July 8, 2016

பிரபல உதை பந்தாட்ட வீரர் மெஸ்சிக்கு 21 மாத சிறை…!

வரி ஏய்ப்பு வழக்கில், அர்ஜென்டினா கால்பந்து அணியின் கேப்டன் மெஸ்சிக்கு 21 மாத சிறைத்தண்டனையும் 15 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.


ஸ்பெயினை சேர்ந்த பார்சிலோனா அணிக்காக நீண்ட காலமாக விளையாடி வரும் லயனல் மெஸ்சி, கடந்த 2007 முதல் 2009 ம் ஆண்டு வரை, வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. தனது விளம்பர வருவாயை , உள்ளதை விட குறைவாகக் காட்டி, சுமார் 4.1 மில்லியன் யூரோ (இந்திய மதிப்பின்படி ரூ. 60 கோடி ரூபாய்) வரி ஏய்ப்பு செய்ததாக லயனல் மீதும், அவரது தந்தை ஜார்ஜ் ஹார்ஷியோ மீதும் வழக்கு தொடரப்பட்டது.

ஸ்பெயின் நாட்டு நிறுவனங்களுக்கு மெஸ்சியின் படத்தை பயன்படுத்த அனுமதி வழங்கியதால் கிடைத்த வருமானத்தை சுவிட்சர்லாந்து, பிரிட்டன், உருகுவே உள்ளிட்ட நாடுகளில் உள்ள நிறுவனங்களில் இருந்து கிடைத்த வருவாயாக காட்டி, இந்த வரி ஏய்ப்பு நடைபெற்றிருப்பதாக மெஸ்சி மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கு பார்சிலோனா நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

நீதிமன்றத்தில் மெஸ்சி, ‘ தனக்கு எங்கிருந்து எப்படி வருவாய் வருகிறது என்று தெரியாது என்றும், தனது பணப் பரிவர்த்தனைகள் தொடர்பான அனைத்து விஷயங்களையும் தனது தந்தை ஜார்ஜ்தான் கவனித்து வருவதாக’ தெரிவித்தார். இந்த வழக்கில் குற்றச்சாட்டு நிரூப்பிக்கப்பட்டதையடுத்து, மெஸ்சிக்கு 21 மாத சிறைத்தண்டனையும் ரூ. 15 கோடி அபராதமும் விதித்து இன்று தீர்ப்பளித்தது பார்சிலோனா நீதிமன்றம். மெஸ்சியின் தந்தை ஜார்ஜ் ஹார்ஷியோவுக்கும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நீதிமன்றத்தில் மெஸ்சி அளித்த பதில் என்ன?

நீதிபதி: இந்த வழக்கு குறித்து எப்போதாவது உங்கள் வழக்கறிஞர்களிடம் விசாரித்தது உண்டா?

மெஸ்சி: இல்லை…

நீதிபதி: உங்கள் தந்தையிடம் எப்போதாவது ‘வரி முறையாக செலுத்தியிருக்கிறீர்களா’ என கேட்டது உண்டா?

மெஸ்சி: ஒருபோதும் இல்லை.

நீதிபதி: எல்லா ஆவணங்களிலும் கண்ணை மூடிக்கொண்டு கையொப்பமிட்டுள்ளீர்களா?

மெஸ்சி : நான் எனது தந்தையை நம்பியே கையொப்பமிட்டேன். இப்படியாகும் என்று நினைக்கவில்லை.

அண்மையில் கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் சிலி அணியிடம் அர்ஜென்டினா தோல்வி கண்டதையடுத்து, மெஸ்சி சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு பெற்றது குறிப்பிடத்தக்கது. இப்போது மெஸ்சிக்கு சிறைத்தண்டனை அளிக்கப்பட்டிருப்பது அவரது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment