July 5, 2015

ராஜபக்ஷ குடும்பத்தில் எவர் ஆட்சிக்கு வந்தாலும் அது தமிழினத்திற்கு எதிரான அடக்குமுறையாகவே அமையும்: சண்.குகவரதன்!

முள்ளிவாய்க்காலில் தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்ஷவின் அரசியலுக்கு ‘சாவுமணி’ அடிக்காவிட்டால் நாட்டில் மீண்டும் இனவாதம் தலைவிரித்து ஆட ஆரம்பித்து விடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பம்பலபிட்டியில்   இடம்பெற்ற மக்கள் கலந்துரையாடலில்  உரையாற்றும்போதே சண்.குகவரதன் இவ்வாறு தெரிவித்துள்ளார். இங்கு அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது:
“கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ஷவை 62 இலட்சம் மக்கள் நிராகரித்துவிட்டனர். அவரை தோல்வியடையச் செய்து செல்லாக் காசாக்கி விட்டனர். ஆனால் இன்று மீண்டும் அரசியலுக்குள் புகுந்து நாட்டையும் மக்களையும் சீரழித்து இனவாத நஞ்சை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி நாட்டை சுடுகாடாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்.
அன்று முள்ளிவாய்க்காலில் தமிழர்களை கொன்று குவித்து தமிழர்களின் வாழ்க்கையை எதிர்காலத்தை அழித்தொழித்த ராஜபக்ஷ அல்ல அக்குடும்பத்தைச் சேர்ந்த எந்தவொரு ராஜபக்ஷவிற்கும் இலங்கை அரசியலில் தலைதூக்க இடமளிக்கக்கூடாது. அரசியலுக்கு வரமுயற்சிக்கும் வெற்றி பெறத் துடிக்கும் ராஜபக்ஷவின் முயற்சியை துடைத்தெறிந்து சாவு மணி அடிக்கவேண்டும். ராஜபக்ஷவின் அரசியல் பிரவேசம் என்பது தமிழ் மக்களின் அடக்குமுறையின் மீள் ஆரம்பமாகவே அமையும்.
பேராசை, ஊழல், மோசடி, திருடர்கள் கூட்டமே மகிந்தவுடன் கைகோர்த்து உள்ளது. இவையனைத்தையும் விட தமிழினத்தை அழித்தொழிக்கும் கொள்கையுடைய இனவாதக் கும்பலே மகிந்த கும்பலாகும். இதற்கு மீண்டும் நாட்டின் அரசியலில் இடம்கொடுப்போமானால் இனவாதம் தலைவிரித்தாடி நாட்டை சுடுகாடாக்கிவிடும்.
எனவே எதிர்வரும் பொதுத்தேர்தலில் மகிந்தவை செல்லாக்காசாக்கி வீட்டுக்கு அனுப்புவதற்கு தமிழ், முஸ்லிம், மற்றும் நாட்டில் தேசிய நல்லிணக்கத்தை நேசிக்கும் சிங்கள மக்களும் ஓரணியில் இணையவேண்டும். மீண்டும் நாட்டிற்கு இனவாதிகள் அவசியமில்லை, மிதவாதிகளே தேவை.”

No comments:

Post a Comment