September 13, 2015

அனைத்துலக போர்க்குற்ற விசாரணைக்கு இந்தியாவின் ஆதரவைக் கோருகிறார் சம்பந்தன்!

ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனித உரிமை பேரவைக் கூட்டத் தொடரில், சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக,
அனைத்துலக விசாரணைப் பொறிமுறையை உருவாக்குவதற்கு இந்தியா ஆதரவளிக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரியுள்ளது.
சிறிலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக உள்நாட்டு விசாரணைகளையே இந்தியா மரபுவழியாக வலியுறுத்தி வரும் நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த வேண்டுகோளை விடுத்துள்ளதாக கொல்கத்தா ரெலிகிராப் செய்தி வெளியிட்டுள்ளது.
சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, புதுடெல்லிக்குப் பயணம் மேற்கொள்வதற்கு மூன்று நாட்கள் முன்னதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது.
சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக அனைத்துலக விசாரணை நடத்துவதற்கு, இந்தியா உள்ளிட்ட அனைத்துலக சமூகத்தின் ஆதரவை தாம் எதிர்பார்ப்பதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், கொல்கத்தா ரெலிகிராபிடம் தெரிவிததுள்ளார்.
“அவர்களால் பரிந்துரைக்கப்படும் உள்நாட்டு விசாரணை உண்மையாக சுதந்திரமானதாக இருக்க முடியாது என்பது எமது கடந்தகால அனுபவம்.
அனைத்துலக விசாரணை தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் கருத்து முரண்பாடுகள் இல்லை.இந்த விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுதியான நிலைப்பாட்டில் இருக்கிறது.
சிறிலங்காவின் புதிய அரசாங்கம் அனைத்துலகத்துடன் இன்னும் கூடுதலாக ஒத்துழைத்துச் செயற்படுகிறது.
ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தெளிவான நிலைப்பாடு, அனைத்துலக விசாரணை அவசியம் என்பதேயாகும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment