July 8, 2016

ஒட்டுசுட்டானில் கைதான முன்னாள் போராளித் தம்பதி பிணையில் விடுவிப்பு!

முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான், சிவநகர் பகுதியில் வைத்து நேற்று கைது செய்யப்பட்ட முன்னாள் போராளி தம்பதியினரை வவுனியா நீதிமன்றம் பிணையில் விடுவித்துள்ளது.
இன்று வவுனியா நீதவான் நீதிமன்ற நீதிபதி எஸ்.லெனின்குமாரின் முன்னிலையில் இருவரும் முன்னிலைப்படுத்தப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 
குறித்த இருவரையும் தாம் கைதுசெய்யவில்லை என வவுனியா பொலிஸார் நேற்றைய தினம் தெரிவித்திருந்த போதிலும், குறித்த முன்னாள் போராளிகளை அவர்களே இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியிருந்தனர். முன்னாள் போரளியென தெரிவித்து அச்சுறுத்தல் விடுவிக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புபட்ட குற்றச்சாட்டில் குறித்த தம்பதியினர் கைதுசெய்யப்பட்டதாக, அவர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி தெரிவித்தார்.

குறித்த தம்பதியினரின் கையடக்கத் தொலைபேசியின் எமி இலக்கம், அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புபட்டுள்ளதால் அவர்களை கைதுசெய்ததாக வவுனியா பொலிஸார் கூறியதாக சட்டத்தரணி தெரிவித்தார். எவ்வாறாயினும் குறித்த தம்பதியினர் பொலிஸாரின் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த சந்தர்ப்பத்திலும் அதே எமி இலக்கம் கொண்ட கையடக்கத் தொலைபேசியிலிருந்து அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்ததாக சட்டத்தரணி மேலும் கூறினார்.

இதனடிப்படையில் குறித்த முன்னாள் போராளிகளான தம்பதியினரை பிணையில் விடுதலை செய்ய பொலிஸார் இணக்கம் வெளியிட்டிருந்த நிலையில் அவர்களை நீதிபதி பிணையில் விடுவித்தார். இந்த வழக்கு விசாரணையை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 24 ஆம் திகதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார். எனினும், கிராமசேவகர் உறுதிப்படுத்திய சான்றிதழை சமர்ப்பித்து நாளை முன்னாள் போராளிகள் இருவரையும் அழைத்துச் செல்லுமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment