May 7, 2014

யாழ்.பல்கலைக்கழக சமூகத்திற்கு மிரட்டல்!! பின்னணியில் இராணுவ புலனாய்வு!

யாழ்.பல்கலைக்கழக சமூகத்திற்கு இலங்கை இராணுவப் புலனாய்வுப்பிரிவு மீண்டும்
கொலை அச்சுறுத்தலை விடுத்துள்ளது. முள்ளிவாய்க்கால் பேரவலத்தை நினைவு கூருவதை தடுக்க பல்கலைக்கழகத்தை குறித்த காலப்பகுதிக்கு நிர்வாகம் இழுத்து மூடியுள்ளது. இதற்கெதிராக பல்கலைக்கழகத்தினுள்ளே கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனையடுத்தே அவ்வாறு குரல் கொடுக்கும் தரப்புக்களிற்கு எதிராக மிரட்டலை அரச புலனாய்வு கட்டமைப்பு விடுத்துள்ளது.




அம்மிரட்டலில் பேராசிரியர்கள், மாணவர் ஒன்றியங்களின் தலைவர்கள் ஆகியோர் பயங்கரவாதச் செயற்பாடுகளை முன்னெடுக்கின்றனர் என்றும் அவர்களுக்கு இறுதி எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டு துண்டுப்பிரசுரங்கள் பல்லைக்கழக வளாகத்திற்குள் ஒட்டப்பட்டும், வீசப்பட்டும் உள்ளது. பேராசிரியர்கள் மற்றும் மாணவர் ஒன்றியங்களின் தலைவர்கள் ஆகியோரை அச்சுறுத்தும் வகையில் அவர்களுடைய பெயர்கள் குறிப்பிடப்பட்டு இந்த அநாமதேய துண்டுப்பிரசுரங்கள் வெளியாகியமையால் அனைத்துத் தரப்பினர் மத்தியிலும் அச்சவுணர்வு ஏற்பட்டுள்ளது.
'மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்க அனுமதிக்க முடியாது' என்று தலையங்கம் இடப்பட்டிருந்த மேற்படித் துண்டுப்பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டிருந்தவை வருமாறு:- 

அழிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளை யாழ்.பல்கலைக்கழகம் மீண்டும் புதுப்பிக்க முயற்சிகள் எடுத்து வருகின்றது. பேராசிரியர்களின் வழிநடத்தலின் கீழ் மாணவர் ஒன்றியங்களின் தலைவர்கள் முன்னெடுக்கும் செயற்பாடுகள் இவ்வாறான பயங்கரவாதத்தை மீண்டும் உருவாக்கும் செயற்பாடுகளாக அமைகின்றமையை அவதானிக்க முடிகின்றது. இவ்வாறான செயற்பாடுகளுக்கு இடமளிக்கப்படமாட்டது. எனவே பேராசிரியர்கள், மாணவர் ஒன்றியங்களின் தலைவர்கள் ஆகியோர் இதனை ஓர் எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ள வேண்டும். இல்லையேல் உங்களுடைய உயிருக்கு நாங்கள் உத்தரவாதம் வழங்க முடியாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 
ஏற்கனவே பெயர் குறிப்பிட்டு பல்கலைக்கழக சமூகத்தினை சேர்ந்த சிலருக்கு கொலை அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment