July 19, 2016

கேட்பது உயிர் பிச்சையல்ல. மறுக்கப்பட்ட நீதி! பேரறிவாளன் டயரி - பாகம் - 09!

வேலூர் சிறையில் 25 ஆண்டுகளைக் கடந்து முடக்கப்பட்டு இருக்கும் பேரறிவாளன், அவரது வழக்கறிஞர் மூலமாகச் சொல்லி அனுப்பிய தகவல்களின் தொகுப்பு இது!


கேட்பது உயிர் பிச்சையல்ல... மறுக்கப்பட்ட நீதி’ என்பதே எனது 25 ஆண்டுகால முழக்கமாக இருக்கிறது. உச்ச நீதிமன்றம் எனது தண்டனையை உறுதி செய்த பின்பும் அதுவே எனது போராட்டமாக இருந்து வருகிறது.

இந்திய நீதியியல் அமைப்பு முறையில் குற்றவியல் வழக்குகளில் விசாரணை நீதிமன்றம், உயர் நீதிமன்ற மேல் முறையீடு, இறுதியாக உச்ச நீதிமன்ற மேல்முறையீட்டு வாய்ப்பு என்ற அடுக்குகள் உள்ளதை அறிவோம்.

எங்கள் வழக்கு ‘தடா’ சட்டப்படியானது என்பதால், உயர் நீதிமன்ற வாய்ப்புப் பறிக்கப்பட்டது என்பதை ஏற்கெனவே கண்டோம்.

உச்ச நீதிமன்றத்தின் இருவர் (அ) மூவர் கொண்ட அமர்வு ஒரு கொலை வழக்கில் தீர்ப்பளித்துவிட்டால், அதுவே இறுதியாகிவிடுகிறது.

தவறானதாக இருந்தாலும்கூட.உச்ச நீதிமன்றமும் தவறிழைத்துவிட்டால் அதனை நேர் செய்ய அரசியல் சட்டத்தில் சீராய்வு மனுத் தாக்கல் செய்யும் வாய்ப்பு (Article 137 - Review of judgements or orders by the supreme court) வழங்கப்பட்டுள்ளது என்றாலும், நடைமுறையில் 0.001 சதவிகித அளவில்தான் சீராய்வு மனு ஏற்கப்படுகிறது.

காரணம், எந்த நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினார்களோ அவர்களேதான் சீராய்வு மனுவினையும் விசாரித்துத் தீர்ப்புத் தருகின்றனர்.

எங்கள் வழக்கில் நான் நிரபராதி என்பதற்கான ஆதாரங்களோடு, உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் உள்ள முரண்களைச் சுட்டிக்காட்டிச் சீராய்வு மனுத் தாக்கல் செய்தபோது, மூன்று நீதிபதிகளும் வழக்குக்குள் செல்லாமல் சீராய்வு மனுவுக்குள்ள எல்லைகள் குறித்து தங்களுக்குள் ஏற்பட்ட முரண்பாடுகளை மட்டும் வெளிப்படுத்தித் தீர்ப்புத் தந்தார்கள்.

நீதிப் பிழையைச் சரி செய்வதற்கான ஒரு வாய்ப்பு எனக் கூறி சீராய்வு மனுவின் எல்லையினை அகலப்படுத்தினார்கள். (to maintain a review petition it has to be shown that there has been miscarriage of Justice. Of course, the expression ‘miscarriae of justice’ is all embracing) இருப்பினும், நீதிபதிகள் எங்களுக்கு எந்தப் பலனையும் வழங்கவில்லை.

பின்னர் 2002-ல் Rupa Ashok Hurraa Vs Ashok Hurra (2002) 4 Sec 388) வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம் தனது அதிகார எல்லையைப் பயன்படுத்தி புதிய சட்ட வாய்ப்பு ஒன்றை ஏற்படுத்தியது.

அதுவே குறை தீர்வு மனு (Curative Petition). சீராய்வு மனு முடிவுக்கு வந்த பின்பு குறை தீர்வு மனுவினைத் தாக்கல் செய்யலாம். ஏற்கெனவே சீராய்வு மனுவில் எழுப்பிய அதே சங்கதிகளைத்தான் இதிலும் எழுப்ப முடியும்.

உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதிகள் மூவர், குறைதீர்வு மனு விசாரணைக்கு உகந்ததா என முதற்கட்ட ஆய்வு செய்து, பின் உகந்தது எனத் தீர்மானித்தால் அந்த மூவருடன் ஏற்கெனவே அந்த வழக்கை சீராய்வு மனுவின்போது விசாரித்த நீதிபதிகளும் இணைந்து 5 நீதிபதிகளாக விசாரித்துத் தீர்ப்பளிப்பர்.

எங்கள் வழக்கின் உச்ச நீதிமன்றச் சீராய்வு மனு 08.10.1999 அன்று முடிவுக்கு வந்து விட்டதால், 2002-க்குப் பிறகு புதிதாகத் தோன்றிய குறை தீர்வு மனு வாய்ப்பினை எங்களால் பயன்படுத்த முடியவில்லை.

தற்போது அனைவரும் அறிவீர்கள், எனக்கு எதிரான ஒற்றை ஆதாரமான ஒப்புதல் வாக்குமூலத்தைப் பதிவுசெய்த ஓய்வுபெற்ற காவல் துறை இயக்குநர் திரு.தியாகராஜன், ஐ.பி.எஸ் அவர்கள் ‘ஆனந்த விகடன்’, 04.12.2013 இதழுக்கு அளித்த பேட்டியில்,



பேரறிவாளன் என்னிடம், ‘சிவராசன் கேட்டுக்கொண்டபடி பேட்டரிகளை வாங்கிக் கொடுத்தேன். ஆனால், அது ராஜீவ் காந்தியைக் கொலை செய்யத்தான் என்பது எனக்குத் தெரியாது’ என்று சொன்னார்.

அந்த வரிகளில், ‘ஆனால், அது ராஜீவ் காந்தியைக் கொலை செய்யத்தான் என்பது எனக்குத் தெரியாது என்று பேரறிவாளன் சொன்ன உயிரான அந்த வார்த்தைகளை எழுதாமல் தவிர்த்துவிட்டேன்”, எனக் கூறியவர் பேட்டியின் இறுதியில்,

ஒரு நீதிப் பிழையைச் சரி செய்ய என் வாக்குமூலம் உதவும் என்றால், அதற்காக எத்தகைய விளைவுகளையும் நான் சந்திக்கத் தயார்” என உளச்சான்றுடன் நிறைவு செய்தார்.

சொன்னதுபோலவே எழுத்துப்பூர்வ வாக்குமூலமும் தந்துவிட்டார்.அவரது ஒப்புதல் வாக்குமூலம் தாமதமானது என்றாலும், 25 ஆண்டுகளாகத் தொடரும் எனது தாயாருடைய நீதிக்கான போராட்டத்துக்கு வலு சேர்த்திருக்கிறது.

ஆயினும், நமது நீதி அமைப்பு முறை ஒரு வழக்கில் நிரபராதி என நிரூபிக்கும் புதிய ஆதாரங்களை இறுதித் தீர்ப்புக்குப் பின் கருத்தில் கொள்வதில்லை.

அரசியல் சாசனம் பிரிவு 32-ன்படி ரிட் மனுத் தாக்கல் செய்யவும் முடியாது. காரணம், ஒரு குற்றவியல் வழக்கின் இறுதித் தீர்ப்பை ஒரு ரிட் மனு மூலம் கேள்வி எழுப்ப முடியாது என்பதே சட்ட நிலை.

புதிதாக உருவான குறை தீர்வு மனு வாய்ப்பிலும் சீராய்வு மனுவில் கூறாத புதிய ஆதாரங்களைத் தாக்கல் செய்ய வழிவகை இல்லாததால், திரு.தியாகராசன் அவர்களின் வாக்குமூலத்தை எப்படிச் சட்டப்படி பயன்படுத்துவது என்ற பெரும் வினா எழுந்துள்ளது.

இந்தச் சமயத்தில், உச்ச நீதிமன்றத் தீர்ப்பு புனிதமானது, கேள்விக்கு அப்பாற்பட்டது எனக் கூறும் அல்லது அந்தப் புரிதலுடன் வாழும் அன்பர்களுக்கு இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 194-ஐச் சுட்டிக்காட்டுதல் பொருந்தும்.

பிரிவு 194 ஐ.பி.சி என்ன சொல்கிறது எனில், மரண தண்டனை பெற்றுத் தரக்கூடிய எண்ணத்தோடு பொய்யான சாட்சியத்தினை அளித்தல் அல்லது உருவாக்குதல், அதன் விளைவால் ஒரு நிரபராதி தண்டனை பெற்று தூக்கிலிடப்பட்டு விட்டால்... (Giving or fabricating false evidence with intent to procure convition of capital offence, if innocent person be thereby convicted and executed).

எனவே, சட்டத்தின் பெயரால் ஒரு நிரபராதி தூக்கிலிடப்படும் வாய்ப்பை இந்தியத் தண்டனைச் சட்டமே அங்கீகரிக்கிறது.

நமது உச்ச நீதிமன்றமே Santhoshkumar Bariyar Vs State of Maharashtra (2009) 6 sec 498) வழக்கில் அதற்குமுன் வழங்கப்பட்ட ராஜீவ் வழக்கு உள்ளிட்ட ஏழு வழக்குகளில் தொடர்புடைய 15 பேருக்கு வழங்கப்பட்ட மரண தண்டனை தவறானது எனத் தீர்ப்பெழுதியது.

அதற்குள் அந்த 15 பேரில் இருவர் தூக்கிலிடப்பட்டுவிட்டனர்.இங்கிலாந்து நாட்டில், இதுபோன்ற நீதிப்பிழைகளைத் தவிர்க்க ராயல் கமிஷன் அளித்த பரிந்துரையின் பேரில் 1995-ம் ஆண்டு Criminal Appeal Act என்ற சட்டம் கொண்டுவரப்பட்டது.

அதன்படி, Criminal Cases Review Commission (CCRC) என்ற தனித்த அமைப்பு ஒன்று நிறுவப்பட்டு நீதிப்பிழை மற்றும் நிரபராதி என்பதாக முறையிடும் வழக்குகள் குறித்த மனுக்களை ஆராய்ந்து, உகந்தவற்றை அந்த நாட்டு மேல் நீதிமன்றத்துக்கு அனுப்பிவைத்துத் தீர்வு காணப்படுகிறது.

அயர்லாந்து நாட்டிலும் நீதிப்பிழையால் ஏற்படும் ஆபத்து குறித்து உணரப்பட்டு Criminal Procedure Act 1993 எனச் சட்டம் இயற்றப்பட்டு இறுதித் தீர்ப்புக்குப் பின் எழுகிற புதிய சாட்சியத்தின் அடிப்படையில் நிரபராதி என நிரூபிக்க மூன்று வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.

அதேபோல், கனடா நாட்டு அரசின் நீதித்துறை சார்பில் Criminal Conviction Review Group (CCRG) என்ற அமைப்பு நிறுவப்பட்டு முறையீடுகள் பெறப்பட்டு, உண்மை இருக்கும் பட்சத்தில் ஆரம்பத்திலிருந்து விசாரிக்கப்படுகிறது.

ஜப்பான் நாட்டில் பிழையான நீதியால் பாதிக்கப்பட்டவர் மட்டுமல்ல, அவர் இறந்தபின் அவரது மனைவி அல்லது வாரிசுகளும் அவரை நிரபராதி என நிரூபிக்கச் சட்டம் இடம் தருகிறது.

அமெரிக்காவில் நீதிப்பிழை குறித்து அனைத்து மாநிலங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டு தனித்தனி சட்டங்கள் உள்ளன. எடுத்துக்காட்டாக, வடக்கு கரோலினா மாநிலத்தில் Actual Innocence Commission என்ற அமைப்பை அந்த மாநில அரசு உண்டாக்கி தீர்வு காண்கிறது.

நார்வே நாட்டில் Norwegian Criminal Cases Review Commission (NCCRC) உள்ளது. மற்றும் பிரான்ஸ், ஆஸ்திரேலியா, இஸ்ரேல், ட்ரினிடேட் மற்றும் பல நாடுகளிலும் நீதிப்பிழையினை அங்கீகரித்து, தீர்வு காண்கின்றன.

நமது நாட்டில் அதுபோன்ற சட்ட வாய்ப்புகள் இல்லை என்பதால், ஏற்கெனவே நான் குறிப்பிட்டதைப்போல் கேகர் சிங் வழக்கில் ஐவர் அடங்கிய உச்ச நீதிமன்ற அரசியல் அமர்வு, ‘‘அரசியல் சட்டப் பிரிவு 72 மற்றும் 161-ன் கீழ் குடியரசுத் தலைவர், மாநில ஆளுநர் ஆகியோர் வழக்கின் சாட்சியங்களை மீளாய்வு செய்து நீதிமன்றத் தீர்ப்புக்கு மாறான முடிவை எடுக்கலாம் - அதிகாரம் உண்டு” என அளித்த தீர்ப்பின் அடிப்படையில் தற்போது திரு.தியாகராசன் அவர்களின் வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டு கடந்த 30.12.2015 அன்று நிரபராதி என விடுதலை செய்யக்கோரி தமிழக ஆளுநருக்கு மனு அளித்துள்ளேன்.

இவையெல்லாம் தற்போது ஏற்பட்டுவிட்ட முன்னேற்றங்கள்.ஆனால், எனது சீராய்வு மனு முடிவுக்கு வந்து விட்ட 8.10.1999-க்குப் பிறகு எனக்கு அன்று இருந்த ஒரே வாய்ப்பு ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவருக்கான கருணை மனு மட்டுமே.

கருணை மனு குறித்த புரிதல் இல்லாத அன்றைய நிலையில் முதலில் அதில் கையெழுத்திடத் தயங்கிப் பெரும் மனப் போராட்டத்துக்கு ஆளானேன்.

கேகர் சிங் தீர்ப்பின் மூலம் விளக்கம் பெற்ற நிலையில் 17.10.1999 அன்று கையெழுத்திட்டுத் தந்த, ஏறத்தாழ 200 பக்கங்கள் அடங்கிய, எனது கருணை மனுவினை மாநில அமைச்சரவையிடம் எந்தவித கருத்தும் கேட்காமல் 27.10.1999 அன்று, 10 நாட்களுக்குள் தள்ளுபடி செய்து மரண தண்டனையை உறுதி செய்தவர் வேறு யாருமல்ல, அன்றைய தமிழக ஆளுநரான உச்ச நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதியரசர் பாத்திமா பீவி.

வலிகள் தொடரும்

No comments:

Post a Comment