May 25, 2014

தமிழ் பெண்ணிடம் தாலிக்கொடி அபகரிப்பு!- தெஹிவளையில் சம்பவம்

விீதியில் சென்று கொண்டிருந்து தமிழ் பெண்ணொருவரின் ஐந்தரைப் பவுண் நிறையுடைய தாலிக்கொடியை அபகரித்துச் சென்ற சம்பவமொன்று தெஹிவளைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
கொழும்பின் புறநகர்ப் பகுதியான தெஹிவளைப் பிரதேசத்தைச் சேர்ந்த 56 வயதுடைய குறித்த பெண்மணி நேற்றுக் காலை 09.30 மணியளவில் தெஹிவளை பூட்சிட்டி வர்த்தக நிலையத்திற்குச் சென்று கொண்டிருந்த வேளையில் அவ்வழியே வந்த ஒருவர் மிகவும் சூட்சுமமான முறையில் தாலிக்கொடியை அபகரித்துச் சென்றுள்ளதாக பாதிக்கப்பட்ட பெண்மணி தெரிவித்தார்.
சம்பவம் குறித்து அவர் மேலும் கூறியதாவது,
வீட்டிலிருந்து பூட்சிட்டியை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது அவ்வழியில் வந்த ஒருவர் ஐயோ தங்க நகைகளை போட்டுக் கொண்டு இவ்வழியில் செல்லாதீர்கள். முன்னால் கள்வர்கள் இருக்கிறார்கள். எனவே நகைகளை கழற்றி பையில் போட்டுக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.
உடனடியாக கழுத்திலிருந்த தாலிக்கொடியைக் கழற்றி பணப்பையில் போட முற்பட்ட போது, தாருங்கள் நான் போட்டுத் தருகிறேன் என்று கூறிய அந்த நபர், நகையை எடுத்துக்கொண்டு உள்ளே நகையை வைத்து விட்டேன் என்று பணப்பையை கொடுத்துள்ளார்.
அப்படியே பணப்பையை பெற்றுக்கொண்ட குறித்த பெண்மணி சற்றுத் தூரம் சென்று சந்தேகத்தில் பணப் பையைத் திறந்து பார்த்த போது பையில் தாலிக்கொடி இருக்கவில்லையாம்.
உடனடியாகத் திரும்பிப் பார்த்த போது அந்த நபர் அங்கிருந்து தலைமறைவாகியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட அந்த பெண்மணி தெஹிவளைப் பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதுடன், விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment