April 11, 2015

மகிந்தவுடன் மோதிய என்னை பித்தன் என்றனர்! பொன்சேகா!

ராஜபக்ஷ என்ற கற்பாறை மீது மோதி தலையை உடைத்துக்கொள்ள வேண்டாம் என்று பலர் எனக்குப் புத்திமதி கூறினர். 

ஆனால் அதன் பலாபலன் தற்போது கிடைத்துள்ளது என்று ஜனநாயகக் கட்சியின் தலைவர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்தார். கண்டி பெளத்த இளைஞர் சங்க மண்டபத்தில் இடம்பெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.


ராஜபக்ஷ என்ற கற்பாறை மீது மோதி தலையை உடைத்துக்கொள்ள வேண்டாம் என்று பலர் எனக்குப் புத்திமதி கூறினர். ஆனால் அதன் பலாபலன் தற்போது கிடைத்துள்ளது என்று ஜனநாயகக் கட்சியின் தலைவர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்தார். 

கண்டி பெளத்த இளைஞர் சங்க மண்டபத்தில் இடம்பெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.


அவர் மேலும் தெரிவிக்கையில், அபிவிருத்தி ரீதியாக இந்த நாட்டை முன்னேற்றுவதற்கான எந்த ஒரு திட்டமும் கொள்கையும் தற்போதைய அரசுக்குக் கிடையாது. அரசு பதவியேற்று மூன்று மாதங்கள் கடந்து விட்ட போதும் விவசாய கைத்தொழில் கடற்தொழில் தொடர்பான துறைகளில் அபிவிருத்தி ஏற்படுத்தப்படவில்லை. முன்னைய அரசைப் போன்றே வினைத்திறனற்ற வயிற்றுப்பிழைப்பை மையமாகக் கொண்ட அரசாகவே உள்ளது.

மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவது அரசின் தலையாய கடமையாகும். அவ்வாறு நிறைவேற்றாவிட்டால் அது நாட்டுக்குச் செய்யும் பாரிய துரோகமாகும். பிரபலமான இரு கட்சிகளையும் சேர்ந்த ஊழல் பேர் வழிகள் தேர்தல் திணைக்களத்தில் செல்வாக்குச் செலுத்தாமல் இருப்பார்களாயின் நியாயமான ஒரு தேர்தலை எதிர்காலத்தில் எதிர்பார்க்க முடியும். தேர்தல் திணைக்களத்தில் நேர்மையாக இயங்கக் கூடிய ஒரு சூழல் மிகச் சிரமத்திற்கு மத்தியில் ஏற்படுத்தப்பட்டது.

2012 மே மாதம் 21ஆம் திகதி நான் சிறையிலிருந்து விடுதலையான போது இவ்வாறான ஒரு சூழ்நிலை காணப்படவில்லை. என்னுடன் ஏழு எட்டுப்பேர் அளவில் தான் இணைந்திருந்தனர். எனக்கு எதுவித பலமும் இல்லாத போதும் 2015 ஆம் ஆண்டுடன் ராஜபக்ஷ ஆட்சிக்கு முடிவு கட்டுவோம் என்று கூறினேன். 

அப்போது சிலர் என்னிடம் கூறினார்கள் கற்பாறையுடன் மோதி தலையை உடைக்க வேண்டாம் என்று. என்னைப் பார்த்து பித்தன் என்று கூடக் கூறினர். ஆனால் அன்று நான் எதிர்பார்த்தது இன்று நடந்துள்ளது.

நாம் பொதுமக்களுடன் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும். அவர்களது எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டும். அப்போது தான் உண்மையான மனிதாபிமானமுள்ள அரசியல் வாதியாகலாம் என அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment