July 13, 2016

நாமல் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்!அஜித் பி.பெரேரா

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவும், அதன் பின்னரே அவர் கைது செய்யப்பட்டதாகவும் பிரதி அமைச்சர் அஜித் பி.பெரேரா தெரிவித்தார்.


கொழும்பில் இன்று அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு கூறினார்.

தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், நிதிமோசடி விசாரணைப்பிரிவின் விசாரணைகளின் போது 70 மில்லியன் பணத்தை தான் எடுத்துள்ளதை நாமல் ஒப்புக்கொண்டுள்ளார். இதன்பின்னரே அவரை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியதாக அஜித் பி.பெரேரா குறிப்பிட்டார்.

இது பற்றிய விசாரணைகள் கடந்த ஆறு மாத காலங்களாக முன்னெடுக்கப்படுவதாகவும், அதன் பின்னரே இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாகவும் கூறினார்.

எனினும் நாமல் ராஜபக்ஸ Super 7 றக்பி குழுவுக்கே குறித்த பணத்தை செலவு செய்துள்ளதாக கூறினாலும், “Super 7 னுக்காக ஒரு சதம் கூட நாமல் செலவு செய்யவில்லை” என றக்பி விளையாட்டுக்குழுவின் அங்கத்தவர்கள் தெரிவித்தார்கள்.



தொடர்ந்து உரையாற்றுகையில், நிமல் பெரேராவின் வங்கி கணக்கிலேயே குறித்த 70 மில்லியன் பணத்தை கிறிஸ் நிறுவனம் வைப்பிலிட்டதாகவும், ஆனால் அந்த பணத்தை நாமல் எடுத்துள்ளதாகவும் பிரதி அமைச்சர் குற்றம் சுமத்தினார்.

இந்தக் குற்றச்சாட்டை நிமல் பெரேரா உறுதிசெய்துள்ளதாகவும் அறிவித்தார்.

மேலும், நாமல் கைது செய்யப்பட்டவுடன் மகிந்த ராஜபக்ஸ “இப்பொழுது அனைவருக்கும் மகிழ்ச்சியா?” என்ற கேள்வியை முன்வைத்தார். இதற்கு பதிலளித்த பிரதி அமைச்சர் “இதில் யாருக்கும் மகிழ்ச்சியில்லை. உரிய விசாரணைகள், தகுந்த ஆதாரங்கள் இருப்பதாலேயே நாமல் கைது செய்யப்பட்டார்”. நாடு தற்போது சரியான பாதையில் பயனிப்பதாகவும், இப்பொழுதுதான் சட்டம் நிலைநாட்டப்படுவதாகவும் பிரதி அமைச்சர் அஜித் பி.பெரேரா தெரிவித்தார்.

No comments:

Post a Comment