May 18, 2014

வலியினை வலிமையாக மாற்றுவோம் வாருங்கள் - பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை

அன்பார்ந்த தமிழீழ மக்களே!


மே 18, தமிழ் இன அழிப்பு நாள், இந்நினைவேந்தல் நாளில், சிங்களப் பேரினவாத அரச
படைகளால் ஈவிரக்கமற்ற முறையில் இனவழிப்புக்கு உள்ளாக்கப்பட்ட தமிழீழ தேசத்து எங்கள் மக்களையும்,  களமாடி விதையாகி வீழ்ந்த வீரவரலாற்றின் நாயகர்களான மாவீரர்களையும் நெஞ்சுருக நினைவு கூரும் நாள். 

எங்கள் மக்களினதும், மாவீரச் செல்வங்களினதும் இறுதி இலட்சியம் நிறைவுபெறும்   வரை நீதிக்காகவும் தேசவிடுதலைக்காகவும், தமிழர்களாகிய நாம் உலகின் எந்த மூலையில்  வாழ்ந்தாலும் தொடர்ந்தும் குரல் கொடுப்போம், போராடுவோம் என உறுதி எடுத்துக் கொள்ளும் நாள். 

எம்மக்கள்  மீது இன அழிப்பினை நிகழ்தியவர்களை எமக்குப் பேரிடரைக் கொடுத்தவர்களை அனைத்துலக அறமன்றின் குற்றவாளிக்கூண்டில் நிறுத்தித் தண்டனை பெற்றுக் கொடுத்தே தீருவோம் என சூளுரைக்கும் நாள்!

எம் மக்கள் மீது நிகழ்த்தப்பட்டது இந்த நூற்றாண்டின் மாபெரும் இனப்படுகொலை, நினைத்துப் பார்த்தால் நெஞ்சைப் பதறவைக்கும் பெரும்துயர், குருதியில் தோய்ந்த எம் நிலமும் உயிரப்;பிச்சை கேட்டு குரல் எழுப்பிய எங்கள் உறவுகளின் கதறல்களும், உயிரோடு புதைக்கப்பட்ட பாலகர்களின் பிஞ்சு முகங்களும், பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு வீசி எறியப்பட்ட எங்கள் சகோதரிகளின் உடல்களும் எனக் கொடும் துயர் தரும் காட்சிகள் இந்நாட்களில் எங்கள் மனக்கண்ணில் தோன்றிப் பெரும் வலியைத் தருகின்றது.
ஓர் இனத்துக்கே கூட்டுத்தண்டனை வழங்கியதைப்போல, போரில் உயிர் தப்பிப் பேரவலத்தைச் சந்தித்து நின்ற மக்களை முட்கம்பி வேலிகளுக்குள் அடைத்து மிருகங்களை விடவும் கேவலமாக வதைத்ததை நாம் எப்படி மறக்க முடியும்?

சிங்களத்தின் இனவழிப்பு நோக்கத்தை கண்டும் காணாமல் பாராமுகமாக துணை நின்ற நாடுகளின்    இழிசெயலை நினைத்து மனிதகுலமே வெட்கித் தலைகுனிய வேண்டும்! 

 திட்டமிட்ட இனவழிப்புப் போரின் நோக்கம் நிறைவேற்றப்பெற்று ஐந்து ஆண்டுகள் கழிந்து விட்ட நிலையிலும் சிங்கள தேசம் மீதமுள்ள தமிழர்களையும் அழித்தொழிக்கும் தன் எண்ணத்தை நிறைவேற்றும் தன் வழித்தடத்தில் இருந்து இம்மியும் விலகிவிடவில்லை. தமிழர் நிலத்தின் மீது இராணுவ ஆக்கிரமிப்புச் செய்வதும், அவர்களது வாழ்வினை வளத்தினை சூறையாடுவதிலும், பண்பாட்டுச் சீரழிவினை ஏற்பத்தி தமிழர் அடையாளங்களை அழிப்பதிலும், இலங்கைத்தீவு முழுவதுமே சிங்களர்க்கு மட்டுமே உரிய சிங்கள பௌத்த நாடாக மாற்றும் முயற்சியிலும் அது தனது கவனத்தைக்குவித்துச் செயற்படுகின்றது. 

நல்லிணக்க நோக்கம் என்பது அதற்குத் சிறுதுளியேனும் கிடையாது. தமிழரினது இனப்பிரச்சனைக்கான சிங்கள அரசின் தீர்வு என்பது இலங்கைத்தீவில் இருந்து தமிழர்களை ஒட்டு மொத்தமாக அழிப்பதேயாகும்!
 
அண்மையில் சிங்கள இனவாத அரசுக்கு அடியாளாகச் செயற்படும் தேசபற்றுள்ள தேசிய இயக்கத்தின்  தலைவர் குணதாச சமரசேகர ' வடக்கில் அனைவரும் புலிகளே, அனைத்துப் புலிகளையும் கொன்று குவிக்க வேண்டும் " என்றார். புலிகளுக்கு எதிரான போர் எனக்கூறி இனவழிப்பை மேற்கொண்டது போல மிச்சமுள்ள தமிழர்களையும் அழித்தொழிக்கும் நோக்கத்தை இக்ககருத்து ஐயம் திரிபற எடுத்துரைக்கிறது.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்விற்காக ஏற்றிய சுடரினை காலால் மிதித்து அணைக்கும் காட்டு மிராண்டிகளிடம் இருந்தா நல்லிணக்கத்தை எதிர்பார்ப்பது? உயிரிழந்தவர்களை நினைத்துப் பார்பதற்கே உரிமைதர மறுக்கும் சிங்கள இனவாத அரசு தமிழர்க்கு வேறு என்ன உரிமையினைத் தந்துவிடப்போகிறது? சிங்கள அரசினை வழிக்குக் கொண்டு வரவேண்டுமென்றால் எமக்குள் இருக்கும் வலியினை 'வலிமையாக" நாம் மாற்றியே ஆக வேண்டும்.

பல்கலைக்கழகத்திற்கு மூடுவிழா, ஆலயவழிபாட்டுக்குத் தடை என இலங்கைத்தீவின் பொது ஆட்சி முறையில் இருந்து தனியாகத் துண்டிக்கப்பட்டு, தமிழர் தாயகப்பகுதி இராணுவ சர்வாதிகார இன ஒடுக்குமுறை ஆட்சிக்குள்  உள்ளாக்கப்பட்டுள்ளது.

உலகத்தமிழினமே பயங்கரவாத நோக்கம் கொண்ட இனம் என முத்திரை குத்தி அனைத்துலக சமூகத்திடம் இருந்து தமிழர்களைத் தனிமைப்படுத்திவிட சர்வதேச மட்டதிலÊ தீவிர பரப்புரையை சிங்கள அரசு       முடுக்கிவிட்டுள்ளது. இதுவரை காலமும் போருக்குச் செலவிட்டு வந்த பெரும் பகுதிப் பணம் புலம் பெயர் தமிழர்களின் செயற்பாடுகளை முடக்குவதற்காகச் செலவழிக்கப்படுகின்றது. இந்நோக்கங்களின் ஒருபகுதியே புலம் பெயர்அமைப்புகள் மீதான தடையாகும் எனவே ஏற்படக்கூடிய ஆபத்தினை உணர்ந்து உலகத்திமிழினம் ஒன்றுபட்டு நின்று சிங்கள அரசினது நோக்கங்களை முறியடிக்க வேண்டும்.

சர்வதேச அரங்கில் சிங்கள தேசம் தோல்விகளைச் சந்திக்கத் தொடங்கியுள்ளது. அதன் மீதான அவநம்பிக்கை கொள்ளும் போக்கும் தமிழர்களின் நியாயப்பாடுகளைப் புரிந்து கொள்ளும் நிலையும் தோன்றியுள்ளது. சர்வதேச புவியல் சார் அரசியலும் தமிழர்களுக்குச் சாதகமான புள்ளியைத் தொட்டு நிற்கின்றது. மீண்டும் தமிழர்கான காலம் துளிர்விடத் தொடங்கியுள்ளது. இந்திய அரசியலில் ஏற்பட்டிருக்ககூடிய ஆட்சி மாற்றம், ஈழத்தமிழர்கள் குறித்த புதிய அணுகுமுறை ஏற்படும் என்னும் நம்பிக்கையை தமிழர்கள் மத்தியில் உருவாக்கியுள்ளது.

அறப்போராட்டத்திலும்  சரி ஆயுதப் போராட்டத்திலும்  சரி எமது  விடுதலைப்போர் உலக சிகரத்தை      எட்டியிருக்கின்றது. 2009 இல் ஆயுதப்போராட்டம் மௌனித்ததன் பிற்பாடு சனநாயக வழிமுறையினூடாக சர்வதேச ஆதரவினைப் பெற்று எமது விடுதலைப் போராட்டத்தை முன்னகர்த்திச் செல்லும் பொறுப்பு உலகத்தமிழினத்திடம் குறிப்பாக இளைய தலைமுறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இன்று சர்வதேச மயப்படுத்தப்பட்டுள்ள எமது விடுதலைப் போராட்டம் ஒரு புதிய வளர்ச்சி நிலையைபத்தொட்டுள்ளது.

சிங்கள பேரினவாதமானது தமிழினத்தின் தேசிய ஆன்மாவில் விழுத்திய ஆழமான வடுக்கள் ஒரு போதும் மாறப்போவதில்லை. எமது வலியினை வலிமையாக்கி தொடர்ந்தும் போராடுவோம் என இந்நினைவேந்தல் நாளில நாம்; உறுதி எடுத்துக்கொள்வோம்;. தாயக விடுதலை என்னும் இறுதி இலட்சியத்தை நாம் அடைந்தே தீருவோம்!


தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்!


ஊடகப்பிரிவு
பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை

No comments:

Post a Comment