமரசம் செய்துகொள்ளாமல் தமிழர்களின் சுய நிர்ணய உரிமைக்கு போராட வேண்டும் என்பதுதான் என் வாழ்வின் கோரிக்கை.


ஆனாலும் என் 8 வயசில் நான் சிங்களம் மட்டும் என்பதை ஏற்று சிங்களம் படிக்க மறுத்திருக்கிறேன். தமிழ்பேசும் மக்கள் சிங்களமும் சிங்கள மக்கள் தமிழும் படிக்க வேண்டுமென சொல்லியிருந்தால் யாருமே சிங்கள கல்வியை எதிர்த்திருக்க மாட்டார்கள். நானும் சிங்களம் படிதிருப்பேன். சிங்கள அரசு ஒடுக்குதல் ஆயுதமாக சிங்கள மொழியையும் புத்தர் சிலையையும் தமிழ்பேசும் மக்களின் பாரம்பரிய மண்ணில் திணித்ததால் அவை அரசியல் ரீதியாக நிராகரிக்கப்பட்டன அதனால் எனக்கு இப்பவும் சிங்களம் தெரியாது. ஆனாலும் 1970பதுகளில் யாழ்பல்கலைக் கழகத்தில் தமிழ் மக்களின் சுய நிர்ணயத்தை உரக்க பிரச்சாரம் செய்தபடிக்கு சிங்கள மாணவர்களின் விருப்ப தலைவனாக இருந்திருக்கிறேன்.
2
8 வயதில் இருந்து எப்பவும் அரசியல் ரீதியாக ஒடுக்குதலின் ஆயுதமான சிங்களதைத் திணிப்பதை எதிர்த்து வருகிறேன். தமிழ்ருக்கு சிங்களமும் சிங்களவருக்கு தமிழும் இரண்டாவது மொழியாக கற்பிக்கப் படுவதை எப்பவும் ஆதரித்தேன். எங்கள் காலத்தில் அத்தகைய சூழல் உருவாகவில்லை. அது துரதிஸ்ட்டவசமான சூழலாகும். ஆனால் அதற்கு எம் மூதாதையரல்ல சிங்கள அரசே முழுப் பொறுப்பையும் எடுக்க வேண்டும்.

சிங்கள மாணவர்களை தமிழ் படிக்கும்படி கேட்காமல் தமிழ் மணவர்கள்மீது சிங்களம் திணிக்கப்பட்டபோது படிக்காதே என்ற என் மூதாதையர்களை நான் ஒருபோதும் குற்றம் சொல்ல மாட்டேன். அரசின் சிங்களம் மட்டும் திணிப்பு வெற்றி பெற்றதாக ஒரு பிழையான சமிக்ஞை ஒடுக்கும் சிங்கள அரசசுக்கு தமிழர் தரப்பில் இருந்து அனுப்பப்படக்கூடாதென்ற என் மூதாதையரின் கவலை நியாயமானது.

எனக்கு 8 வயசிருக்கும்போது சிங்கள ஊரான மத்துகமவில் படித்தேன். அங்கு விரும்பி ரியூசன்போய் சிங்களம் படிக்க ஆரம்பித்தேன். ஆனால் சிங்களம் மட்டும் சட்டம் இரண்டு பிரதான கடச்சிகளதும் பூதாகரமான தேர்தல் பிரச்சாரமானபோது நானாகவே சிங்களம் படிக்க மறுத்துவிட்டேன். ஒடுக்கும் இனத்தின் மொழி கற்பது தொடர்பாக எது சரி எது பிழை என்று கேட்டால் அதற்க்கு அரசியல் ரீதியாக ஒடுக்கும் இனம் தன் மொழியை திணித்தால் அதைப் புறக்கணித்துவிடுக என்கிற பதில்தான் முன்னிலைப் படும். 8 வயசில் அதுதான் என் நிலைபாடாக இருந்தது. ஆனால் கொலொனியல் ஆதிக்கம் மற்றும் ஒடுக்கும் இன ஆதிக்கத்தை வென்ற எல்லோருக்கும் ஒடுக்கும் மொழி அறிவு உறுதுணையாக இருந்திருக்கிறது என வரலாறு சொல்கிறது.

3
யாழ் பல்கலைக் கழக மாணவர் சங்க விவகாரம் தொடர்பாக என்னிடம் கருத்துக் கோரப்படுகிறது'இந்தச் சமயங்களில் ஊகங்களில் இருந்து ஊகங்களுக்கு போகிற பதில்கள் ஆபத்தானவை. வன்முறைதொடர்பாக ஈடுபட்ட சகலரும் வருத்தம் தெரிவிப்பதும் சகல வழக்குகளும் வாபஸ் வாங்கப்படுவதும் தமிழ் முஸ்லிம் மலையக தமிழ் மாணவர்கள் சிங்கள மாணவர்களை வரவேற்பதும் முக்கியம்.

இனவாதமற்ற முறையில் தமிழ் மக்கள் முகம் கொடுக்கும் ஒடுக்குதல் பற்றியும் பெளத்த சின்னங்கள் இன ஒடுக்குதலின் சின்னமாக அரசாலும் அரசபடைகளாலும் முன்னிலைப் படுத்திவருகிற சூழல் தமிழ்பேசும் மக்கள் மனதில் உருவாக்கியுள்ள பதட்டம் பற்றியும் சிங்கள மாணவர்களுக்கு உணர்த்துவது முக்கியம்.

இத்தகைய உரையாடலை வெற்றிகரமாக தலைமை தாங்கி நிகழ்த்தும் ஆற்றல் முஸ்லிம் மற்றும் மலையக தமிழ் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் உள்ளமை அங்கீகரிக்கப்பட வேண்டும்
சிங்களமாணவர்கள் யாழ் பல்க்கழக மரபுகளை அங்கீகரித்து மதிக்கவேண்டுமென கோரும் அதே சமயம் ஏனைய பல்கலைக் கழகத்தில் தமிழ் மாணவர்கள் அனுபவிக்கும் உரிமைகளை சிங்கள மாணவர்களுக்கு பெற்றுக் கொடுப்பதும் மாணவர் சங்கத்தின் கடமையாகும். பண்டிகைக் காலங்களில் ஆரிய குளம் நாகவிகாரைக்கு சிங்கள மாணவர்கள் சென்றுவரும் ஏற்பாடுகளை பல்கலைக் கழகமே செய்துதரலாம்.

4
அரசின் சிங்களம் மட்டும் சட்டத்தால் எனது சிங்கள மொழிக் கல்வி பாதிக்கப்பட்டது. யாழ்பாண தமிழ் மேட்டுக்குடிகளின் சாதி ஒடுக்குதலால் எனது பள்ளிப் படிப்பே கல்வியே பாதிக்கப்பட்டது. சாதி எதிர்ப்புப் போராட்டத்தில் வன்முறையாளனாக ஈடுபட்டு வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட்து சிறையென எனது ஆங்கில வழிக் கல்வி பாதிக்கப்பட்டது. என் ஆங்கில கல்வி பாதிக்கப் பட்டமை இன்றுவரை என்னை பாதி மனிதனாகவே நசுக்கி வைத்திருக்கிறது.

என் இளமை எனக்கு மீண்டும் கிடைத்தால் சிங்கள கல்வி திணிப்பை நிராகரித்த அதே சமயம் எப்படியும் தனிப்பட்ட முறையில் சிங்களம் படித்துத் தேற்ச்சி பெற்றிருப்பேன்.

No comments:

Post a Comment