June 8, 2016

வடபகுதியில் உள்ள இராணுவ முகாம்களும் மாற்றப்பட வேண்டும்!

பொது மக்கள் உள்ள பகுதிகளில் இராணுவ முகாம்கள் உள்ளதால் ஏற்படும் இழப்புகளை கருத்திற்கொண்டு வடபகுதியிலுள்ள முகாம்களையும்
பொதுமக்களற்ற பகுதிகளுக்கு இடமாற்ற வேண்டுமென முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

யாழ். ஊடக அமையத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கொழும்பு கொல்கம சாலாவ பகுதி இராணுவ முகாமில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுதாபங்களை தெரிவித்த அவர் பொதுமக்கள் வாழும் பகுதிகளில் இராணுவ முகாம்கள் அமைக்கப்படுவதால் ஏற்படும் இழப்புகள் குறித்து விளக்கினார்.

இங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

சாலாவ இராணுவ முகாம் அமைக்கப்பட்ட பொழுது அந்தப் பகுதிக்கு பொறுப்பாக இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன இராணுவ முகாம் அமைக்க வேண்டாமென எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

இது இவ்வாறு இருக்கும் போது, வடமாகாணத்தில் பொது மக்களின் மத்தியில் எத்தனை முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இராணுவ முகாம்களில் வெடி பொருட்கள் இருக்குமென்பது தவிர்க்க முடியாதவை. பாரிய வெடி பொருட்கள் களஞ்சியப்படுத்தும் பகுதி இல்லா விட்டாலும், துப்பாக்கிகள் மற்றும் துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தும் தோட்டாக்கள் என்பன களஞ்சியசாலைகளில் இருக்கும்.இந்த முகாம்களுக்குள் ஏதாவது வெடி சம்பவங்கள் இடம்பெற்றால், எத்தனை ஆயிரம் தமிழ் மக்கள் உயிரிழப்பர்.

வடமாகாணத்தில் இருந்து இராணுவத்தினரை வெளியேற்றுமாறு கூறிய போது, தினேஷ் குணவர்த்தன உட்பட பலர் எதிர்த்தனர்.சாலாவ சம்பவத்தின் பின்னராவது சரி, மக்கள் மத்தியில் இராணுவ முகாம்கள் இருக்க கூடாது என அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழ் மக்கள் மத்தியில் கொண்டு வரப்பட்டுள்ள இந்த நூற்றுக்கணக்கான இராணுவ முகாம்கள் அகற்றப்பட்டு, மக்கள் நடமாட்டம் இல்லாத இடங்களுக்கு இராணுவ முகாம்கள் மாற்றப்பட வேண்டும் என்பதனை அரசாங்கம் நிச்சயம் புரிந்துகொள்ள வேண்டும்.

தமிழ் மக்களின் பாராளுமன்ற உறுப்பினர்களும், தமிழ் மக்களின் தமிழ் தலைமைத்துவங்களும் இந்த விடயத்தை வலியுறுத்த வேண்டும்.

ஏற்கனவே பல லட்சம் மக்களை நாம் இழந்துள்ளோம், இந்த இழப்புக்களை சிங்கள மக்களும் நேரடியாக அனுபவிக்கின்றார்கள்.

ஒரு இராணுவ முகாமால் இவ்வாறான பாரிய பிரச்சினைகளை உருவாக்க முடியுமென்றால், வடபகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான முகாம்களால் எவ்வளவு பெரிய அனர்த்தம் ஏற்படக் கூடும்.

எனவே, தினேஷ் குணவர்த்தன போன்று இனவாதம் பேசக் கூடியவர்கள் இதை உணர்ந்து, வடபகுதியில் உள்ள இராணுவ முகாம்களை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துவதாக அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment