June 11, 2016

யாழில் விடுவிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார் பிரித்தானிய உயர்ஸ்தானிகர்!

யாழ்ப்பாணத்திற்கு நேற்று விஜயம் செய்த இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டோறியஸ் இராணுவ உயர்பாதுகாப்பு வலயமாக இருந்து விடுவிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டுள்ளார்.


அத்துடன் மேலும் மீள்குடியேற்றம் செய்யப்பட வேண்டிய மக்களுடையதும், ஏற்கனவே மீள்குடியேற்றம் செய்யப்பட்டவர்களின் தேவைகள் தொடர்பாக தகவல்களையும் அவர் பெற்றுச் சென்றுள்ளார்.

குறிப்பாக இராணுவ உயர்பாதுகாப்பு வலயமாக இருந்து அண்மையில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட பகுதிகளான காங்கேசன்துறை, பளை, வீமன்காமம் மற்றும் வறுத்தளவிளான் பகுதிகளுக்கு சென்ற அவர் அங்கு மீள்குடியேறிய மக்களுடன் கலந்துரையாடியிருந்தார்.

இதன் போது மீள்குடியேறிய மக்களுக்கான தேவைகள் தொடர்பாகவும் , மீள்குடியேற்றப்பட்ட பின்னர் மக்கள் எதிர் கொள்ளும் சவால்கள் தொடர்பாகவும் கேட்டறிந்து கொண்டார்.

மீள்குடியேற்றம் செய்யப்பட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டுவரும் வீட்டுத்திட்டங்களையும் பார்வையிட்ட அவர், வீட்டுத்திட்டங்களின் குறைநிறைகள் தொடர்பாகவும் பயனாளிகளிடம் கேட்டறிந்து கொண்டார்.

இதுமட்டுமல்லாமல் இராணுவ உயர்பாதுகாப்பு வலய எல்லைகளில் உள்ள இராணுவ முகாங்களினால் மீள்குடியேறியவர்களுக்கு ஏதோனும் பாதிப்புக்கள் ஏற்படுகின்றதா என்ற வகையிலும் அவர் மக்களிடம் கருத்துகளை அறிந்து கொண்டார்.

இதன் பின்னர் யாழ்மாவட்டச் செயலகத்திற்கு விஜயம் செய்த அவர், யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகனையும் சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.

இந்த கலந்துரையாடலின் போது, வலி.வடக்கில்மீள்குடியேற்றம் செய்யப்பட வேண்டியவர்களுக்கும், அண்மையில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டவர்களுக்குமான தேவைகளை நிவர்த்தி செய்வதற்கான வழிமுறைகள் தொடர்பாகவும் ஆராய்ந்திருந்தார்.

மேலும் ஏனைய பகுதிகளில் அபிவிருத்திக்குமான செயற்றிட்டங்கள் தொடர்பாகவும் அரசாங்க அதிபரிடம் உயர்ஸ்தானிகர் தகவல்களைக் கேட்டறிந்து சென்றார்.

மேலும் வலி.வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து நலன்புரி முகாங்களில் தங்கியுள்ளவர்களை துரிதமாக மீள்குடியேற்றம் செய்வதற்கான வழிமுறைகள் தொடர்பாகவும், அதற்கான மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் அவர் அரசாங்க அதிபரிடம் கேட்டறிந்து கொண்டதுடன்,

அரசாங்க அதிபரால் தெரிவிக்கப்பட்ட விடையங்கள் தொடர்பாக உரிய கவனம் செலுத்தப்படும் என்றும் உயர்ஸ்தானிகர் அரச அதிபரிடம் உறுதியளித்திருந்தார்.

No comments:

Post a Comment