September 13, 2015

மனைவி பிரிந்து சென்று மறைந்து வாழ்வதால் தனக்கு தானே தீமூட்டிய கணவன் யாழ். வைத்தியசாலையில் மரணம்!

மனைவி கணவனை விட்டு பிரிந்து சென்று மறைந்து இருந்த நிலையில் ஆத்திரமுற்ற கணவன் தனக்கு தானே தீ மூட்டி எரிந்த நிலையில் யாழ்ப்பாணம், போதனா வைத்தியசாலையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டு இருந்த இளம் குடும்பஸ்தர் சிகிச்சை பலனளிக்காத நிலையில் நேற்று சனிக்கிழமை மரணத்தை தழுவிக் கொண்டுள்ளார்.
இவ்வாறு மரணத்தை தழுவிக் கொண்டவர்  கிளிநொச்சி, ஸ்கந்தபுரம், கண்ணகிபுரத்தை சேர்ந்த இளம் குடும்பஸ்தரான விக்கினேஸ்வரன் சசிகரன் (வயது 29)  என்பவராகும்.
தினமும் மதுபோதையில் வரும் இவர், திருமணம் செய்து ஒரு வருடம் ஆகியுள்ளது. இந்நிலையில் குடித்துவிட்டு வந்து தினமும் சண்டையிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
கடந்த 09ம் திகதி இரவு இவர் குடித்து விட்டு வந்து வழமை போன்று மனைவியடன் சண்டையிட்டு தாக்கியுள்ளார். கணவனின் அடியை தாங்க முடியாத மனைவி தப்பிச் சென்று அயலில் உள்ள காட்டில் மறைந்து இருந்துள்ளார்.
மனைவியை காணாது தேடிய இவர் மனைவியின் தமையன் வீட்டிற்கு தன் மீது மண்ணெண்ணையை ஊற்றி விட்டு சென்று மனைவியை கேட்டுள்ளார். அங்கு மனைவி வரவில்லையென தெரிவிக்கப்பட்டதும் அந்த இடத்திலேயே தனக்குத் தானே தீ மூட்டியுள்ளார்.
உடனடியாக எரிந்தவரை காப்பாற்றி அக்கராயன் வைத்தியசாலைக்கு கொண்டு சென்று, அங்கிருந்து கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றி, பின்னர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கடந்த 10 ம் திகதி மாற்றப்பட்டு சிகிச்சைக்கு உள்ளாக்கப்பட்டிருந்த நிலையில நேற்றைய தினம் மரணத்தை தழுவிக்கொண்டுள்ளார்.
நேற்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மரண விசாரனை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமாரினால் மேற்க்கொள்ளப்பட்ட மரண விசாரணையைத் தொடர்ந்து சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment