September 23, 2015

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா சபை முன்றலில் அணிதிரண்ட ஆயிரக்கணக்கான தமிழ்மக்கள்!(படங்கள் இணைப்பு)

ஈழத்தமிழர்கள் எங்கு வாழ்ந்தாலும் தமது உணர்வுகள் அனைத்தும் தாயகத்தை நோக்கியே துடிக்கின்றது என்பதற்கமைவாக, சிறிலங்கா பேரினவாத அரசினால் தொடர்ச்சியாக தமிழ் மக்கள் மீது
மேற்கொள்ளப்பட்டுவரும் இன அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கிய மாபெரும் கவனயீர்ப்பு பேரணியில் ஆயிரக்கணக்கில் கலந்து கொண்டனர்.
21.09.2015 திங்கட்கிழமை அன்று சுவிஸ் நாட்டின் ஜெனிவா தொடரூந்து நிலையத்திற்கு அருகாமையில் உள்ள பூங்காவில் ஆரம்பிக்கப்பட்ட கவனயீர்ப்பு பேரணியானது உலகத்தமிழர்களின் ஒன்றுபட்ட உரிமைக்குரலாக ஒலிக்க, அவர்கள் தாங்கிய பதாகைகள் மூலம் வேற்றின மக்களுக்கு எடுத்துரைத்து, நகர்ந்து ஈகைப்பேரொளி முருகதாசன் திடலை வந்தடைந்தது. இக் கவனயீர்ப்புப் பேரணியில் ஐரோப்பாவின் பல பாகங்களிலிருந்தும் வருகை தந்த ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு தங்கள் உரிமைக்குரலை எழுப்பினர்.

பொதுச்சுடரேற்றலுடன் ஆரம்பமாகிய ஒன்றுகூடலானது தமிழீழத் தேசியக்கொடியேற்றப்பட்டு தியாகதீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களுக்குரிய ஈகைச்சுடருடன் ஈழத்தமிழர்களின் விடியலுக்காக தீயினில் தம்மையே ஆகுதியாக்கிய ஈகைப்பேரொளிகளுக்குரிய ஈகைச்சுடர்களும் ஏற்றப்பட்டு மலர்மாலை அணிவித்தலுடன் அகவணக்கம் மலர்வணக்கத்துடன் உறுதிமொழியும் எடுக்கப்பட்டது.

தமிழீழத்தில் நடைபெற்ற தமிழின அழிப்பிற்கு சர்வதேசவிசாரணை நடாத்த வேண்டுமெனவும்;, தமிழீழத்திற்கான சர்வசன வாக்கெடுப்பு ஐக்கிய நாடுகள் அவையின் கண்காணிப்பில் நடாத்தக் கோரியும் வலியுறுத்திய இப் பேரணியில், தமிழகத்திலிருந்து கலந்து சிறப்பித்த இன உணர்வாளர்கள்;, வேற்றின மனிதநேய செயற்பாட்டாளர்கள், இளையோர்கள் மற்றும் ஈருருளி பயணத்தை மேற்கொண்ட மனிதநேய செயற்பாட்டாளர்களின் கருத்துரை, எழுச்சி உரைகளுடன், பேரணிக்கான பிரகடனமும், உணர்வு வெளிப்பாடுகளும் இடம்பெற்றிருந்தன.

இறுதியாக நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்ற பாடலுடன் தமிழீழத் தேசியக்கொடி இறக்கப்பட்டு தமிழர்களின் தாரக மந்திரத்துடன் நிகழ்வுகள் யாவும் எழுச்சியாகவும், உணர்வுபூர்வமாகவும் நிறைவு பெற்றன.


சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு





































No comments:

Post a Comment