யாழ். குருநகர் பகுதியில் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட ஜெரோம் கொன்சலிற்றா (வயது 22) இறப்பதற்கு முன்னர் அவர், பாலியல் ரீதியில் துன்புறுத்தப்பட்டார? என்பது தொடர்பான
விசாரணைகளை மேற்கொள்ளுமாறு யாழ்.நீதவான் நீதவான் நீதிமன்ற பொ.சிவகுமார், யாழ்ப்பாணப் பொலிஸாரிற்கு இன்று வியாழக்கிழமை (24) உத்தரவிட்டார்.
இவரது மரணம் தொடர்பான சட்ட வைத்தியதிகாரியான சி.சிவரூபனின் விசாரணை அறிக்கை, இன்று 24 ஆம் திகதி நீதிமன்றத்தில் வாசிக்கப்பட்டது. இதனையடுத்தே நீதவான் மேற்கண்டவாறு பணித்ததுடன் வழக்கை செப்டெம்பர் 9ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
இந்த வழக்கு, ஜூலை 10 ஆம் திகதி வியாழக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சட்ட வைத்தியதிகாரி மன்றில் ஆஜராகி வாக்கு மூலமளித்தார். அத்துடன், கொன்சலிற்றாவின் தொலைபேசி பாவனை தொடர்பான 3 மாதகால அறிக்கையை யாழ்ப்பாணப் பொலிஸார் அன்றைய தினம் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர்.
இதேவேளை, கொன்சலிற்றா கன்னித் தன்மை இழக்கவில்லையெனவும், அவர் நீரில் மூழ்கியே உயிரிழந்துள்ளதாகவும் சட்டவைத்தியதிகாரி கடந்த மே 12 ஆம் திகதி மன்றில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்ட போதே நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளார்.
யாழ். குருநகர்ப் பகுதியினைச் சேர்ந்த ஜெரோம் கொன்சலிற்றா கடந்த ஏப்ரல் மாதம் 14 ஆம் திகதி குருநகர் சென். பற்றிக்ஸ் கல்லூரிக்கு பின்னாலுள்ள கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார்.
தொடர்ந்து இவருடைய மரணத்திற்கு ஆயர் இல்லத்தில் இருக்கும் இரண்டு பாதிரியார்கள் தான் காரணம் என்று அவருடைய பெற்றோர் மற்றும் உறவினர்களினால் தெரிவிக்கப்பட்டதுடன் ஆயர் இல்லத்திற்கு முன்னால் கொன்சலிற்றாவின் உறவினர்கள் அவரது சடலத்தை ஏப்ரல் 16 ஆம் திகதி வைத்து போராட்டம் செய்தனர்.
மறைக்கல்வி கற்பிப்பதற்குச் சென்ற கொன்சலிற்றாவினை பாதிரியார்கள் பாலியல் தொந்தரவு செய்து கொன்லிற்றாவின் மரணத்திற்கு காரணமாகினர்கள் என அவர்கள் இதன்போது தெரிவித்தனர்.
இந்நிலையில் கடந்த ஏப்ரல் 23 ஆம் திகதி மேற்படி வழக்கு நீதிமன்றத்தினால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, எனது மகளின் மரணத்திற்கு ஆயர் இல்லத்தில் பாதிரியார்கள் இருவரே காரணம் என அவரது தாயும், எனது மகள் கொலை செய்யப்பட்டு கிணற்றில் போடப்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாக அவரது தந்தையும் தெரிவித்திருந்தனர்.
No comments:
Post a Comment