September 7, 2014

தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் சார்பில் தமிழீழம் ஈழம் தொடர்பான தீர்மானங்கள்!!

தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் சார்பில் தமிழீழம், தமிழக மக்கள் நலன்கள் குறித்து அனைத்து அமைப்புகளின் அவசரக் கலந்தாய்வுக்கூட்டம் 06.09.2014 அன்று சென்னையில் இடம்பெற்றது. அந்தக் கலந்தாய்வுக்கூட்டத்தில்
எடுக்கப்பட்ட ஈழம் தொடர்பான தீர்மானங்கள்...
1) தமிழீழம் மக்கள் இனக்கொலை தொடர்பாக ஐ.நா. மனித உரிமை மன்றத் தீர்மானத்தின்படி அமைக்கப்பட்டுள்ள பன்னாட்டுப் புலனாய்வுக்கு இந்திய அரசு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இந்தியாவில் குறிப்பாகத் தமிழ்நாட்டில் ஈழ இனப்படுகொலைக்கு சான்றுரைக்கக் கூடியவர்கள் ஏராளமாய் இருந்து வரும் நிலையில் புலனாய்வுக் குழுவும் புலனாய்வு அறிவுரைக் குழுவும் தங்கு தடையின்றி இந்தியா வந்து செல்லவும், இந்தியாவில் தங்கிப் போதிய அளவு புலனாய்வுகள் செய்யவும் இந்திய அரசும் தமிழக அரசும் ஒத்துழைக்க வேண்டும். இந்தப் புலனாய்வை இந்தியா ஏற்காது என்று இந்திய அயலுறவுத் துறை அமைச்சரும் இந்தியாவிற்கு வர விசா தரமாட்டோம் என்று இந்திய அரசு அதிகாரிகளும் அறிவித்திருப்பது அதிர்ச்சிக்கும் கண்டனத்துக்கும் உரியது.
இனக்கொலைக்குத் துணை போன பழைய காங்கிரஸ் கூட்டணி அரசின் அதே தமிழினப் பகைக் கொள்கையை நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசும் தொடர்ந்து மேலும் தீவிரமாகக் கடைபிடித்து வருவதையே இந்நிகழ்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.
இந்திய அரசு இப்போக்கை மாற்றிக் கொண்டு ஈழத் தமிழர் இனக்கொலைக்கான பன்னாட்டுப் புலனாய்வுக்கு ஒத்துழைப்புக் கொடுத்து ஈழத் தமிழருக்கு நீதி கிடைக்க ஆவண செய்யுமாறு இக்கூட்டம் வலியுறுத்துகிறது. தமிழக அரசும் தன்னளவில் இந்த முயற்சிக்கு துணை நிற்கக் கோருகிறது.
2) இனக்கொலைக் குற்றவாளியும் ஐ.நா. மனித உரிமை மன்றத் தீர்மானங்களைப் பற்றி கவலைப்படாமல், பன்னாட்டுப் புலனாய்வுக் குழுவை இலங்கைக்குள் நுழையவிடமாட்டோம் என்று கொக்கரித்துக் கொண்டிருப்பவருமான மகிந்த ராஜபக்சவை ஐ.நா.பொதுச் செயலவையில் உரையாற்ற அழைத்திருப்பதை இக்கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது.
இந்த அழைப்பை விலக்கிக் கொள்ளும்படி வலியுறுத்துகிறோம். ராஜபக்ச உரையாற்றும் ஐ.நா. மன்றத்தை முற்றுகையிட உலகத் தமிழர்கள் நடத்தி வரும் இயக்கத்துக்கு இக்கூட்டம் தமிழகத் தமிழர்களின் சார்பில் தன் தோழமையைத் தெரிவித்துக் கொள்கிறது.
3) ஒற்றையாட்சிக்குட்பட்ட 13வது அரசமைப்புத் திருத்தத்தையும் அதன் அடிப்படையிலான வடக்கு மாகாண சபையும் ஈழத் தமிழர் இனச் சிக்கலுக்கான அரசியல் தீர்வாக முன்னிறுத்தும் இந்திய அரசின் நயவஞ்சக முயற்சியை இக்கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது.
பொதுசன வாக்கெடுப்பின் மூலம் தமிழீழ இறைமையை மீட்பது அல்லாத எந்தத் தீர்வும் தமிழீழ மக்களின் நலவுரிமைக்குப் பயன்படாது என்று இக்கூட்டம் உறுதியாக நம்புகிறது.
இடைக்காலத்தில் தமிழீழ மக்கள் மீதான கட்டமைப்பில் இன அழிப்பைத் தடுத்த நிறுத்த ஐ.நா. ஒரு பாதுகாப்புப் பொறியை நிறுவன வேண்டும் என இக்கூட்டம் கோருகிறது.
4) தமிழீழ மக்களின் நீதிக் கோரிக்கை தொடர்பாகவும், பிற நலவாழ்வுக் கோரிக்கைகள் தொடர்பாகவும் ஐ.மு.கூட்டணி அரசின் வழித் தோன்றலாகவே இப்போதைய மோடி அரசும் செயல்பட்டு வருவது கண்டனத்துக்குரியது. பதவியேற்புக்கு இராஜபக்சவை அழைத்ததும், பன்னாட்டுப் புலனாய்வுக்கு ஒத்துழைக்க மறுத்து வருவதும், மீனவர் சிக்கல், கச்சதீவு ஆகியவை தொடர்பாக பழைய அரசின் நிலைப்பாட்டையே தொடர்ந்து வருவதும் கண்டனத்துக்குரியது.
5) தமிழினப் பகைவன் சுப்பிரமணியன் சுவாமி இந்திய அரசின் கொள்கை வகுப்புக் குழுவின் உறுப்பினர் என்ற முறையில் கொழும்புக்கு சென்று படைத்துறை பயிற்சி முகாமில் கலந்து கொள்கிறார். பன்னாட்டுப் புலனாய்வு குறித்தும் தமிழ் மீனவர் சிக்கல் தொடர்பாகவும் இலங்கை அரசின் நிலைப்பாட்டை முழுமையாக நியாயப்படுத்திப் பேசியுள்ளார்.
சுப்பிரமணியன் சுவாமி தமிழகத்தில் நுழையவும் எவ்வித நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவும் உணர்வுள்ள தமிழர்கள் சார்பில் தடை விதிப்பது என்று இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
6) ஈழத் தமிழர் இனக் கொலை தொடர்பாக நடைபெறும் பன்னாட்டுப் புலனாய்வுக்கு நாமும் இனக்கொலை சான்றுகளைத் திரட்டி அனுப்ப முடியும். அதற்கான மின்னஞ்சல் முகவரிகளும் வெளியிடப்பட்டுள்ளன.
தமிழகத்தில் இருந்து சிங்கள அரசின் குற்றங்களுக்கு எதிரான புலனாய்வுச் சான்றுகளைத் திரட்டி அனுப்பும் முயற்சிகளை மேற்கொள்ள தமிழகத்துக்குத் தமிழர்களுக்கும் இவ்வமைப்பு வேண்டுகோள் விடுக்கிறது.
7) தமிழகத்தில் ஈழத் தமிழ் ஏதிலியர்கள் சர்வதேசச் சட்டங்களுக்கும் உள்நாட்டுச் சட்டங்களுக்கும் புறம்பாகவும் மனிதத் தன்மையற்ற முறையில் நடத்தப்பட்டு வருவது வேதனை அளிக்கிறது.
குறிப்பாகச் சிறப்பு முகாம்கள் சிறை முகாம்களவே செயல்பட்டு வருகின்றன. சிறப்பு முகாம்களை உடனே இழுத்து மூடும்படியும் இக்கூட்டம் தமிழக அரசை வலியுறுத்துகிறது. ஏதிலியர் தொடர்பான 1951 ஜெனிவா ஒப்பந்தத்திலும் 1067 வகைமுறை உடன்படிக்கையிலும் இந்தியா கையொப்பமிட வேண்டும் என இக்கூட்டம் வலியுறுத்துகிறது. தமிழகத்தில் உள்ள ஈழத் தமிழ் ஏதிலியருக்கு இடைக்கால இந்தியக் குடியுரிமை வழங்க வலியுறுத்துகிறோம்.
8) இனக்கொலை புரிந்ததோடு ஐ.நா. மனித உரிமை மன்றப் புலனாய்வுக்கும் அனுமதி மறுக்கும் இலங்கை அரசைப் பணிய வைக்க ஐநாவும் உலக நாடுகளும் உறுப்பு தடைகள் (Sanctions) விதிக்க வேண்டுமென இக்கூட்டம் வலியுறுத்துகிறது. அரசியல், பொருளியல், பண்பாட்டுத் துறைகளில் இலங்கையைப் புறக்கணிக்கும் இயக்கத்தை உலகத் தமிழர்களோடு சேர்ந்து தமிழக மக்களும் தீவிரமாக முன்னெடுக்க இக்கூட்டம் அறைகூவி அழைக்கிறது.

No comments:

Post a Comment