June 21, 2016

கச்சத்தீவு விவகாரம்! ஆவேசமடைந்த தமிழக முதல்வர்!

கச்சத்தீவு குறித்து தமிழக சட்டமன்றத்தில் கடும் வாதப்பிரதிவாதங்கள் இன்று இடம்பெற்றுள்ளன.


குறித்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்த தமிழக முதலமைச்சர், கச்சத்தீவை மீட்பது குறித்து கேள்வி கேட்பதற்கு தி.மு.க உறுப்பினர்களுக்கு அருகதை கிடையாது என குறிப்பிப்பிட்டிருந்தார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்து தெரிவித்திருந்த அவர், தி.மு.க. ஆட்சியில் கருணாநிதி, முதலமைச்சராக இருந்தபோதுதான் கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது.

1974 மற்றம் 1976ஆம் ஆண்டுகளில் அப்போதைய மத்திய அரசு இந்த ஒப்பந்தங்களை செய்துகொண்டபோது, அவர்களுடைய தலைவர், அன்றைய முதல்வர் என்ன செய்து கொண்டிருந்தார்? அதைத் தடுப்பதற்கு ஏதாவது நடவடிக்கை எடுத்தாரா? அதை எதிர்த்து ஏதாவது போராட்டம் நடத்தினாரா? ஒன்றுமேயில்லையே.

தாரை வார்த்துவிட்டு, இத்தனை ஆண்டுகள் கழித்து, 1991-ல் நீங்கள் பேசினீர்களா இல்லையா என்றால், நான் பேசினேன், ஒரு மாநில அரசின் அதிகார வரம்பு எதுவரை உள்ளது என்பதை, உணர்ந்து, அறிந்து பேசினேன்.

மத்திய அரசு மூலமாக நான் அதற்கான நடவடிக்கைகளை எடுப்பேன் என்று பேசியிருக்கிறேனே தவிர, நான் ஒரு படையைத் திரட்டிக்கொண்டு, கச்சத்தீவை மீட்பேன் என்று பைத்தியக்காரத்தனமாக பேசவில்லை.

இன்றைக்கு இவ்வளவு பேசுகின்ற தி.மு.க. உறுப்பினர்கள் இதற்கு பதில் சொல்லவேண்டும். அன்றைக்கு கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டபோது ஏன் பேசாமல் இருந்தார்கள்?

அன்றைய தி.மு.க. முதல்வர் ஏன் மெளனம் சாதித்தார்? ஏன் அதைக் கொடுக்க அனுமதித்தார்? உச்ச நீதிமன்றம் மூலமாக நடவடிக்கை எடுத்தது நான்.

2008ஆம் ஆண்டு மத்திய அரசை அணுகி, அணுகி, எந்தப் பயனுமில்லை என்று தெரிந்த பிறகு, நான் தனிப்பட்ட முறையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் என்ற முறையில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன்.

அப்போது இங்கே முதலமைச்சராக இருந்தவர் கருணாநிதி. எதிர்க்கட்சியினர் எவ்வளவுத்தான் கூச்சல் போட்டாலும், உண்மைகளை மறைக்க முடியாது.

கச்சத்தீவை தாரை வார்க்கப்பட்டதற்கு தி.மு.க. தான் காரணம். அன்றைய முதலமைச்சர் கருணாநிதிதான் காரணம்.

இன்று மீனவர்கள் படும் அல்லல்களுக்கெல்லாம், இன்னல்களுக்கெல்லாம் காரணம் தி.மு.க.தான். அதை எத்தனை கூச்சல்போட்டாலும் மறைக்க முடியாது.

2008 ஆம் ஆண்டு நான் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தபொழுது அப்போது மத்திய அரசின் சார்பில் அதற்கு கவுன்டர் அபிடவிட் பைல் செய்யப்படவேண்டும்.

அதைப்போலவே உச்சநீதி மன்றத்திலிருந்து தமிழக அரசுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. தமிழக அரசும் ஒரு நோட்டீஸ், கவுன்டர் அபிடவிட் அங்கே பைல் செய்யவேண்டும்.



அந்த நேரத்தில் கருணாநிதி அவர்கள் என்ன சொன்னார் தெரியுமா? மத்திய அரசு என்ன அபிடவிட் பைல் செய்கின்றது என்பதைப் பார்த்துவிட்டு அதன் பின்னர் தமிழக அரசின் அபிடவிட் பைல் செய்யலாம் என்றார்.

இதுதான் கச்சத்தீவை மீட்கும் லட்சணமா? அந்த உணர்வாவது தி.மு.க.வுக்கு இருக்கிறதா? அன்றைய தினம் மத்திய அரசு என்னுடைய வழக்கை தூக்கி எறிய வேண்டும்.

கச்சத்தீவை மீட்க முடியாது. ஏற்கனவே செய்துகொண்ட ஒப்பந்தங்களை ரத்து செய்ய முடியாது. அது முடிந்து போன பிரச்சினை என்று உச்ச நீதிமன்றத்தில் கவுன்டர் அபிடவிட் பைல் செய்தது.

அதே ரீதியில்தான் தமிழக அரசும் அன்றைய தினம் கவுன்டர் அபிடவிட் பைல் செய்தது என்பதை இந்த நேரத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

இதற்கு மேலும் இதைப் பற்றி தி.மு.க.வினர் பேசுவதற்கு அருகதையில்லை என்பதை மீண்டும் அறுதியிட்டு உறுதியாக கூறுகிறேன்.

உண்மையாக கச்சத்தீவை மீட்க வேண்டுமென்ற எண்ணம் தி.மு.க.விற்கு இருந்தால் அவர்களாக நடவடிக்கை எடுக்கவில்லை.

2008ஆம் ஆண்டு, நான் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தபொழுது அப்போது தமிழக அரசு தி.மு.க. தலைமையில் இருந்தது.

தமிழக அரசு தன்னை அதே வழக்கில் இம்ப்லீட் செய்துகொண்டிருக்கலாம் அல்லவா? செய்திருக்க வேண்டாமா? அந்த வழக்கில் தன்னையும் தமிழக அரசு இணைத்துக்கொண்டு இருக்க வேண்டாமா? ஏன் செய்யவில்லை.

அதன் பிறகு நான் மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு 2011ஆம் ஆண்டில் இந்தச் சட்டப்பேரவையில் தீர்மானத்தை நிறைவேற்றி அதன் பிறகு ரெவின்யு டிபார்ட்மென்ட் மூலமாக தமிழக அரசை இந்த வழக்கில் நான் இணைத்திருக்கிறேன்.

அந்தக் காரியத்தை தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது ஏன் செய்யவில்லை. அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி அனைவரும் சம்மதித்து அந்த முடிவின்படிதான் கச்சத்தீவு தரை வார்க்கப்பட்டது என்றால் அதை அவர்கள் ஏற்றுக்கொண்டுவிட்டார்கள் என்று அர்த்தம்.

அப்படியானால் நான் ஏன் மீட்கவில்லை என்று என்னைப் பார்த்து ஏன் கேள்வி கேட்கிறீர்கள். ஆறாவது முறையாக நான் முதலமைச்சராக ஆகியிருப்பது உண்மைதான்.

முதலமைச்சரான நாள் முதல் 1991 முதல் இன்று வரை எனது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து கச்சத்தீவை மீட்பதற்கு என்னால் முடிந்த நடவடிக்கைகளை மாநில அரசின் அதிகார வரம்பிற்கு உட்பட்ட வகையில் நான் செய்துகொண்டுதான் இருக்கிறேன்.

நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டுதான் இருக்கிறேன். ஆனால் இடைப்பட்ட காலத்தில் ஒரே ஒரு ஆண்டுதான் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மத்திய கூட்டணி அரசில் அங்கம் வகித்தது.

அந்த நேரத்தில் தமிழகத்தின் சார்பில் நாங்கள் வைத்த எந்தக் கோரிக்கைகளையும் மத்திய அரசு ஏற்கவில்லை என்பதால்தான் அந்தக் கூட்டணியை விட்டு வெளியேறினோம்.

ஆனால், அந்த ஒரு ஆண்டை தவிர, மற்ற அனைத்து ஆண்டுகளிலும் மத்தியிலே காங்கிரஸ் தலைமையில் கூட்டணி ஆட்சி ஆனாலும் சரி, பி.ஜே.பி. தலைமையில் கூட்டணி ஆட்சி ஆனாலும் சரி, தி.மு.க. அதிலே அங்கம் வகித்தது.

அப்போது நீங்கள் உங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி இவர்களுடைய தலைவர் இங்கேயும் ஆட்சியில் இருந்தார், மத்தியிலும் ஆட்சியில் இருந்தார்.

அப்போது நான் சொல்வதைத்தான் பாரதப் பிரதமர் கேட்கிறார், என்னுடைய ஆலோசனைப்படிதான் பாரதப் பிரதமரே செயல்படுகிறார் என்று பெருமையாக மார்தட்டிக்கொண்டு உங்கள் தலைவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியும் அப்போது ஏன் மத்திய அரசிற்கு அழுத்தம் கொடுத்து, கச்சத்தீவை மீட்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அப்படி அத்தனை ஆண்டுகள் தூங்கிவிட்டு, இப்பொழுது திடீரென்று விழித்துக்கொண்டது மாதிரி சட்டமன்றத்திற்கு வந்து, நீங்கள் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று என்னைப் பார்த்துக் கேட்பதற்கு உங்களுக்கு என்ன அருகதை இருக்கிறது.

கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டபோது பேசாமல் இருந்துவிட்டு, அதன் பிறகு கடிதங்கள் எழுதினோம், நாடாளுமன்றத்தில் பேசினோம், அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டினோம், அங்கே இதைப் பேசினார்கள், அதைப் பேசினார்கள் என்றால், இதையெல்லாம் நாங்களும் செய்திருக்கிறோம்.

நாங்களும் பல கடிதங்கள் மத்திய அரசுக்கு எழுதியிருக்கிறோம். நாங்களும் பல பேச்சுகளைப் பேசி இருக்கிறோம், நாங்களும் பல தீர்மானங்களை நிறைவேற்றியிருக்கிறோம்.

ஒவ்வொரு பிரதமருக்கும் கடிதங்கள் எழுதியிருக்கிறோம். அதற்கெல்லாம் பலன் ஏற்படவில்லை. எந்தப் பலனும் இல்லை என்பதால்தான், உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தேன்.

கருணாநிதியிடம், ‘கச்சத்தீவை பிரதமர் இந்திரா காந்தி இலங்கைக்கு கொடுத்தது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப் போவதாக ஜன சங்கத் தலைவர் வாஜ்பாய் அறிவித்துள்ளாரே, உங்கள் கருத்து என்ன’ என்று கேட்டதற்கு, அதுபற்றி நான் கருத்துத் தெரிவிக்க விரும்பவில்லை என்று பதில் கூறியுள்ளார் கருணாநிதி.

வழக்குத் தொடர முடியும் என்றும், வழக்குத் தொடரப்படும் என்றும், தமிழக மீனவர் பிரச்சினையில் நேரடி தொடர்பில்லாத வாஜ்பாய் அறிவித்த பின்னரும், அதுபற்றி எந்த அக்கறையும் காட்டாமல் தமிழக மீனவர்களுக்கு துரோகம் இழைத்தவர்தான் கருணாநிதி என்பதை மீண்டும் கூறுகிறேன்.

இதைப்பற்றி விவரமாகத் தெரியாத உறுப்பினர்களுக்காக, புதிய உறுப்பினர்களுக்காக சில விவரங்களை இங்கே தெரிவிக்க விரும்புகிறேன்.

ஆர்ப்பாட்டம் நடத்துவது, போராட்டம் நடத்துவது, அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்துவது, பிரதமருக்கு கடிதங்கள் எழுதுவது, இதெல்லாம் ஓரளவுக்குத்தான். அதற்கு எந்தப் பலனுமில்லை. நானும் இவற்றையெல்லாம் செய்து பார்த்துவிட்டேன்.

எந்தப் பலனுமில்லை என்ற பிறகுதான், நீதிமன்றத்திற்குச் செல்வதுதான் ஒரேவழி என்று உச்ச நீதிமன்றத்திற்குச் சென்றேன். ஏனென்றால் இதற்கு ஒரு முன்மாதிரி இருக்கிறது.

1960ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் ஒரு தெளிவான தீர்ப்பைக் கொடுத்திருக்கிறது. அன்றைய மத்திய அரசு பெருபாரி என்னும் பகுதியை அன்றைய இலங்கை பாகிஸ்தானுக்கு தாரை வார்க்க வேண்டுமென்று விரும்பியது.

இப்போது, அது வங்காளதேசம். அன்றையதினம் அது கிழக்கு பாகிஸ்தான் அப்போது இதுபற்றி ஜனாதிபதி கருத்துக் கேட்டதற்கு உச்ச நீதிமன்றம் தெளிவாகத் தீர்ப்பளித்தது. பெருபாரியை கிழக்கு பாகிஸ்தானுக்கு தாரை வார்த்தது செல்லாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ஏன் செல்லாது, ஏனென்றால், இந்தியாவின் ஒரு பகுதியை வேறு நாட்டிற்கு, அயல் நாட்டிற்கு தாரை வார்க்க வேண்டுமென்றால், நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் ஒரு அரசியல் சாசன திருத்தத்தைக் கொண்டுவர வேண்டும்.

ஒரு சட்டதிருத்தம் கொண்டுவர வேண்டும். அந்த திருத்தத்தை கொண்டுவந்து இரு நாடாளுமன்ற அவைகளும் அதை நிறைவேற்றிய பிறகுதான் இந்தியாவின் எந்தப் பகுதியையும் வேறொரு நாட்டிற்கு தாரை வார்க்க முடியும்.

எதிர்க்கட்சித் தலைவராக நான் இந்த அவைக்கு வந்து முன்பு கேட்ட கேள்விக்கு, 2006 ஆம் ஆண்டு அன்றைய தி.மு.க. நிதியமைச்சர் அன்பழகன் எனக்கு என்ன பதிலளித்தார் தெரியுமா?

இதேபோன்ற கேள்வியை நான் கேட்டேன் விவசாயிகளின் அனைத்துக் கடன்களையும் நீங்கள் தள்ளுபடி செய்வீர்களா என்று.

அதற்கு அன்றைய தி.மு.க. நிதியமைச்சர். அன்பழகன் தெரிவித்த பதில் மாமன், மச்சான் வாங்கிய கடன்களை எல்லாம் தள்ளுபடி செய்ய முடியாது என ஏகடியம் பேசினார் என்று சொன்னார் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் எல்லா குற்றச்சாட்டுகளையும் ஆதாரம் இல்லாமல்தான் கூறிக்கொண்டிருக்கின்றார்.

ஏற்கனவே முண்டியம் பாக்கம் சர்க்கரை ஆலையைப் பற்றி பேசினார். அங்கே இப்படி சொன்னார்கள், அப்படி சொன்னார்கள் என்று பல குற்றச்சாட்டுகளைச் சொன்னார்.

வாய்வழியாக சொன்னதாகத்தான் சொல்லுகிறாரே தவிர அவர்கள் அப்படியெல்லாம் சொன்னார்கள் என்பதற்கு என்ன ஆதாரம்? எழுத்தில் கொடுத்தார்களா? அதைப்போலவே இப்பொழுது ஒரு அதிகாரி சில தகவல்களைத் தெரிவித்தார் என்று சொல்லுகிறார்.

அதுவும் வாய்வழியாகத் தெரிவித்தார் என்கிறார். இதற்கெல்லாம் என்ன ஆதாரம்? இப்படி ஆதாரம் இல்லாமல் பேசுவதென்றால் பேசிக்கொண்டே இருக்கலாம்.

ஆகவே ஆதாரம் இல்லாமல் சொன்ன குற்றச்சாட்டுகள் அனைத்தையும் அவைக் குறிப்பிலிருந்து தாங்கள் நீக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment