December 26, 2014

கடற்புலிகள் சோழர்களுக்குப் பிறகு தமிழர்களின் கடற்படை தளபதி சூசை சிறப்புப் பேட்டி! மீள் பதிவு

சுமார் 500- க்கும் மேற்பட்ட மீனவர்கள் இதுவரை கொல்லப்பட்டிருக்கிறார்கள். தமிழீழ விடுதலைப்புலிகளின் கடற்புலிகள் வலுவாக இருந்த காலத்தில்
தமிழக மீனவர்களுக்கு எந்த அச்சுறுத்தலோ அல்லது பிரச்சனையோ இருந்தது இல்லை. எனவே காலத்தின் தேவை கருதி
கடற்புலிகள் சோழர்களுக்குப் பிறகு தமிழர்களின் கடற்படை தளபதி சூசை சிறப்புப் பேட்டி! (16.01.2006) அன்று பதிவு இணையத்தில் பதிவு செய்யப்பட்டது மீண்டும் இன்று நாம் அதனை மீள் பதிவு செய்கின்றோம்.

தமிழீழக் கடற்படையின் சிறப்பு தளபதி சூசை அவர்களுடனான நீண்ட உரையாடல்:
கேள்வி : உலக விடுதலைப் போராட்டங் களில் எங்குமே கடற்படையொன்று கட்டியெழுப்பப் பட்டிருந்ததாக நாங்கள் அறிந்திருக்கவில்லை. ஆனால் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில்தான் சக்திவாய்ந்த அதி நவீனமான ஒரு கடற்படை கட்டியெழுப்பப் பட்டிருக்கிறது. இந்த சிந்தனை, பலம், எங்கிருந்து பிறந்தது?

பதில்: உலக வரலாற்று நூல்களையும், வரலாற்று நாவல்களையும் வாசித்தறிந்த தலைவரின் மனதில் சோழனின் கடற்படை இடம் பிடித்துக் கொள்கிறது (பண்டைய தமிழ் மன்னர்கள் யாவரும் கடற்படையை வைத்திருந்தபோது பலம் வாய்ந்த கடற்படையாக சோழர் கடற்படையே இருந்தது). எனவே நம் நாட்டின் நிலையினைச் சிந்தித்த பொழுது ஒரு புறம் வலிமைபெற்றால்தான் எமது விடுதலை பூரணமாகும் என்ற உண்மையை உணர்கிறார் தலைவர். எனவே தமிழீழம் என்பதற்கு தனியே தரையை மாத்திரம் மீட்டெடுப்பதல்லாமல் சூழவுள்ள கடலையும் தம் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். ஆகவே எம்மிடம் பலம் வாய்ந்த ஒரு கடற்படை உருவாக்கப்பட வேண்டும் என்ற சிந்தனை அவர் மனதில் எழுகிறது. அத்துடன் போராட்ட ஆரம்ப கட்டத்தில் போராட்டத்தளம் தமிழகமாகவும், போராட்டக் களம் தமிழீழம் என்றும் இருக்கும்போது எமக்கு இருநாடுகளுக்குமிடையே கடற்போக்குவரத்து அவசியம் என்ற தேவையும் எழுகிறது. எனவே 1984 இல் கடற்புலிகள் என்ற அமைப்பை உருவாக்குகிறார். மேலும் பிறநாடுகளுடனான வாணிபத் தொடர்புதான் எமக்கு வலுச் சேர்க்கும் என்பதை உணர்ந்து கப்பல்களை வாங்கி சர்வதேச வாணிபத்தில் ஈடுபட வைக்கிறார். இந்த வகையில் தூரநோக்குடனான தலைவரின் சிந்தனையும் போராட்டத்தின் தேவையும் கடற்புலிகள் என்ற அமைப்பை உருவாக்கும் பலத்தை அவருக்குக் கொடுக்கிறது.

கேள்வி : தமிழீழக் கடற்பரப்பில் நடந்த சண்டைகளை நீங்கள் நேரில் நின்று வழி நடத்தியிருக்கிறீர்கள். கடற்போர் அனுபவங்களைப் பெற்ற மிகப்பெரிய தளபதி நீங்கள். உலக வரலாற்றில் தமிழீழக் கடற்புலிகளின் கடற்சண்டை பற்றியும், அதன் வளர்ச்சி பற்றியும் ஆய்வுகள் வியந்து நிற்கின்றன. அந்த சண்டைகளைப் பற்றிய அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்வீர்களா?

பதில்: கடற்புலிகள் பிரிவை ஆரம்பித்த பொழுது எமது பணி புதிய போராளிகளை பயிற்சிக்குக் கொண்டு செல்லுதலும், பயிற்சி பெற்றவர்களை தமிழீழம் கொண்டு வருதலும் மற்றும் தேவையான வெடிபொருட்களைக் கொண்டு வருதலும் காயமுற்றவர்களைச் சிகிச்சைக்கென இந்தியா கொண்டு செல்லுதலுமாக இருந்தது. இக்கால கட்டத்தில்தான் நாம் ஓட்டிகளை இணைத்துக் கொண்டோம். பின் எமது போராளிகளை ஓட்டிகளாக வளர்த்தெடுத்தோம். இக்காலப்பகுதியில் எம்மிடம் ஆள், படகு, ஆயுதம் வெடிபொருள் வளங்கள் மட்டுப்படுத்தப்பட்டதாகவே இருந்தன. எதிரியின் பாரிய கலங்களுடன் எதிர்த்துப் போரிட முடியவில்லை. எனவே எதிரியின் கண்ணில் படாதவாறு எம் பயணம் தொடர்ந்தது. எதிரியின் பார்வையில் சிக்கினால் அங்கு உயிரிழப்புத்தான். எனவே எதிரியைக் கண்டு ஓடுபவர்களாகவே இருந்தோம். அவ்வாறு எதிரியின் கலங்களுக்குப் போக்குக் காட்டிவிட்டு ஓடித்தப்பிய சம்பவமாக 19.6.1983 சம்பவத்தைக் கொள்ளலாம். கப்டன் பழனி, கப்டன் ரகுவப்பா உட்பட 6 போராளிகள் எஸ்எல்ஆர் உட்பட சிறுரக ஆயுதங்களும் வெடிபொருட்களும் கொண்டு தமிழீழம் திரும்பிக் கொண்டிருக்கையில், வானத்தில் வட்டமிட்ட ஹெலியின் பார்வையிலிருந்து தப்ப முடியாதென எண்ணுகையில் ஹெலி தாக்கத் தொடங்குகிறது. ஓடித்தப்பக் கூட வழியற்ற நிலையில் தம்மிடமிருந்த எஸ்எல்ஆர் ரைபிள்கள் மூலம் ஹெலியை நோக்கிச் சுடுகின்றனர். குறிதவறவில்லை. ஹெலி புகைத்த வண்ணம் திரும்பிச் செல்கிறது. அதேவேளை எதிரியின் கடற்கலங்கள் தாக்கத் தொடங்கவே படகு திரும்பிச் செல்கிறது.


இக்காலப்பகுதியில் சிறீலங்கா கடற்கலங்கள் வடக்குப்பிராந்திய கடலெங்கும் ரோந்து செல்வதுடன், கரையோரமெங்கும் தாக்குதல் நடத்துவதும், மீனவர்கள் மீது தாக்குதல் எனவும் அட்டூழியங்கள் புரிந்து வந்த காலம். தமிழரின் கடலில் சிங்களக் கடற்கலங்கள் எக்காளமிடுவதைத் தடுக்கவென தலைவர் திட்டம் தீட்டுகிறார். மில்லர் நெல்லியடியில் கொடுத்த அடியிலும் பாடம் கற்றுக் கொள்ளாதவர்களுக்கு வல்வைக் கடலிலும் பாடம் புகட்ட எண்ணினார் தலைவர் அவர்கள். 07.10.1990 அன்று வல்வைக் கடலிலே ஆதிக்கம் செய்து வந்த கட்டளைக் கப்பல்களில் ஒன்றான எடித்தாரா மீது இலக்கு வைக்கப்பட்டது. மேஜர் காந்தரூபன், கப்டன் கொலினஸ், கப்டன் வினோத் என்ற கடற் கரும்புலிகள் புதிய சகாப்தத்தைக் கடலில் தொடக்கி வைத்தனர். அதனைத் தொடர்ந்து 05.04.1991அபீதா மீதான தாக்குதலைக் கடற்கரும்புலிகளான கப்டன் ஜெயந்தன், கப்டன் சிதம்பரம் செய்து நின்றனர். இந்நிலையில் தீவகம் முற்று முழுதாக சிறிலங்கா அரசபடைகளின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தமையினால் தீவக் கடலில் அவர்கள் அட்டகாசம் புரிந்தனர்.

இதேவேளை கடற்புலிகள், கடற்புறாவாகி பின் Ôவிடுதலைப்புலிகளின் கடற்புலிகள்Õ எனும் புதிய பெயர் சூட்டப்பட்டது. அதேபோல் புதிய போராளிகளும் கடற்புலிகள் அணிக்குச் சேர்த்துக் கொள்ளப்பட்டு புதிய உத்வேகம் கொண்டது. கண்ணிவெடித் தாக்குதல்கள் இடம்பெற்றன. 22.09.1991-இல் தீவக் கடலில் சீகாட் படகு சிதைக்கப்பட்டது. பின்னர் முதன்முதல் நேரடிக் கடல் தாக்குதலாக 02.10.1991 வள்ளத்தாக்குதல் இடம்பெற்றது. இதிலேயே முதன்

முதல் ஏகே-எல்எம்ஜி என்ற ஆயுதம் எதிரியிடமிருந்து கைப்பற்றப்பட்டது.

பூநகரியை அரச படையினர் கைப்பற்றி முகாம் அமைத்துக் கொள்கின்றனர். யாழ் நகரிலுள்ளோருக்கான ஆனையிறவுப் பாதையும் தடை. மக்கள் பூநகரி-சங்குப்பிட்டி பாதையூடாக பயணத்தை மேற்கொள்கின்றனர். அரசு திட்டமிட்டபடி ஒன்றும் நடக்கவில்லை. இடர்மிகுந்த பாதையிலும் மக்கள் தம் பயணத்தைத் தொடர்ந்ததைப் பொறுத்துக் கொள்ளாத அரசபடைகள் ஆனையிறவிலிருந்தும் பூநகரிக்கு ரோந்து என்ற பெயரில் சென்று பூநகரி-சங்குப்பிட்டி ஊடாகப் பயணம் செய்த மக்களை வெட்டியும், சுட்டும் கொலை செய்தனர். மக்களின் பயணத்திற்குப் பாதுகாப்பளிக்கும் பணியும் கடற்புலிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. கடற்புலிகளின் முதற் தாக்குதற் தளபதி லெப். கேணல் சாள்சின் தலைமையில் பாதுகாப்புப் பணி தொடர்கிறது. பயணம் செய்யும் மக்களைத் தாக்க வந்த கடற்படையினரும் கடற்புலிகளும் சமர் புரிய மக்கள் தம் பயணம் தொடர்கிறது. இவ்வேளையிலே எமது தரப்பிலும் லெப்.கேணல் சாள்ஸ், லெப்.மகான், கப்டன் வேந்தன், கப்டன் சாஜகான், லெப்.மணியரசன். லெப்.சேகர், மேஜர் அழகன் என போராளிகள் வீரச்சாவடைய - எங்கெல்லாம் எமக்குத் தடை வருகிறதோ அவற்றைத் தம் உயிராயுதத்தால் தவிடுபொடியாக்கும் எம் இனிய கரும்புலிகளின் சேவை இடம் பெறுகின்றது.

No comments:

Post a Comment