May 5, 2015

நேபாள நிலநடுக்கத்தில் சிக்கிய 101 வயது முதியவர் 7 நாட்களுக்குப் பின் மீட்பு!

நேபாளத்தில் கடந்த மாத இறுதியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் சிக்கிய 101 வயது முதியவர் 7 நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்டார்.

நேபாள நாட்டை கடந்த 25ம் திகதி பாரிய பூகம்பம் தாக்கியது, இதன் தாக்கம் இந்தியா, திபெத், வங்க தேசம் உள்ளிட்ட அண்டை நாடுகளிலும் உணரப்பட்டது.

இந்த பயங்கர நிலநடுக்கத்தில் தலைநகர் காத்மாண்டு உள்ளிட்ட பல பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டது.

சுமார் 1.60 லட்சம் வீடுகள் தரைமட்டமாகியதுடன் 80 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டனர்

இதுவரை 7300 பேர் பலியாகியிருப்பதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று முன்தினம் (02) நவ்காத் மாவட்டத்தில் இடிபாடுகளில் சிக்கிய பன்ச்சு தமாங் என்ற 101 வயது முதியவர் சிறு காயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்டார்.

உடனடியாக அவர் ஹெலிகொப்பட்டர் மூலம் மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், தற்போது அவரின் உடல் நலம் தேறிவருவதாக தெரிவிவக்கப்பட்டுள்ளது.
ஒரு வாரமாக அவர் இடிபாடுகளில் சிக்கியிருந்ததாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.
இதே போல் சிந்துபால்சவுக் பகுதியிலிருந்து நேற்று 3 பெண்கள் உயிருடன் மீட்கப்பட்டனர் இவர்களில் இருவர் கட்டிட இடிபாடுகளில் இருந்தும், ஒருவர் நிலச்சரிவிலிருந்தும் மீட்கப்பட்டுள்ளார்.

அவர்கள் எத்தனை நாள் இடிபாடுகளில் சிக்கியிருந்தனர் என்பது உடனடியாக தெரியவில்லை. நிலநடுக்கம் ஏற்பட்டு ஒரு வாரம் கடந்து விட்ட நிலையில் இனிமேலும் யாரும் உயிருடன் மீட்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என கூறப்படுகிறது.

இருப்பினும் தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

No comments:

Post a Comment