June 16, 2016

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடு சர்வதேசத்திற்கு முன்னுதாரணம் ; துருக்கி வெளிவிவகரா அமைச்சர்!

யுத்தத்திற்கு பின்னர் இலங்கை அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் நல்லிணக்க செயற்பாடுகள், ஏனைய சர்வதேச நாடுகளுக்கு சிறந்த முன்னுதாரணம் என துருக்கியின் வெளிவிவகரா அமைச்சர் மேவ்லூட் சவுஸ்வோக்லி தெரிவித்துள்ளார்.


இரண்டு நாள் உத்தியோகபூர் விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள துருக்கியின் வெளிவிவகார அமைச்சர், நேற்று (புதன்கிழமை) வெளிவிவகார அமைச்சில் அமைச்சர் மங்களவுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டதன் பின்னர், ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்குறித்தவாறு குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்-

”இலங்கையின் அபிவிருத்தி மற்றும் ஏனைய செயற்பாடுகளுக்கு உதவுவதற்கு துருக்கி அரசாங்கம் தயாராக உள்ளது. கடந்த காலங்களில் இலங்கையில் வெள்ளம் மற்றும் மண்சரிவு உள்ளிட்ட இயற்கை அனர்த்தங்களால், பல அழிவுகள் ஏற்பட்டன. இவர்களுக்கு உதவ நாம் தயாராக உள்ளோம்.

தற்போது இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் நல்லிணக்கம் மற்றும் புரிந்துணர்வு செயற்பாடுகளுக்கு எமது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம். இச் செயற்பாடுகள் சர்வதேசத்திற்கு முன்னுதாரணமாக அமைகின்றன.

இதேவேளை, இலங்கையின் வர்த்தக மற்றும் பொருளாதார அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு, துருக்கியின் சர்வதேச வர்த்தக நிறுவனங்களூடாக ஒத்துழைப்புக்களை வழங்க எதிர்பார்த்துள்ளோம். அத்தோடு, துருக்கியின் ஜனாதிபதியும் இலங்கைக்கு இவ்வருடத்திற்குள் விஜயம் மேற்கொள்ள தயாராக உள்ளார்” என்றார்.

No comments:

Post a Comment