May 16, 2015

கூட்டமைப்பிற்கு அனுமதி! தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு தடை!

முள்ளிவாய்க்காலில் மே18 நினைவேந்தல்களை நடத்த தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு தடைவிதிக்கப்பட்டுள்ள போதும் தமிழ் தேசியக்கூட்டமைப்பிற்கு அரச தரப்பிலிருந்து சாதகமான சமிக்ஞை வெளியிடப்பட்டுள்ளது.


உயிரிழந்த மக்களை நினைவு கூர தடையில்லையெனவும் எனினும் தடை செய்யப்பட்ட அமைப்பினை சேர்ந்தவர்களை நினைவு கூர அனுமதியில்லையெனவும் வடபிராந்திய பொலிஸ்மா அதிபர் அனுமதி தொடர்பினில் தொடர்பு கொண்ட வடமாகாணசபை அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானத்திற்கு தகவல் வழங்கியுள்ளதாக தெரியவருகின்றது.

இதனிடையே முள்ளிவாய்க்காலில் நினைவேந்தல் நிகழ்வினில் கலந்து கொள்ள அனைத்து கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கும் மற்றும் வடமாகாணசபை உறுப்பினர்களிற்கும் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளார்.

எனினும் கடந்த 11ம் திகதியே முள்ளிவாய்க்காலில் நினைவேந்தலிற்கு அழைப்பு விடுத்திருந்ததுடன் அதனை ஊடகங்கள் மூலமும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி அறிவித்திருந்தது.

எனினும் தம்மை தொடர்பு கொண்ட பொலிஸ் அதிகாரியொருவர் முன்னணியுடன் முரண்பட்ட அமைப்பொன்றும் முள்ளிவாய்க்காலில் நினைவேந்தலை நடத்த இருப்பதாகவும் இருதரப்பும் நிகழ்வுகளை நடத்த முற்பட்டால் முரண்பாடு ஏற்படுமெனவும் அதனால் முன்னணிக்கு தடைவிதிக்க முடிவு செய்யப்பட்டதாகவும் அறிய தந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.எனினும் முன்னதாக அனுமதி கோரிய தமக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு கூட்டமைப்பிற்கு அனுமதி வழங்கப்பட்டமை தொடர்பினில் ஆட்சேபனைகள் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் தெரிவிக்கப்பட்ட போதும் இது உயர்மட்ட முடிவென தெரிவித்ததாகவும் அறிய முடிகின்றது.

எனினும் முன்னதாக அறிவிக்கப்பட்டது போன்று மட்டக்களப்பு வாகரையிலும் வடக்கிலும் நினைவேந்தல்கள் முன்னெடுக்கப்படுமென தமிழ் தேசிய மக்கள் முன்னணி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே வடக்கு முதலமைச்சருடன் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தானும் முள்ளிவாய்க்கால் சென்று நினைவேந்தல் நிகழ்வினில் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவித்தார்.எனினும் கட்சி தலைவர் சம்பந்தன் இந்நிகழ்வினில் கலந்து கொள்வாரா என்பது பற்றி தகவல்களில்லை.

No comments:

Post a Comment