May 19, 2014

வடக்கின் வசத்தத்தின் கீழான மின்சாரத்தை வழங்குமாறு கோரி மாங்குளம், பனிக்கன்குளம் மக்கள் கோரிக்கை.

மாங்குளம், பனிக்கன்குளம் மக்கள் தமது கிராமத்திற்கு வடக்கின் வசத்தத்தின் கீழான மின்சாரத்தை வழங்குமாறு கோரி வவுனியாவில் அமைந்துள்ள வடக்கின் வசந்தம்
மின்சாரசபை பொறியியலாளர் திருமதி. மைதிலி தயாபரனிடம் மகஜர் ஒன்றினை கையளித்துள்ளனர்.

மாங்குளம், பனிக்கன் குளம் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் இன்று திங்கட்கிழமை வவுனியா வைரவபுளியங்குளம் பகுதியில் அமைந்துள்ள மின்சார சபையின் வடக்கின் வசந்தம் அலுவலகத்தின் முன்னால் அமைதியான முறையில் ஒன்று கூடி தமது கிராமத்திற்கு மின்சாரம் வழங்குவது தொடர்பில் உறுதிமொழி வழங்குமாறு கோரி நின்றனர்.

இதன்போது அவ்விடத்திற்கு வந்த பொறியிலாளர் திருமதி மைதிலி தயாபரன் குறித்த கிராம மக்களுடன் கலந்துரையாடியதுடன், அடுத்த மாத இறுதிக்குள் மின்சாரம் வழங்கப்படும் என்று உறுதியளித்ததுடன் மக்களால் வழங்கப்பட்ட மகஜரையும் பெற்றுக் கொண்டார்.

இது குறித்து அக் கிராம மக்கள் தெரிவிக்கையில், யுத்தம் முடிவடைந்து நாம் மீள்குடியேறி மூன்று வருடங்கள் முழுமையாக கடந்துவிட்டது. ஆனால் எமது கிராமத்திற்கான மின்சாரத்தை வழங்குமாறு நாம் பலதடவை கோரிய போதும் வழங்குவதாக உறுதியளித்தனர். ஆனால் வழங்கவில்லை.

2013 ஆம் ஆண்டு எமது கிராமத்திற்கான மின்சாரத்தை வழங்குமாறு வர்த்தக கைத்தொழில்துறை அமைச்சர் றிசாட் பதியூதீனிடம் நாம் கேட்ட போது, மின்சாரத்தை வழங்குமாறு வடக்கின் வசந்த பிரதம பொறியிலாளருக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தினார்.

இதனையடுத்து கடந்த ஆண்டு 8ஆம் மாதத்திற்கு முன்பாக மின்சாரம் வழங்குவதாக பிரதம பொறியிலாளர் உறுதியளித்த போதும் இன்று வரை வழங்கவில்லை. இதனால் இன்று இறுதியாக இந்த மகஜரை கையளித்துள்ளோம் எனத் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment