September 27, 2015

சர்வதேசத்திடம் நீதி கேட்டு ஏங்கும் தமிழ் மக்கள்!

ஜெனீவா விவகாரமே கடந்த இரு வாரகாலமாக அனைத்து ஊடகங்களிலும் முக்கியத்துவம் மிக்க ஒன்றாக விளங்கி வருகின்றது.
இலங்கையில் இடம்பெற்ற போர் குற்றங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை எவ்வாறான போக்கை கடைப்பிடிக்கப் போகின்றது
என்பதே இதற்கான பிரதான காரணமாகும்.
அந்தவகையில் ஜெனீவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் பேரவையின் 30வது கூட்டத்தொடர் கடந்த 13ம் திகதி ஆரம்பமானது.
அன்றைய தினம் உரையாற்றிய மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹுசைன் இலங்கை விவகாரம் தொடர்பில் தனது நிலைப்பாட்டை அறிவித்தார். அதற்கமைய தனது அறிக்கை கடுமையான தன்மையுடையதாக இருக்கும் என்றும் கூறியிருந்தார்.
அந்தவகையில் இலங்கையில் இடம்பெற்றுள்ள போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச நீதிபதிகள், சட்டத்தரணிகள் மற்றும் விசாரணையாளர்களை உள்ளடக்கிய கலப்பு விசேட நீதிமன்றமொன்றை அமைத்து விசாரணை நடத்த வேண்டுமென ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகம் வெளியிட்டிருந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
அத்துடன் இராணுவப்படைகள் மற்றும் புலிகள் அமைப்பினரால் பாரதூரமான மனித உரிமை மீறல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் மனித நேயத்திற்கு எதிரான குற்றங்கள் இரு தரப்பினராலும் இழைக்கப்பட்டிருக்கலாம் என நம்புவதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
யுத்த காலத்தில் இடம்பெற்றதாகப் பாதிக்கப்பட்ட மக்களால் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டதுடன், அது தொடர்பில் சாட்சியங்களும் முன்வைக்கப்பட்டன.
அந்தவகையில், குரூரமான பாலியல் வன்முறைகள், நீதிக்குப் புறம்பான கொலைகள், சரணடைந்த பலர் காணாமல் போனமை, வெள்ளை வேன்கள் மூலம் கடத்தப்பட்டமை மற்றும் யுத்த சூன்ய பிரதேசத்துக்குள் தஞ்சமடையுமாறு கோரி மேற்கொள்ளப்பட்ட கண்மூடித்தனமான ஷெல்தாக்குதல், மருத்துவமனைகள் மீதான தாக்குதல் என்பவற்றை அடியொட்டி, இது தொடர்பில் சர்வதேச விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு நீதி நிலைநாட்டப்பட வேண்டுமென பாதிக்கப்பட்ட தமிழ் மக்களினால் குரல் எழுப்பப்பட்டு வந்தது.
இந்தப் பின்னணியிலேயே நீதி நிலை நிறுத்தப்பட வேண்டுமென்ற அடிப்படையில் விசேட கலப்பு நீதிமன்றம் தொடர்பிலான ஆலோசனை ஐ.நா. மனித உரிமை பேரவையினால் முன்வைக்கப்பட்டது.
இந்த அறிக்கையில் யுத்தக் குற்றங்களில் ஈடுபட்டவர்கள் தொடர்பிலோ இன அழிப்பு தொடர்பிலோ விசேடமாக எதுவும் கூறப்படவில்லை என தமிழர் தரப்பில் சிறு கிலேசம் இருந்த போதிலும், நீதி விசாரணையை சர்வதேச நீதிபதிகளின் பிரசன்னத்துடன் மேற்கொள்ளப்பட வேண்டுமென்ற ஆலோசனை சற்று ஆறுதலளிக்கும் வகையில் இருந்தது.
அதேவேளை, கலப்பு நீதிமன்றம் அமைத்து விசாரிக்கும் யோசனையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்றிருந்தது. மேலும், ஐ.நா. விசாரணை அறிக்கையின் சிபாரிசுகள், ஐ.நா. மனித உரிமை பேரவையின் 30வது கூட்டத்தொடரில் அரசாங்கம் வழங்கியுள்ள வாக்குறுதிகளை தாமதியாது நிறைவேற்ற வேண்டுமென்று கூட்டமைப்பு கோரிக்கையொன்றையும் விடுத்திருந்தது.
இவ்வாறான சூழ்நிலையில் அமெரிக்காவினால் கொண்டுவரப்படும் திருத்தப்பட்ட பிரேரணை எங்கே இதனை நீர்த்துப்போகச் செய்யுமோ என்ற ஐயப்பாடும் தமிழ் மக்கள் மத்தியில் நிறைந்து போயிருந்ததையும் காணக்கூடியதாக இருந்தது.
மேலும் ரஷ்யா, இந்தியா, சீனா போன்ற நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக நேரடியாகவும் மறைமுகமாகவும் செயற்படுவதன் மூலம் இதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக இருக்குமென்றே எதிர்பார்க்கப்பட்டன.
இந்த நிலையில், பொதுநலவாய சர்வதேச நீதிபதிகளுடன் விசாரணை நடத்துமாறு கோரும் திருத்தப்பட்ட அமெரிக்க பிரேரணை வெளிவந்துள்ளது.
இலங்கை தொடர்பில் அமெரிக்காவினால் வியாழனன்று மாலை முன்வைக்கப்பட்ட குறித்த திருத்தப்பட்ட பிரேரணையில் இலங்கையில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொதுநலவாய மற்றும் சர்வதேச நீதிபதிகள், விசாரணையாளர்கள், சட்டத்தரணிகள் அடங்கிய உள்நாட்டு நீதித்துறை கட்டமைப்புடன் கூடிய விசாரணை பொறிமுறை முன்னெடுக்கப்பட வேண்டுமெனக் கோரும் அமெரிக்காவின் திருத்தப்பட்ட புதிய பிரேரணை ஐ.நா. மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டது.
அத்துடன், இலங்கை விவகாரம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறும் அமெரிக்கப் பிரேரணையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அதுமாத்திரமன்றி அமெரிக்கா கடந்த வாரம் வெளியிட்ட நகல் பிரேரணை வரைவில் காணப்பட்ட பல்வேறு விடயங்கள் நீக்கப்பட்டுள்ளதுடன் குறித்த வரைவில் காணப்பட்ட சில பிரதிகளும் நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கு முன்னதாக அமெரிக்காவின் நகல் வரைவிற்கு இலங்கை தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதுடன், அது இலங்கையின் உள்ளக செயற்பாட்டில் பாரிய எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துமென சுட்டிக்காட்டப்பட்டதாகவும் இதற்கு சீனா, ரஷ்யா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் குரல் கொடுத்த போதிலும் ஐரோப்பிய நாடுகள் பிரேரணையை வலுவிழக்க செய்யக்கூடாது என்பதில் உறுதியாக இருந்ததாகவும் கூறப்படுகின்றது. இவ்வாறான பின்னணியிலேயே அமெரிக்காவின் புதிய திருத்தப்பட்ட பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது.
சர்வதேச நீதிபதிகள், வழக்கு தொடுநர்கள் உட்பட சர்வதேச பிரசன்னத்துடனான விசாரணையொன்று மேற்கொள்ளப்பட வேண்டுமென்பதும், அவ்வாறான விசாரணை ஒன்று நடைபெறாத பட்சத்தில் அதனை தமிழர் தரப்பு எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்பதுமே தமிழ் மக்களினதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதும் ஏகோபித்த கருத்தாக இருந்து வருகின்றது.
ஏலவே, இலங்கை அரசாங்கம் அளித்த எந்தவொரு வாக்குறுதிகளையும் அது நிறைவேற்றவில்லை என்பதுடன் தமிழ் மக்களை முற்றுமுழுதாக ஏமாற்றுவதிலும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணாமல் தட்டிக் கழிப்பதிலுமே கவனம் செலுத்தியதாகவும் குற்றச்சாட்டுக்கள் இருந்து வருகின்றன.
அரசியல் ரீதியான சறுக்கல்களும் தட்டிக்கழிப்புக்களுக்கும் அப்பால் தமிழ் மக்கள் உள ரீதியாகவும் உடல் ரீதியாகவும் பல்வேறு இழப்புக்களை சந்தித்துள்ளதுடன் அதிலிருந்து மீளமுடியாதவர்களாகவே இருந்து வருகின்றனர்.
அந்த வகையில், புரையோடிப்போன தமிழர் பிரச்சினையை இலகுவாகத் தட்டிக் கழித்துவிட முடியாது என்பதை சர்வதேசமும் இலங்கை அரசாங்கமும் உணர்ந்து கொள்வது இன்றியமையாததாகும்.
எவ்வாறிருப்பினும் யுத்தகாலத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நீதி விசாரணையொன்று நடத்தப்பட்டாலும் கூட, அதன் முடிவுகள் குற்றவாளிகளுக்கு உடன் தண்டனையை வழங்குமென எதிர்பார்ப்பதும் முடியாத காரியமாகும்.
அவை வருடக்கணக்கில் செல்வதற்கான வாய்ப்புக்களும் இல்லாமலில்லை. இருந்தபோதிலும் குற்றவாளிகள் இனங்காணப்பட்டு தமிழ் மக்களின் துயரங்களுக்கு நீதி கிட்ட வேண்டுமென்பதே தமிழ் மக்களின் ஒரே எதிர்பார்ப்பாகவுள்ளது.
மாறாக, இப்பிரேரணையை மேலும் நீர்த்துப்போக, செய்யும் வகையிலோ அன்றேல் நீதிக்கான தேடல்கள் தாமதமடையுமானாலோ மேலும் அது தமிழ் மக்களை விரக்தியின் எல்லைக்கே கொண்டு செல்வதாக அமையும்.
இதேவேளை, தமிழ் மக்களின் துயரங்களை துடைத்து அவர்களுக்கு நீதியான ஓர் தீர்வை வழங்க வேண்டிய கடப்பாடு இலங்கை அரசாங்கத்துக்கு உள்ளதென்பதையும் மறந்துபோகக் கூடாது.
கடந்த கால ஆட்சியில் நிலவிய மோசமான நிலைமைகள் இந்த நாட்டு சிறுபான்மை மக்களை மிகவும் வெறுப்படைய செய்ததுடன், ஆட்சி மாற்றத்துக்கும் வழிவகுத்தது.
இந்நிலையில் புதிய அரசு நல்லாட்சியை ஏற்படுத்துவதாக உறுதியளித்து சிறுபான்மை தமிழ் பேசும் மக்களின் முழுமையான பங்களிப்புடன் ஆட்சியை கைப்பற்றியுள்ளது.
இலங்கையில் இடம்பெற்ற யுத்த மீறல்கள் தொடர்பில் சர்வதேச சமூகம் அறிந்துள்ள அளவிற்கு புதிய ஆட்சியாளர்கள் எதுவும் அறியாதவர்களாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.
உள்நாட்டில் நீதி கிடைக்காத காரணத்தினாலேயே சர்வதேசத்திடம் தமிழ் மக்கள் நீதி கேட்டு ஏங்குகின்றனர்.
வெறுமனே அரசியல் ஆதாயங்களுக்கப்பால் மனிதாபிமான கண்ணோட்டத்துடன் நிலைமையை அணுகுவது அவசியமானதாகும்.
தமிழ் மக்களும் இந்த நாட்டின் பிரஜைகள் என்ற வகையில் இவ்விவகாரத்தை புதிய அரசு கையாளுமேயானால் நிகழ்ந்த மனிதாபிமானமற்ற யுத்தமீறல்களுக்கு நியாயம் கிட்டுவதாக இருக்கும்.
இன்றும் கூட காணாமல் போனவர்கள் தொடர்பில் அவர்களின் உறவினர்கள் கண்ணீர் வடித்து வருகின்றனர். விசாரணைகளின்றி தமிழ் இளைஞர்கள் பலர் அரசியல் கைதிகள் என்ற பெயரில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
தமிழர்களின் பூர்வீக நிலங்கள் அரச படைகளினால் கபளீகரம் செயய்ப்பட்டுள்ளன. இவற்றுக்கு கூட நீதி கிட்டாத நிலைமைகளே தொடர்ந்து வருகின்றன.
இவை அனைத்துமே தமிழ் மக்களை விரக்தியடையச் செய்துள்ளதுடன் ஆட்சியாளர்கள் மீது நம்பிக்கையீனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
அரசாங்கம் எந்தவொரு விடயத்திலும் இரு வேறு இனங்களாக பிரித்துப் பார்க்காமல் நீதி நியாயத்தின் அடிப்படையில் செயற்படுவது அவசியமாகும். அவ்வாறு செய்ய முனையும் பட்சத்தில் மாத்திரமே சர்வதேசத்தின் ஆதரவு இலங்கைக்கு கிட்டுவதாக இருக்கும்.
இன்று உலகின் பார்வை இலங்கை மீது வியாபித்து போயுள்ள நிலையில் முன்னைய அரசைப் போன்று இன்றைய அரசும் செயற்படாது உலக ஒழுங்குகளை அனுசரித்து சென்றால் மட்டுமே நாட்டை சீரான பாதையில் முன்னெடுக்கக்கூடியதாக இருக்கும்.
இன்றேல் மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிய கதையாகவே நிலைமைகள் அமைந்துவிடும் என்பதை நினைவுபடுத்த விரும்புகின்றோம்.

No comments:

Post a Comment