August 18, 2016

இரட்டை பிரஜாவுரிமையும் அதன் பின்னாலுள்ள சதியும்! புலம்பெயர்ந்தவர்களுக்கான உளவியல் போர்!!

இலங்கையில் நீண்ட காலம் நிலவிய கொடிய யுத்தம் நிறைவுக்கு வந்து ஏழு வருடங்கள் பூர்த்தியாகியுள்ளது. யுத்தம், குண்டுவெடிப்பு, ஷெல் வீச்சு, உயிரிழப்புகளின் கணப்பீடுகள் என்ற சொற்பிரயோகங்கள் மாறி, நல்லிணக்கம், சமாதானம் என்ற வார்த்தைகள் உயிர் பெற்றுள்ளன.


இரத்தம் தோய்ந்த நிலங்களில் வசந்தங்கள் வீசுவதாக மாயை. பிணக்குவியல்களின் மீது கொண்டாட்டாங்கள், சிறுவர்களின் சடலங்கள் மீது நல்லிணக்க பூங்காங்கள். அங்கு போர் நடைபெற்றதற்கான எந்தவித தடயமும் இல்லை. இலங்கை அரசாங்கத்தின் எதிர்பார்ப்புக்கு ஏற்றாற் போல் எல்லாம் மாறி விட்டது. ஆனால் தமிழினம் மட்டும் இன்றும் அனாதைகளாய், குடிசைகளிலும், நலன்புரி நிலையங்களிலும் அடுத்த வேளை உணவுக்காக போராடிக் கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் சமாதானம் ஏற்பட்டு விட்டது. இனங்களுக்கிடையில் நல்லிணகம் ஏற்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. சர்வதேசமே வா, முதலீடுகளை கொட்டு என இலங்கை அரசாங்கம் கூவிக் கொண்டிருக்கிறது. அதனை சில நாடுகள் ஏற்றாற் போல் தமது நிலைப்பாடுகளை மாற்றி, ஒத்துழைப்பு வழங்கவும் தயாராகி வருகிறது.

இது மட்டும் இலங்கை அரசாங்கத்திற்கு போதுமானதாக இருக்குமா, இதனுடன் போராட்டம் முடிந்து விட்டதா என்று பார்த்தால் சமகால அரசாங்கத்திற்கு பாரிய நெருக்கடியாக புலம்பெயர் நாடுகளிலுள்ள தமிழர்கள் உள்ளனர்.

புலம்பெயர் நாடுகளில் தமிழர்கள் கொண்டுள்ள பலமும், அந்நாட்டுடான வலுவான உறவும் இலங்கை அரசாங்கத்திற்கு பெரும் தலையிடியை ஏற்படுத்தும் விடயமாகவே உள்ளது.

அந்நாட்டு அரசாங்கங்களுடன் தமிழர்கள் கொண்டுள்ள உறவை எவ்வாறு சிதறடிப்பது என்று யோசித்த இலங்கை அரசாங்கம், இரட்டை பிரஜாவுரிமை என்ற அஸ்திரத்தை ஆயுதமாக பயன்படுத்த தலைப்பட்டுள்ளது.

இலங்கையில் சமாதானம் நிலவும் நிலையில் புலம்பெயர் தமிழர்களை நாட்டுக்கு வருமாறு பகிரங்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தற்போது இலங்கைக்கு சுற்றுலா செல்லும் புலம்பெயர் தமிழர்கள் இரட்டை பிரஜாவுரிமையை பெற்றுக்கொள்ளவதற்கான விண்ணப்பங்களை பதிவு செய்துள்ளனர்.

புலம்பெயர் நாடுகளிலுள்ள பெருமளவான தமிழர்கள் இலங்கையில் வாழ முடியாது, உயிர் அச்சுறுத்தல் உள்ளது என்ற கோரிக்கையின் அடிப்படையிலேயே புகலிடம் கோரி அகதி அந்தஸ்தும் பெற்றுக் கொண்டனர்.

இந்நிலையில் இலங்கையில் இரட்டை பிரஜாவுரிமைய பெற்றுக்கொள்ள விரும்பினால், அங்கு சமாதானம் நிலவுவதை உறுதி செய்வதுடன், எந்தவித பிரச்சனையும் இல்லையென்ற தோற்றத்தையே உலக நாட்டுக்கு தெரியப்படுத்துவதாக அமையும்.

இதனையடுத்து இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கையை ஏற்று பெருமளவான தமிழர்களை சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்பக்கூடிய சட்டங்களை உலக நாடுகள் மேற்கொள்ள வாய்ப்புள்ளது. இதனூடாக புலம்பெயர் நாடுகளிலுள்ள தமிழர்களை பலத்தை சிதைத்து, அவர்களை நாட்டுக்கு கொண்டு வரும் இலங்கை அரசின் நோக்கம் வெற்றி பெறும்.

இதன்மூலம் போர்க்குற்றம் தொடர்பாக சர்வதேசத்தின் அழுத்தம் குறையும், வெளிநாடுகளிலுள்ள தமிழர்களின் சொத்துக்கள் அனைத்தும் இலங்கையை வந்தடையும். தமிழர்களின் அரசியல் சார்ந்த போராட்டம் அஸ்தமனமாகும்.

இவ்வாறான நோக்கங்களை அடிப்படையாக வைத்தே இரட்டை பிரஜாவுரிமைய என்ற உளவியல் போரை இலங்கை அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது.

இந்த போரின் மூலம் வெளிநாடுகளில் புகலிடம் கோரி அகதி அந்தஸ்துக்காக காத்திருக்கும் பெருமளவானோர் நேரடியாக பாதிக்கப்படுவர். அவர்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு உடனடியாக இலங்கைக்கு நாடு கடத்தும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும்.

இதன்மூலம் இலங்கை அரசாங்கம் மறைமுகமாக முன்னெடுத்துள்ள உளவியல் போர் பாரிய வெற்றியை பெற்று, தமிழர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறும்...!

No comments:

Post a Comment