May 4, 2014

கூட்டமைப்பின் கொள்கை வகுப்பு தனிநபர் முடிவல்ல! சுரேஸ் பிறேமச்சந்திரன் சீற்றம்!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கொள்கை வகுப்பு என்பது ஒரு சிலர் மட்டும்
மேற்கொள்ளும் ஒரு செயலாக இருக்க முடியாது அவ்வாறு வகுக்கப்படும் கொள்கைகள் வெற்றிகரமானதாகவும் அமையாதென தேசியப்பட்டியல் நாடாளுமன்ற சுமந்திரனிற்கு பதிலடி வழங்கியுள்ளார் சுரேஸ்.அத்துடன் எல்லோரது அறிவுகளும் அனுபவங்களும் ஒருங்கு திரட்டப்படும்போதே, மக்கள் நலனை முன்னிறுத்தக்கூடிய தேர்ந்த கொள்கைகளை வரைய முடியும் என்று தெரிவித்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன். 

இன்று காலை, யாழ்ப்பாணம் - நீர்வேலியில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதேச செயலகத்தைத் திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், மற்றும் பல வட மாகாண சபை உறுப்பினர்களும், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களும் பிரசன்னமாகியிருந்த இந்த நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய சுரேஷ் பிரேமச்சந்திரன்- 

“தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை அடைவதற்காக, சர்வதேச மயப்பட்ட ஒரு போராட்டத்தை நாம் நடத்திவருகின்றோம். இந்தப் போராட்டத்தில் பலதரப்பட்ட பங்குதாரர்கள் இருக்கின்றார்கள் என்பதுதான் உண்மை. ஒருசில தனி ஆட்களால் இது முன்னெடுக்கப்படுவதில்லை.” “தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், இந்த நாட்டிலே இருக்கின்ற தமிழ் மற்றும் சிங்களச் சமூகச் செயற்பாட்டாளர்கள், வேறு அரசியற் செயற்பாட்டாளர்கள், புலம்பெயர்ந்து வாழும் தமிழ் செயற்பாட்டாளர்கள், தமிழ்நாட்டிலே இருக்கின்ற தமிழ் உணர்வாளர்கள் என – ஏராளமான அனுபவசாலிகள், அறிஞர்கள், உணர்வாளர்களின் ஒட்மொத்தமான உழைப்பு இந்தப் போராட்டத்திலே இருக்கின்றது.” 

“முழுமையாக என்று சொல்ல முடியாதுவிடினும் கூட, சர்வதேச மட்டத்திலான இந்தப் போராட்டம் குறிப்பிடத்தக்க அளவிலான சாதகமான விளைவுகளை ஏற்கெனவே ஏற்படுத்த தொடங்கியிருக்கின்றது. அத்தகைய சாதகமான விளைவுகளில் ஒன்றுதான் - ஐ. நா. மனித உரிமைகள் பேரவையின் ஜெனீவா அமர்வுகளில் இலங்கை தொடர்பாகத் தொடர்ந்து நிறைவேற்றப்பட்டுவரும் தீர்மானங்கள். குறிப்பாக - சுயாதீனமான சர்வதேச விசாரணை ஒன்று பற்றிக் குறிப்புணர்த்தியிருக்கும் இந்த வருட தீர்மானம். இத்தகைய வெற்றிகள் ஒருசில தனிநபர்கள் ஏற்படுத்தியது அல்ல ஒருசில தனிநபர்களால் இத்தகைய சர்வதேசமயப்பட்ட - வியாபித்த பரிமாணங்களைக் கொண்ட - வெற்றிகளை ஏற்படுத்திவிடவும் முடியாது. 

இந்த வெற்றிகளுக்கு உரிமைகோரி, தனிநபர்கள் தமக்குத் தாமே கிரீடங்களைச் சூடிக்கொள்ளவும் கூடாது.” “இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்ற எல்லோரது அறிவும், உணர்வும், அனுபவமும், உழைப்பும் கலந்ததால்தான் இந்த வெற்றிகள் சாத்தியமாகின என்ற உண்மையை உணர்ந்து, அதனை ஏற்றுக்கொள்ளும் பண்பும், எல்லோரோடும் சேர்ந்தியங்கும் மனப்பாங்கும் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் அனைவருக்கும் இருக்க வேண்டும். அப்போதுதான் - அடுத்த கட்ட நகர்வுகளை நன்கு திட்டமிட்டு ஆக்கபூர்வமானதாக ஆக்குவற்கு ஏற்ற ஒத்தழைப்பு எல்லோரிடமிருந்தும் கிடைக்கும்” என்று குறிப்பிட்டார். 

நடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் அங்கு தொடந்து உரையாற்றும் போது - இன்று சர்வதேச அரங்கிலே தமிழர்களுடன் தொடர்புபட்ட, அல்லது தமிழர்களைத் தொடர்புபடுத்திய பல ராஜதந்திரக் காய்நகர்த்தல்கள் மேற்கொள்ளப்படுகின்றன. 2009ஆம் ஆண்டுக்கு முன்னைய போர்க் காலத்தில் நிகழ்ந்த குற்றங்களை மையப்படுத்தி உலகின் முதன்மையான சில மேற்குலக நாடுகள் இந்த காய்நகர்த்தல்களைச் செய்கின்றன. இந்த நகர்வுகள் எல்லாமே தமிழர்களுக்காகவே செய்யப்படுகின்றன என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சில உறுப்பினர்கள் சொல்லுகின்ற போதும், அதுவே முழுமையான உண்மையும் அல்ல. 

இந்த நாடுகள் எல்லாமே தத்தமது தேசிய பாதுகாப்பு மற்றும் பொருளாதார நலன்கள் சார்ந்தே இந்த காய்நகர்த்தல்களைச் செய்கின்றன. அத்தோடு - தமிழர்களுக்காகச் செய்யப்படுவதாகச் சொல்லப்படும் இந்த காய்நகர்த்தல்கள் உண்மையில் தமிழர்களால் செய்யப்படுவதும் இல்லை. மாறாக – நமது நலன்களை முன்னிறுத்தி காய்களை நகர்த்தும் மூலகர்த்தாக்களாக நாமே இருப்பதற்குப் பதிலாக - தமது நலன்களை முன்னிறுத்தி உலக நாடுகள் செய்யும் சதுரங்க நகர்த்தல்களில் வெறும் காய்களாகவே இன்றுவரை நாம் இருக்கின்றோம் என்பதுதான் உண்மை. கூட்டு முயற்சியின் காரணமாக - ஜெனீவாத் தீர்மானம் போன்ற மிக மிகச் சிறிய தொடக்கப்படிகளில் நாம் சில சாதகமான விளைவுகளைப் பெற்றிருக்கின்ற போதும், அமெரிக்கா, பிரிட்டன் போன்ற மேற்குலக நாடுகளால் நகர்த்தப்படும் காய்களாகவே இன்றுவரை தமிழர்களும் தமிழர் பிரச்சனையும் இருக்கின்றது. 

அத்தோடு - இன்னுமொரு விடயத்தைக் கருத்தில் எடுக்கவும் நாம் தவறக்கூடாது. போர்க் காலத்தில் நடந்த நிகழ்வுகள் மீது விசாரணைகள் நடந்து, அவற்றுக்குப் பொறுப்பானவர்களுக்குத் தண்டனைகள் வழங்கப்பட்டாலும் கூட – தமிழ் தேசியப் பிரச்சனைக்குத் தீர்வு கிடைத்துவிடும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. ஏனெனில் - ஜெனீவா தீர்மானமும், அது பரிந்துரைக்கின்ற சுயாதீன சர்வதேச விசாரணைப் பொறிமுறையும் தமிழ் தேசிய இனப்பிரச்சனை பற்றியோ, அல்லது அதற்கான ஒரு அரசியற் தீர்வு பற்றியோ எதுவும் பேசவில்லை என்பதை நாம் கவனத்தில் எடுக்க வேண்டும். ஏனென்றால் - தமது தேசிய நலன்களைக் காப்பதற்கான காய்நகர்த்தல்களைச் செய்யும் சக்திகளுக்கு, தமது நோக்கங்களை அடைவதற்கேற்ற ஒர் ஆட்சிமாற்றமே இங்கு அவசியமானதாக இருக்கின்றதே அல்லாமல், தமிழர் பிரச்சினைக்கான ஓர் அரசியல் தீர்வு அல்ல. 

அவ்வாறான ஒர் ஆட்சிமாற்றம் இங்கு நிகழ்ந்தால் கூட, தமிழர் பிரச்சினைக்கு ஒர் அர்த்தமுள்ள தீர்வை அடுத்த ஆட்சி வழங்கும் என்பதற்கோ, அல்லது அந்த முயற்சியில் அவர்கள் விசுவாசமாகச் செயற்படுவார்கள் என்பதற்கோ எந்த உத்தரவாதமும் இல்லை. எனவே – வேறு ஆட்களின் நலன்களிற்காக நகர்த்தப்படுகின்ற காய்களாக அல்லாமல், நமது நலன்களிற்காகவே காய்களை நகர்த்துகின்றவர்களாகத் தமிழர்கள் மாற வேண்டும். அப்போது தான் - ஆக்கபூர்வமானதும், கொளரவமானதும், நிலைக்கக்கூடியதும், சர்வதேச அங்கீகாரம் பெற்றதுமான ஒரு அரசியற் தீர்வை நாம் பெற முடியும். அவ்வாறான ஒரு மாற்றம் நிகழ வேண்டும் எனில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு அதற்கு உகந்த ஒரு கொள்கைத் திட்டத்தை வரைய வேண்டும். 

அத்தகைய ஒரு கொள்கை வகுப்பானது ஒருசில தனிநபர்களால் மட்டும் செய்யப்பட முடியாதது. ஒரு சில தனிநபர்கள் வகுக்கின்ற கொள்ளைகள் சில சமயங்களில் வெற்றியளிக்கலாம்; சில சமயங்களில் தோல்வியையும் தழுவலாம். ஆனால், அனுபவமும் அறிவும் உடைய பலரது கருத்துக்கள் உள்வாங்கப்பட்டு வகுக்கப்படுகின்ற கொள்கைகள் தோல்வி அடைவதற்கான சந்தர்ப்பங்கள் மிகவும் அரிது. தமக்கு மட்டுமே எல்லாம் தெரியும் என்ற நம்பிக்கையுடனும், தமக்கு மட்டுமே எல்லா வல்லமைகளும் உண்டு என்ற சிந்தனையுடனும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிலுள்ள ஒருசிலர் செயற்படக்கூடாது. தமிழ் தேசியக் கூட்டமைப்பானது – தமிழ் மக்களின் அரசியலோடு தசாப்த காலங்களாகப் பின்னிப்பிணைந்திருக்கும் ஐந்து கட்சிகளைக் கொண்ட ஒர் அரசியல் அமைப்பு. தத்தமக்கெனத் தனித்துவமான அனுபவங்களையும் தனித்துவமான அறிவுகளையும் கொண்ட பலர் இந்தக் கட்சிகளின் பிரதிநிதிகளாக இருக்கின்றார்கள். 

ஒருவருக்குத் தெரிந்த பல விடயங்கள் இன்னொருவருக்குத் தெரியும் என்றில்லை அவருக்குத் தெரிந்த பல விடயங்கள் அடுத்தவருக்குத் தெரியும் என்றில்லை. அதனால் - தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கான நேர்த்தியான ஒர் உள்நாட்டு மற்றும் வெளியுறவுக் கொள்கை வகுக்கப்படும் போது - இவர்கள் எல்லோருடைய அறிவும் அனுபவமும் உளப்பூர்மாக உள்வாங்கப்படும் போது - நிச்சயமாக அந்தக் கொள்கை உருவாக்கம் வலுவானதாகவே அமையும். இத்தகைய நீண்ட அனுபவமும் பட்டறிவும் உள்ளவர்களது சிந்தனைகளை உதாசீனம் செய்துவிட்டு ஒருசிலர் மட்டும் வகுக்கும் கொள்கைகள் வெற்றியளிக்காது என்பதும், இன்றுவரை பெரிய வெற்றிகள் எதனையும் அது தரவில்லை என்பதுமே யதார்த்தம். கூட்டமைப்பு என்பது கூட்டிணைந்து இயக்கும் ஒரு கூட்டணியாகவே இருக்க வேண்டும். 

கொள்கை வகுப்பில் ஒருசிலர் மட்டும் மேலாதிக்கம் செலுத்தும் ஒரு அமைப்பாகவோ, அல்லது முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளில் ஒருசில கட்சிகள் மட்டும் முன்னிலைப்படுத்தப்படும் ஓர் அமைப்பாகவோ இது இருக்கக் கூடாது. அதற்காக எமது மக்கள் தமது பிரதிநிதிகளாக எம்மைத் தேர்ந்தெடுக்கவும் இல்லை. இன்று, நாம் இங்கே இந்தச் செயலகத்தைத் திறந்திருப்பது ஒரு முன்னுதாரணம். எமது ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் முயற்சியினால் இது திறக்கப்பட்டிருக்கும் போதும், இது ஒட்டுமொத்தமான தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கான செயலகம். அவ்வாறுதான் வாசலில் பெயர்ப்பலகையும் இடப்பட்டிருக்கின்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினரும், எந்த ஒரு மாகாண சபை அல்லது உள்ளூராட்சி மன்ற உறுப்பினரும் இந்தச் செயலகத்தைத் தமது அரசியல் செயற்பாடுகளுக்காகப் பயன்படுத்தலாம். இத்தகைய முன்னுதாரணத்தைக் கொண்டு, கூட்டமைப்பிலுள்ள ஒவ்வொரு கட்சியும் செயற்பட வேண்டும். அப்போதுதான் - தமிழ் தேசியக் கூட்டமைப்பு உண்மையிலேயே மக்கள் எதிர்பார்க்கின்றவிதமான ஒரு கூட்டமைப்பாக நிலைக்க முடியும்  என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment