February 19, 2015

நுகேகொடை கூட்டத்தை கண்டு தமிழ், முஸ்லிம் மக்கள் கலவரமடைய தேவையில்லை !

 நுகேகொடையில் மஹிந்தவாதிகள் நேற்று மாலை நடத்திய கூட்டம் நடைபெற்ற இடம் என் இல்லத்துக்கு மிக சமீபம். உண்மையில் இந்த கூட்டம் நடைபெறுவதற்கு முன்னரும், நடைபெற்ற வேளையிலும் அந்த பகுதியை
நெருங்க அனுமதிக்கப்பட்ட தூரத்தில், அடையாளம் தெரியாத முறையில் நான் வாகனத்தில் உலா வந்து, பிரதான உரைகளை நேரடியாக கேட்டேன். (எதிரி என்ன செய்கிறார் என்பதை இயன்ற வரையில் நேரடியாக தெரிந்து கொள்வது என் கூடப்பிறந்த இயல்பு....ஹஹா...!)
மஹிந்தவுக்கு எதிரான மக்கள் இயக்கத்தில் பத்து ஆண்டுகளுக்கு மேல் இடம்பெற்று உழைத்த எனக்கு இன்றைய நிலவரம் பற்றி மக்களுக்கு எடுத்து கூறும் கடமை இருக்கிறதாக நம்புகிறேன்.
அங்கே வந்த கூட்டம் அதிகபட்சம் சுமார் ஐந்து முதல் ஆறு ஆயிரங்களுக்கு இடையில் என்பது என் அனுமானம். ஊடக படங்களை கண்டு மிரண்டு விட வேண்டாம். நிழல் படங்களில் ஒரு ஆயிரம் பேர் பத்து ஆயிரமாகதான் தெரிவார்கள். இதை கண்டு மகிந்தவுக்கு எதிராக வாக்களித்த தமிழ், முஸ்லிம் மக்கள், “மீண்டும் மகிந்த வந்து விடுவாரோ” என கலவரமடைய தேவையில்லை.
பெரும்பாலான மகிந்தவாதிகள் அங்கு வந்தனர். அத்துடன் கணிசமானோர், ஒரு பரபரப்பு ஆவலுடன், என்ன நடக்கின்றது என்பதை காணவும் வந்தனர் என்பது என் அபிப்பிராயம். இது போன்ற சந்தர்ப்பங்களில் வேடிக்கை பார்க்க கணிசமானோர் வருவது ஆச்சரியமானது அல்ல.
எது எப்படி இருந்தாலும் இது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அல்லது ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு ஆகியவற்றின் உள்விவகாரம். இந்த கூட்டமைப்பில் அல்லது இந்த கட்சியில் ஒரு பிளவு ஏற்பட போவதை இது காட்டுகிறது. அது இந்த நாட்டின் முற்போக்கு மற்றும் ஜனநாயக சக்திகளுக்கு சாதகமானது.
மகிந்த மீண்டும் தலையெடுத்தால் அவரது "ஹிட்-லிஸ்டில்" முதல் மூன்று இடங்கள் (1)மைத்திரி, (2)சந்திரிக்கா (3)நிமல் சிறிபால சில்வா ஆகியோரே இருக்க போகிறார்கள். இது இவர்களுக்கு கண்டிப்பாக தெரியும். எனவே இவர்கள் மகிந்த வருவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள். அது முடியாத நிலையில், கட்சி பிளவு படும். எனவே மகிந்தவை இவர்களிடம் ஒப்படைத்துவிட்டு, வேண்டாத வேலைகளை விட்டுவிட்டு, நாம் எமது வேலையை பார்ப்போம்.
இங்கே நான்;
நாம் என்று சொல்வது தமிழ், முஸ்லிம் மக்களை ஆகும்.
வேண்டாத வேலைகள் என்று சொல்வது, சிங்கள பெளத்த இனவாதிகளை தூண்டி விடும் கருத்துகளை சொல்லி காரியமாற்றுவதை தவிர்ப்பது ஆகும்.
எமது வேலை என்று சொல்வது எதிர்வரும் பொது தேர்தலின் போது அதிகூடிய வாக்குகளை பெற்று பலமடைய நாம் தயாராவது ஆகும்.

No comments:

Post a Comment