September 4, 2015

சர்வதேச அழுத்தங்களில் இருந்து அரசாங்கத்தினை பாதுகாக்கும் முயற்சியில் கூட்டமைப்பு செயற்படக் கூடாது!

இலங்கை அரசாங்கத்தினால் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு வழங்கப்பட்டுள்ள எதிர் கட்சித் தலைவர் மற்றும் பாராளுமன்ற பிரதிக் குழுக்களின் தலைவர் பதவிகளை பயன்படுத்தியாவது தமிழ் மக்களின்
இனப்பிரச்சினைக்கான தீர்வினை எட்டுவதற்கான வாய்ப்பாக பயன்படுத்த வேண்டும் என்று வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கேட்டுக் கொண்டுள்ளார்.
மாறாக நாட்டில் நல்லிணக்கம் ஏற்பட்டுவிட்டது என்பதை சர்வதேச கண்களுக்கு காட்டி சர்வதேச அழுத்தங்களில் இருந்து இலங்கை அரசாங்கத்தினை பாதுகாக்கும் முயற்சியில் கூட்டமைப்பு செயற்படக் கூடாது என்றும் அவர் தமிழ் தேசியக் கூட்டமைப்பினை வலியுறுத்தியுள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தில் இன்று நண்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்:-
நடைபெற்று முடிந்த 8 ஆவது பாராளுமன்ற தேர்தல் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. குறிப்பாக இக் கேள்விகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பினை நோக்கியும் அதில் அங்கத்துவம் வகிக்கும் ரேலோ கட்சியினை நோக்கியும் எழுந்துள்ளது.
அதாவது தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிர் கட்சித் தலைவர் மற்றும் பாராளுமன்ற குழுக்களிக் தலைவர் ஆகிய பதவிகள் வழங்கப்பட்டது சம்மந்தமாகவே இக் கேள்விகள் எழுப்பப் படுகின்றன.
எதிர்க் கட்சித் தலைவர் பதவி, பாராளுமன்ற பிரதிக் குழுக்களின் தலைவர் பதவி என்பது அரசாங்கத்திற்கு சொந்தமான பதவிகள் இல்லை. அவை பொதுவான பதவிகளாகும். அதனை பெறுப்பேற்பதை வேறுவிதமாக பார்க்கத் தேவையில்லை.
ஆனாலும் எதிர் கட்சிப் பதவியினை பொறுத்தவரையில் கடந்த காலத்தில் எதிர் கட்சித்தலைவர் பெறுப்பினை பெற்றிருந்த அமிர்தலிங்கம் தமிழ் மக்களுக்கு பல உதவிகளை செய்திருந்தார். மேலும் எதிர் கட்சித் தலைவர் பதவியினை அவர் திறம்பட நடத்தியிருந்தார்.
அவர் போன்று இரா.சம்மந்தனும் திறம்பட செயற்பட வேண்டும். தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்க செயற்பட வேண்டும்.
இலங்கை அரசாங்கம் தற்போது நாட்டில் நல்லாட்சி நடைபெறுகின்றது என்றும், ஜனநாயகம் நிலவுகின்றது என்றும் சர்வதேசத்தினை நம்புவைப்பதற்கான செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது.
இந்நிலையில் இப்பதவிகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு வழங்கிவிட்டும் அதனை சர்வதேசத்தின் அழுத்தங்களில் இருந்து தாம் தப்பித்துக் கொள்வதற்கான பயன்படுத்திக் கொள்ள முனைவார்கள்.
இதற்கு நாம் இடம்கொடுக்கக் கூடாது. தமிழ் மக்கள் எங்களுக்கு ஒரு ஆணையினை தந்துள்ளானர். அவர்களுடைய ஆணையினை ஏற்று நாம் காலத்தினை வீணடிக்காமல் பிரச்சிணைக்கான தீர்வினை நோக்கி நகர வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

No comments:

Post a Comment