June 12, 2016

மட்டு.கும்புறுமூலையில் மதுபானசாலையா? குமுறுகிறார் பிள்ளையான்!

மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கும்புறுமூலை பகுதியில் மதுபான சாலை ஒன்று அமைக்கப்படவுள்ளதாக அறிய முடிகின்றது.


அதனை தடுத்து நிறுத்தவேண்டுமென என கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

கோறளைப்பற்று பிரதேச செயலாளர் மற்றும் பிரதேச சபை செயலாளர் ஆகியோருக்கு கடந்த 8ஆம் திகதி புதனன்று தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியினரால் அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

வர்த்தகமானி அறிவித்தலின்படி மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை உள்ளிட்ட கிழக்கு மாகாணத்தில் சுமார் 82 மதுபான சாலைகளே இருக்க முடியும் என வரையறுக்கப்பட்டுள்ளபோதும், மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் சுமார் 62 சாலைகளுக்கு மேல் உள்ளது.

யுத்தத்தினாலும் இயற்கை அழிவுகளாலும் பெரும் பாதிப்புக்களை சந்தித்து, நாளாந்தம் தமது வாழ்வாதார மீட்சிக்காக போராடிக்கொண்டிருக்கும் இப்பிரதேசத்தில் மதுபான வடிசாலை அமைக்கப்படுமானால் மதுபான விற்பனை விரிவாக்கல் செயற்பாடுகளில் மூலம் மதுபான விற்பனையாளர்களுக்கு அதிகூடிய சலுகைகள் வழங்கப்பட்டு,

மாவட்டத்தின் மதுபான விற்பனையினை இரட்டிப்பாக அதிகரிக்கும் நிலையினைத் தோற்றுவிக்கும்.

இது மட்டக்களப்பு மாவட்ட மக்களை இரவில் வெட்டிய குழியில் பகலில் தள்ளுவதற்கு ஒப்பானதாகிவிடும்.

மதுபானத்தால், கல்வி பாதிப்புக்கள் தொடக்கம் குடும்ப வன்முறை,பாலியல் குற்றச் செயல்கள், கொலை மற்றும் சமூக முறைகேடான நடவடிக்கைகளுக்கு எதிராக பொது அமைப்புக்களும் மக்களும் குரல் கொடுத்துவரும் வேளையில் இன்னும் புதிதாக மதுபான சாலைகளை அமைப்பதால் மேலும் விளைவுகள் ஏற்படும் எனவும்,

இவ் மதுபான சாலை அமைக்கப்படவுள்ள தகவல் உண்மையானதா என தனக்கு, சிறைச்சாலை முகவரிக்கு அறிவிக்குமாறும். சிவனேசதுரை சந்திரகாந்தன் அதில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டு மட்டக்களப்பு சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிவனேசதுரை சந்திரகாந்தன் மேற்படி கடிதத்தில் நீதிபதி முன்னிலையில் ஒப்பமிட்டு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment