May 25, 2016

ஸ்டாலினை அவமதிக்கும் எண்ணமில்லை! ஜெயலலிதா விளக்கம்!

பதவியேற்பு விழாவில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கு பின் வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டது
தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா விளக்கம் அளித்துள்ளார்.

தமிழக முதல்வராக ஜெயலலிதா 6வது முறையாக நேற்று பதவியேற்றுக் கொண்டார். சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற விழாவில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர்.

ஆனால் அவர்களுக்கு பின் வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதோடு, திமுக தலைவர் கருணாநிதி கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஸ்டாலினுக்கு இருக்கை ஒதுக்கிய விவகாரம் தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா விளக்கம் அளித்துள்ளார்.

அதில், 'பதவியேற்பு விழாவில் ஸ்டாலின் பங்கேற்றது மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அதற்காக அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கான பகுதியில் ஸ்டாலின் அமர வைக்கப்பட்டுள்ளார். அதாவது விழாவில் பதவி வரிசைப்படி வி.ஐ.பி.களுக்கு இடம் வழங்கப்பட்டது.

ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட இடம், அவருக்கு வருத்தத்தை ஏற்படுத்தியிருந்தால் அது, ஸ்டாலினையோ அல்லது திமுகவையோ அவமானப்படுத்துவதற்காக அல்ல என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

பதவியேற்பு விழாவுக்கு ஸ்டாலின் வருவது குறித்து முன்கூட்டியே தகவல் கிடைத்திருந்தால், வரிசை முறையைத் தளர்த்தி ஸ்டாலினுக்கு முன் வரிசையில் இடமளிக்குமாறு பொதுப்பணித் துறை அதிகாரிகளுக்கு நான் உத்தரவிட்டிருப்பேன்.

மாநில முன்னேற்றத்துக்காக ஸ்டாலினும், திமுகவும் செயல்படுவதற்கு எனது வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment