June 14, 2016

இரட்டை நிர்வாகம் மாகாண நிர்வாகத்தை வலுவற்றதாக்குகின்றது ; சி.வி. விக்னேஸ்வரன்!

இரட்டை நிர்வாகம் மாகாண சபை நிர்வாகத்தை வலுவிழக்கச் செய்வதாக வடமாகாண சபை முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.


மாவட்ட செயலாளர்கள், மாகாணசபைகளின் அதிகாரங்களின் கீழ் கொண்டு வரப்படவுள்ளார்கள் என வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் வடமாகாண  முதலமைச்சர் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக வடமாகாண சபை முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனிடம் வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

1987 ஆம் ஆண்டு இலங்கை இந்திய உடன்படிக்கையின் கீழ் அரசாங்க அதிபர்கள், மாவட்டச் செயலாளர்கள் ஆகியோர் மாகாணசபைகளின் அதிகாரத்தின் கீழ் காணப்பட்டார்கள்.

அதனால்த்தான் மாகாண சேவையில் கடமையாற்றும் பல அலுவலர்கள் மாவட்ட செயலாளர்கள் காரியாலயத்தில் மத்திய அரசாங்கத்துடன் தொடர்புடையவர்கள் போல் செயலாற்றுகின்றார்கள்.

அவர்கள்மாகாண சேவைக்குள் அடங்கியவர்கள் எனவும்  1992 ல் ஒற்றையாட்சிச் சட்டத்தின் கீழ் அரசாங்க அதிபர்கள் மாவட்டச் செயலாளர்கள் மத்திய அரசாங்கத்திடம் உள்ளீர்க்கப்பட்டார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

இதனால் இரட்டை நிர்வாகங்கள் மாகாணங்களில் நிலைபெற்றன. இந்த நிர்வாகங்களை ஒருங்கிணைத்து ஒருங்கிணைப்புக் கூட்டங்கள் ஒழுங்கு செய்யப்பட்டன.

அரசியல் யாப்புத் திருத்தத்தை தயாரிக்கும் போது இந்த விடயம் கவனத்திற்கு எடுக்கப்பட்டுள்ளது. இரட்டை நிர்வாகம் மாகாண நிர்வாகத்தை வலுவற்றதாக்குகின்றது.

எனவே வரவிருக்கும் புதிய அரசியல் யாப்பில் இது கவனத்திற்கு எடுக்கப்படும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment