June 16, 2016

வித்தியா கொலை வழக்கு ; அதிரடி திருப்பங்கள்!

வித்தியா கொலை வழக்கு தொடர்பான முழுமையான விசாரணை அறிக்கைகள் மற்றும் வழக்கு ஏடுகளை ஆராய்ந்த பின்னரே மரபணுப் பரிசோதனை அறிக்கையில்
குறிப்பிடப்பட்ட விடயங்களை வெளிப்படுத்த முடியும் என ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்ற நீதிவான் வை.எம்.எம்.ரியால் தெரிவித்துள்ளார்.

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கு நேற்று ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. இதன்போது கொலையான வித்தியாவின் சார்பில் சட்டத்தரணி க.சுகாஸ் மன்றில் முன்னிலையானார்.

மாணவி வித்தியா கொலை தொடர்பான மரபணு பரிசோதனை அறிக்கை நீண்ட கால இடைவெளியின் பின்னர் மன்றுக்கு கிடைத்துள்ளது. அதில் உள்ள தகவலின் அடிப்படையில் வித்தியாவை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியவர்கள், கொலை செய்தவர்கள் யாரென அறிய முடிந்ததா? என தகவல் தெரிவிக்கக் கேட்டார்.

சட்டத்தரணியின் விண்ணப்பத்திற்கு ‘ மரபணுப் பரிசோதனை இருப்பினும் வழக்கு விசாரணைகள் தொடர்பான முழுமையான அறிக்கைகள் இன்னமும் மன்றுக்கு சமர்ப்பிக்கவில்லை. இதனால் முழு வழக்கு ஏடுகள் குறித்து ஆராய வேண்டியுள்ளது. இவை அனைத்தும் நிறைவுறும்போதே மரபணு பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்ட விடயங்களை வெளிப்படுத்த முடியும்’ என நீதிவான் ரியால் பதிலளித்தார்.

நீதிவானின் பதிலை தொடர்ந்து வழக்கின் சந்தேகநபர்களில் ஒருவரான சுவிஸ்குமார் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு தப்பிச் சென்றமை தொடர்பில் 21 கேள்விகளுக்கான பதிலுடன் கூடிய விசாரணை அறிக்கையை மன்றுக்கு சமர்ப்பிக்க கோரப்பட்டிருந்தது. அது குறித்த விசாரணையின் நிலை என்ன எனக் கேட்டார்.

இதற்குப் பதிலளித்த நீதிவான் ‘ குறித்த விசாரணை தொடர்ந்தும் இடம்பெறுகிறது. அதன் அறிக்கை விரைவில் மன்றுக்கு சமர்ப்பிக்கப்படும்’ எனத் தெரிவித்தார்.

No comments:

Post a Comment