July 8, 2016

41 ஊடகவியலாளர்களின் கொலைகள் - விசாரணைக்குழு அமைக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை!

கடந்த காலங்களில் படுகொலை செய்யப்பட்ட அல்லது காணாமல்போன 41 ஊடகவியலாளர்கள் குறித்த விசாரணைகளை முன்னெடுப்பதற்கு குழுவொன்றை அமைக்க வேண்டும் என வடபகுதி ஊடகவியலாளர்கள், ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கோரிக்கை விடுத்தனர்.


யாழ்ப்பாணத்தில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர் சுகிர்தராஜன், திருகோணமலையில் கொல்லப்பட்ட நடேசன் மற்றும் கொழும்பில் கொல்லப்பட்ட தராக்கி சிவராம் ஆகியோருடைய விசாரணைகளையாவது முதலில் ஆரம்பிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரியிருந்தனர்.

 
வடக்கு தெற்கு ஊடகவியலாளர்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் செயற்றிட்டத்தின் கீழ் வடபகுதியிலுள்ள ஊடகவியலாளர்கள் குழுவொன்று தென்பகுதி வந்துள்ளது. இந்தக் குழுவினர் நேற்றையதினம் பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக, பிரதி அமைச்சர் கருணாரட்ன பரணவித்தாரன ஆகியோரை சந்தித்தனர்.

இச்சந்திப்பின் போது வடபகுதி ஊடகவியலாளர்கள் சார்பில் உரையாற்றிய சிரேஷ்ட ஊடகவியலாளர் தயாபரன் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.

ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக பணியாற்றுவதற்கு அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுத்திருக்கும் சூழலுக்கும், தகவலறியும் சட்டத்தை நிறைவேற்றியமைக்கும் அவர் அரசாங்கத்துக்கு நன்றியைத் தெரிவித்தார். வடபகுதியிலிருந்து ஊடகவியலாளர் குழுவொன்று எந்தவித சிரமமுன் இன்றி கொழும்புக்கு வந்துள்ளது.

இதில் 54 ஊடகவியலாளர்கள் முதற்தடவையாக பாராளுமன்றத்துக்கு வந்து சபை நடவடிக்கைகளைப் பார்வையிட்டிருப்பதாக தயாபரன் சுட்டிக்காட்டினார்.

"வடக்கில் வெள்ளைவான் இல்லை. நிம்மதியாகத் தூங்க முடிகிறது. வீட்டில் உள்ளவர்கள் நிம்மதியாக இருக்கின்றனர்" என்றும் அவர் கூறினார். ஊடகவியலாளர்களுக்கு தொழில் ரீதியான பாதுகாப்பையும் உறுதிப்பாட்டையும் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுப்பதுடன், ஆட்சி மாற்றத்தின் பின்னர் ப்ரெடி கமகே மீதான தாக்குதல் உள்ளிட்ட ஐந்தாறு தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

எதிர்காலத்தில் இவை மேலெழும்பாதவாறு கட்டுப்படுத்துமாறும் வடபகுதி ஊடகவியலாளர்கள் கேட்டுக் கொண்டனர். வடபகுதி ஊடகவியலாளர்களின் கோரிக்கை அடங்கிய கடிதமொன்று ஊடகவியலாளர் தயாபரனால் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது. பாராளுமன்றத்துக்கு வருகை தந்திருந்த வடபகுதி ஊடகவியலாளர்கள் கலரியிலிருந்து சபை நடவடிக்கைகளைப் பார்வையிட்டனர். இவர்கள் நேற்றையதினம் கொழும்பில் உள்ள ஊடகநிறுவனங்களுக்கும் விஜயம் மேற்கொண்டனர்.



No comments:

Post a Comment